தம்பி அண்ணாமலை.. ஆறாங் கிளாஸ் புத்தகத்தை உட்கார்ந்து படிப்பா.. ஐ.லியோனி கொடுத்த பதில்!
சென்னை: தம்பி அண்ணாமலை, பாடப் புத்தகங்களை உட்கார்ந்து படிக்க வேண்டும் என தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் ஐ.லியோனி கூறியுள்ளார்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, திருச்சியில் ஒரு விழாவில் பேசுகையில், சுதந்திர தினத்தை கருப்பு நாள் எனக் கூறியவர்கள் தமிழ்நாட்டில் தான் இருக்கிறார்கள். ஆங்கிலேய திராவிட கதையை பரப்பும் அரசியல் சதியின் காரணமாக தமிழ்நாட்டைச் சேர்ந்த பல தேசிய சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும் தியாகிகள் ஜாதிய தலைவர்களாக சிறுமைப் படுத்தப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்தார். இதற்கு திமுக எம்பி டி.ஆர்.பாலு காட்டமாக ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில், இதுகுறித்துப் பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, "ஆளுநர் எழுப்பியிருக்கும் கேள்விகள் மிக முக்கியமான கேள்விகள். பல காலமாக தமிழகத்தைச் சேர்ந்த பலர் எழுப்பி வரும் கேள்விகள். தான் தமிழகத்தின் ஆளுநராக வந்தபிறகு, தமிழகத்தில் இருந்து சுதந்திரத்துக்குப் போராடிய வீரர்களின் பட்டியலைக் கேட்டதாகவும், மாநில அரசு அனுப்பிய பட்டியலில் வெறும் 40 பேர்தான் இருந்ததாகவும் கூறியிருந்தார். ஆளுநர் தேடிக் கண்டுபிடித்த பட்டியலில் 6 ஆயிரம் பேர் இருப்பதாக கூறியிருந்தார்.
அவர்களுக்கு தொடர்ந்து மரியாதை அளித்து வருவதாகவும், பொதுவெளியில் அவர்கள் குறித்து பேசி வருவதாகவும் கூறியிருந்தார். தமிழகத்தைச் சேர்ந்த எத்தனை சுதந்திரப் போராட்ட வீரர்களின் பெயர்கள் தமிழ்நாட்டின் பாடப் புத்தகத்தில் இருக்கிறது என்று திமுக அரசு ஒரு வெள்ளை அறிக்கை கொடுக்க வேண்டும்" என்று அண்ணாமலை தெரிவித்தார்.
இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் ஐ.லியோனி, "தமிழ்நாட்டு பள்ளிகளின் பாடப் புத்தகங்களை எடுத்துப் படித்தால் சுதந்திர போராட்ட வீரர்களைப் பற்றி தெளிவாக தெரிந்து கொள்ளலாம். இந்திய சுதந்திர போராட்ட வீரர்கள், தமிழ்நாட்டைச் சேர்ந்த விடுதலை போராட்ட வீரர்கள் பட்டியலும் இருக்கிறது.
பாஜக மாநில தலைவர் தம்பி அண்ணாமலை, 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை உள்ள பாடப் புத்தகங்களை வாங்கி உட்கார்ந்து பொறுமையாகப் படித்தால், அதுவே அவர் கேட்கும் வெள்ளை அறிக்கையாக இருக்கும். தலைவர்கள், சாதி மத பேதமின்றித்தான் செயல்பட்டுள்ளனர். ஆனால், மக்கள் அவர் தங்கள் சாதியை சேர்ந்த தலைவர் என சொந்தம் கொண்டாடி, தங்கள் சாதிக்குள் அடக்கி வைக்கின்றனர். இதில் அந்த தலைவர்களின் மீது தவறு கிடையாது.
சுதந்திர போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவருமான என்.சங்கரய்யா இன்று 101 வயதில் வாழ்ந்து வருகிறார். அவருக்கு 'தகைசால் தமிழர்' விருதை தமிழக அரசு வழங்கியது. அவருக்கு கொடுத்த ரூபாய் 10 லட்சத்தையும் அவர் திரும்ப பொதுப் பணிக்கே அளித்தார். அத்தகைய தன்னலமற்ற தலைவர் சங்கரய்யாவை கௌரவிக்கும் வகையில் டாக்டர் பட்டம் வழங்க ஆளுநர் மறுத்திருப்பது, தமிழக சுதந்திர போராட்ட வீரர்களை அவர் புறக்கணிப்பதற்கு நேரடியான எடுத்துக்காட்டு." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications