இந்தி புகட்டுவது கட்டாயம் எனில்.. ஒழிப்பதும் கட்டாயமே - முதல்வர் முக ஸ்டாலினின் அதிரடி பதிவு
சென்னை: மத்திய அரசின் மும்மொழிக் கொள்கை விவகாரம் தமிழ்நாட்டில் பூதாகரமாக கிளம்பியுள்ள நிலையில், பல்வேறு அரசியல் கட்சியினரும் கண்டனங்களையும், எதிர்ப்புகளையும் பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில், இன்பத்திராவிடத்தில் இந்திமொழியே - நீ இட்டஅடி வெட்டப்படும் இந்திமொழியே என்ற புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் வரிகளை முதல்வர் முக ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் ஒருங்கிணைந்த குழந்தைகள் நல கல்வித் திட்டத்துக்கு ஆண்டுதோறும் மத்திய அரசு சார்பில் நிதி ஒதுக்கப்படுவது வழக்கம். ஆனால், பாஜக அரசு தமிழக பள்ளிக் கல்வித் துறைக்கு வர வேண்டிய 2 ஆயிரத்து 190 கோடியை தராமல் இழுத்தடித்து வருகிறது. இதுதொடர்பாக மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டது.

பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் டெல்லியில் மத்திய பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை சந்தித்து தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறைக்கு வர வேண்டிய நிதி குறித்து பேசினர். ஆனால், புதிய தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால் தான் நிதி தரப்படும் என்று வெளிப்படையாகவே தெரிவித்தனர்.
மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் புதிய கல்விக் கொள்கையை ஏற்றால் மட்டுமே நிதி வழங்கப்படும் என்று கூறியது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இந்தியை ஏற்காததால் தமிழக பள்ளிக் கல்வித் துறைக்கு வர வேண்டிய 2,190 கோடி ரூபாயை மத்திய அரசு வழங்கவில்லை. அந்த நிதியை உபி, குஜராத் போன்ற மாநிலங்களுக்குப் பிரித்துக் கொடுத்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.
தற்போது அதற்கும் ஒருபடி மேலாக, மும்மொழிக் கொள்கை விவகாரத்தை மத்திய அரசு கையில் எடுத்துள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் ஒருபோதும் மும்மொழிக் கொள்கை ஏற்றுக் கொள்ளப்படாது என்று பல்வேறு அரசியல் கட்சியினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
மும்மொழிக் கொள்கையை கண்டித்து சென்னையில் திமுக கூட்டணிக் கட்சிகள் இணைந்து இந்தி திணிப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இந்நிலையில், தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவு தெரிவித்து கையெழுத்து இயக்கத்தையும் மேற்கொண்டுள்ளார்.
இந்நிலையில், தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கையை திணிக்க முயலும் பாஜக அரசுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, சென்னை அயப்பாக்கம் ஹவுசிங் போர்டு பகுதியில் உள்ள மகளிர் குழுவினர் 100 க்கும் மேற்பட்ட வீடுகளில் கோலமிட்டு எதிர்ப்பை தெரிவித்தனர். தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா, இந்தி திணிப்பு எதிர்ப்பு வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன.
இந்த வீடியோ காட்சிகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டதோடு, புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் வரிகளையும் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், இன்பத்திராவிடத்தில் இந்திமொழியே - நீ
இட்டஅடி வெட்டப்படும் இந்திமொழியே
துன்பம் கொடுக்கவந்த இந்திமொழியே - உன்
சூழ்ச்சி பலிப்பதில்லை எம்மிடத்திலே!
அன்பின் தமிழிளைஞர் தாய்அளித்திடும் - நல்
அமுதத் தமிழ்மொழிக்கு வாய்திறக்கையில்
உன்னைப் புகட்டுவது கட்டாயமெனில் - உனை
ஒழிப்பதும் எங்களுக்குக் கட்டாயமன்றோ?
என்ற புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் வரிகளைப் பகிர்ந்துள்ளார்.












Click it and Unblock the Notifications