ஏரி, பாசன கால்வாயை ஆக்கிரமித்து தனியார் கல்லூரி சுற்றுச்சுவர்..தமிழக அரசு ஹைகோர்டில் தந்த உறுதி
சென்னை: ஏரி, பாசன கால்வாயை ஆக்கிரமித்து தனியார் கல்லூரி சுற்றுச்சுவர் கட்டப்பட்டு இருந்தால், அந்த தனியார் கல்லூரியின் சுற்றுச்சுவர் அகற்றப்படும் என தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இதையடுத்த திருவண்ணாமலை கல்லூரி வழக்கை முடித்து வைத்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவண்ணாமலையைச் சேர்ந்த வழக்கறிஞர் டி.எஸ்.சங்கர் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனுவில் அவர் கூறியிருந்ததாவது:

"திருவண்ணாமலை மாவட்டம் கீழ்நாச்சிப்பட்டு மற்றும் தென்மாத்தூர் இடையே ஏரியும், பாசன கால்வாயும் அமைந்துள்ளன. இந்த தண்ணீர் தான் பல ஆண்டுகளாக அப்பகுதி மக்களின் விவசாய மற்றும் குடிநீர்தேவையை பூர்த்தி செய்கிறது. ஆனால் இந்த ஏரி, பாசன கால்வாயை ஆக்கிரமி்த்து தனியார் பொறியியல் கல்லூரியின் சுற்றுச்சுவர் கட்டப்பட்டுள்ளது. இதனால் இயற்கையாக இருந்த நீர்வழித்தடம் மாறி இருக்கிறது
ஏரி நீரை ஆதாரமாகக் கொண்டிருப்பவர்களுக்கு கடுமையான பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. கல்லூரியின் கழிவு நீரும் ஏரியில் கலக்கிறது. இந்த ஏரி, பாசன கால்வாய் பகுதிக்குள் பொதுமக்கள் யாரும் செல்லமுடியாதபடி கல்லூரி நிர்வாகம் தடை உத்தரவு போட்டிருக்கிறது.
இந்த ஏரி,பாசன கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி கடந்த ஜூன் மாதம் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தேன்.ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே எனது மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதிஎஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ஜி.மகேஸ்வரி ஆஜராகி வாதாடினார். அவர் கூறும் போது, ஏரி பாசன கால்வாயை தனியார் கல்லூரி நிர்வாகம் ஆக்கிரமித்து சுற்றுச்சுவரை கட்டியுள்ளதால் நீர்வழித்தடம் தடைபட்டு, அதை நம்பியிருப்பவர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றார்
அப்போது மாநில அரசு ப்ளீடர் பி.முத்துக்குமார் ஆஜராகி வாதிட்டார். அவர் கூறும் போது, மனுதாரர் குறிப்பிடுவதுபோல தனியார் கல்லூரியின் சுற்றுச்சுவர் ஆக்கிரமிப்பில் இருப்பதாக வட்டாட்சியர் தலைமையிலான குழு களஆய்வு செய்யும்.அப்படி ஆக்கிரமிப்பு இருப்பதாக தெரியவந்தால், ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். தமிழக அரசின் இந்த வாதத்தை ஏற்ற உயர்நீதிமன்ற நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்கள்.












Click it and Unblock the Notifications