இருக்கவே இருக்கு திமுக.. அப்பறம் உங்க இஷ்டம்.. பாஜகவிடம் கறார் காட்டும் தேமுதிக சுதீஷ்!
பாஜக - அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் உடன்படிக்கை ஏற்படவில்லை என்றால் திமுக கூட்டணியில் தேமுதிக இணைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை: பாஜக - அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் உடன்படிக்கை ஏற்படவில்லை என்றால் திமுக கூட்டணியில் தேமுதிக இணைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
99% டவுன்லோட் ஆன பின் லோட் ஆகும் 2ஜி சிக்னல் போலத்தான் அதிமுக கூட்டணி தற்போது சிக்கி தவிக்கிறது. அதிமுக கூட்டணியில் இடம்பெறலாம் என்று கணிக்கப்பட்ட எல்லா கட்சிகளும் கூட்டணிக்கு ஒப்புக்கொண்டு அதிமுகவுடன் இணைந்துவிட்டது.
இன்னும் இணையாமல் இருக்கும் ஒரே கட்சி தேமுதிகதான். பல முக்கிய காரணங்களால் தேமுதிக இந்த கூட்டணியில் இணையாமல் இருக்கிறது.

என்னதான் பிரச்சனை
தேமுதிக இந்த கூட்டணியில் இணையாமல் பிரச்சனை நீடிப்பதற்கு மூன்று காரணம்தான் சொல்லப்படுகிறது.
1. மொத்தம் 8 லோக்சபா இடங்களை ஒதுக்க வேண்டும் என்று தேமுதிக கேட்டுள்ளது.
2. உறுதியாக ஒரு தேமுதிக இடத்தை அளிக்க வேண்டும் என்று தேமுதிக கேட்டுள்ளது.
3. தேர்தல் செலவிற்கு பணம் அளிக்க வேண்டும், ஆகிய நிபந்தனைகளை தேமுதிக, அதிமுக - பாஜக தரப்பிடம் கோரிக்கையாக வைத்து இருக்கிறது.

முடியவே முடியாது
ஆனால் இந்த கோரிக்கைக்கு முடியவே முடியாது என்று அதிமுக தரப்பு பதில் அளித்துள்ளது. அதிகபட்சம் 5 தொகுதி கொடுப்போம் ஆனால் ராஜ்யசபா சீட் கொடுக்க முடியாது என்று உறுதியாக கூறியுள்ளது. நேற்று தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்த பாஜக அமைச்சர் பியூஷ் கோயலும் இதையேதான் கூறி இருக்கிறார்.

தேமுதிக
இதற்கு தேமுதிக துணை பொதுச்செயலாளர் சுதீஷ் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். நேற்று விஜயகாந்த் வீட்டிற்கு வெளியே நடந்த சந்திப்பில் கோயலிடம் சுதீஷ் ''8 தொகுதிக்கு குறையாமல் போட்டியிட முடியாது. பாமகவிற்கு சமமான பலம் எங்களுக்கும் உள்ளது.'' என்று மிக கண்டிப்பாக கூறி இருக்கிறார். இதனால் தேமுதிக இறங்கி வருவது கடினம் என்கிறார்கள்.

திமுக அழைக்கிறது
அதேபோல் ''திமுக எங்களுக்காக கதவை திறந்து வைத்து இருக்கிறது. 6 தொகுதியும், ஒரு ராஜ்யசபா சீட்டும் தருவதாக கூறுகிறார்கள். இதற்கு மேல் நீங்கள்தான் முடிவு செய்து கொள்ள வேண்டும்'' என்று சுதீஷ் கண்டிப்புடன் கூறியுள்ளார். இதனால்தான் இன்னும் கூட்டணி ஒப்பந்தம் படியாமல் இருக்கிறது.

ஆனால் உண்மை
ஆனால் உண்மையில் திமுக - தேமுதிக இடையே கூட்டணி பேச்சுவார்த்தை நடப்பது எல்லாம் சந்தேகம்தான் என்று கூறுகிறார்கள். ஏற்கனவே இருக்கிற கட்சிக்கே இடம் கொடுக்க முடியாமல் திமுக சிரமப்படுகிறது. இதில் தேமுதிகவை சுமப்பது எல்லாம் கஷ்டம் என்று கூறுகிறார்கள். என்ன நடக்க போகிறது என்று இன்னும் சில மணி நேரங்களில் தெரிந்துவிடும்.












Click it and Unblock the Notifications