அதுதான் நெசம்.. “நான் யாரு தெரியுமா?” எடப்பாடிக்கு வலுவான மெசேஜ் சொன்ன ஓபிஎஸ் மகன்
தென்காசி: அதிமுக நாடாளுமன்ற உறுப்பினராகவே தான் லோக்சபாவில் கலந்துகொண்டு வருவதாகவும், தேர்தல் ஆணையத்தின் கூட்டத்தில் கோவை செல்வராஜ் கலந்துகொள்வார் என்று ஓ.பன்னீர்செல்வம் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் தெரிவித்து உள்ளார்.
ஓ.பி.எஸ். தரப்பின் தொடர் முட்டுக்கட்டைகள், வழக்குகளை கடந்து ஜூலை 11 ஆம் தேதி சென்னையில் அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் பிரம்மாண்டமாக கூடியது.
ஒருபக்கம் அதிமுக தலைமையகத்தில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களிடையே மோதல் வெடிக்க மறுபக்கம், பொதுக்குழுவில் ஜெயலலிதா அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் என்ற தீர்மானம் ரத்து செய்யப்பட்டது.

பொதுச்செயலாளர் இபிஎஸ்
அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அதிமுக பொருளாளராக நியமிக்கப்பட்டார். அதிமுக ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வம், அவரது ஆதரவாளர்கள் வைத்திலிங்கம், ஜே.சி.டி. பிரபாகர், மனோஜ் பாண்டியன், ஓபிஎஸ் மகன்கள் ரவீந்திரநாத், ஜெயபிரதீப் உள்ளிட்டோர் நீக்கப்பட்டனர். அவர்களுக்கு போட்டியாக எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோரை நீக்கினார் ஓ.பன்னீர்செல்வம்.

மக்களவையில் ரவீந்திரநாத் குமார்
அத்துடன், ரவீந்திரநாத் குமாரை அதிமுக எம்பியாக கருதக்கூடாது என்றும் சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதினார். இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் மழைகால கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. அங்கு பேசிய ஓ.பி.ரவீந்திரநாத் குமார், அதிமுக எம்.பி என்றே நாடாளுமன்றத்தின் சன்சாத் டிவியில் குறிப்பிடப்பட்டார்.

தேர்தல் ஆணையம் அழைப்பு
இந்த நிலையில், தேர்தல் ஆணையம் நடத்தும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்க அதிமுகவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், எடப்பாடி தரப்புக்கே அழைப்பு வந்ததாக செய்திகள் வெளியாகின. அதே நேரம் இரு தரப்பினரும் தங்கள் பிரதிநிதிகளை அறிவித்து இருக்கிறார்கள். ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் முன்னாள் எம்.எல்.ஏ. கோவை செல்வராஜ் நியமிக்கப்பட்டு உள்ளார்.

ரவீந்திரநாத் பேச்சு
இந்த நிலையில், தென்காசியில் செய்தியாளர்களை சந்தித்த ஓ.பி.ரவீந்திரநாத், "நாடாளுமன்றத்தில் தொடர்ந்து அதிமுக உறுப்பினராகவே செயல்பட்டு வருகிறேன். அதுதான் உண்மை. தேர்தல் ஆணையம் நடத்தும் அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கான அழைப்பிதழ் எங்கள் தலைமை அலுவலகத்திற்கு வந்துள்ளது. இதில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், கோவை செல்வராஜ் பங்கேற்பார்." என்றார்.












Click it and Unblock the Notifications