வயநாட்டில் ராகுல் போட்டியிட்டால்.. தமிழகத்திற்கு என்ன லாபம்.. யோசிக்க வேண்டிய மேட்டர் இது!
சென்னை: காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உ.பி மாநிலம் அமேதி தொகுதியில் போட்டியிட உள்ளார் என்பது உறுதியாகிவிட்டது. இந்நிலையில் அவர் வடமாநிலங்களில் போட்டியிடுவது மட்டும் போதாது தென்மாநிலங்களில் உள்ள ஒரு தொகுதியிலும் போட்டியிட வேண்டும் என காங்கிரஸ் தலைவர்கள் தொடர்ந்து வற்புறுத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் அவர் போட்டியிட வேண்டும் என்று தமிழக தலைவர்கள் வற்புறுத்தி வந்தனர். தமிழகத்தில் அவர் போட்டியிட ஒப்புகொண்டால் கன்னியாகுமரி தொகுதியில் அவர் போட்டியிடவேண்டும் என்று காங்கிரசார் கூறி வந்தனர். காங்கிரஸ் கட்சிக்கு அதிக செல்வாக்கு உள்ள தொகுதிகளில் ஒன்று கன்னியாகுமரி. அதோடு பெருந்தலைவர் காமராஜ் போட்டியிட்டு வென்ற தொகுதி என்பதால் அவர் இங்கும் போட்டியிட வேண்டும் என்று கோரிக்கை வலுத்து வந்தது. ஆனால் நேற்று முன்தினம் கன்னியாகுமரி தொகுதியில் தமிழக காங்கிரஸ் செயல்தலைவர்களுள் ஒருவரான வசந்த குமார் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ராகுல் கேரள மாநிலத்தில் உள்ள வயநாடு தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று கேரள மாநில காங்கிரஸ் தலைவர்கள் தொடர்ந்து வற்புறுத்தி வருகின்றனர். வயநாடு காங்கிரசின் கோட்டை என்பதால் ராகுல் இங்கு போட்டியிட்டால் எளிதாக வெற்றி பெற இயலும் என்பதோடு, கேரள மாநிலத்தில் தங்களது ஆளுகையை நிலை நாட்ட வேண்டும் என்று நினைக்கும் பாஜகவுக்கு ஒரு செக் வைத்ததுபோல் இருக்கும் என்றும் தென் மாநிலங்களில் காங்கிரஸ் இன்னும் வலிமை பெறும் என்றும் காங்கிரசார் கருதுகின்றனர்.
பெரும் தலைகள் களமிறங்கும் கரூர் தொகுதி.. அப்படி என்ன சிறப்பம்சம் தெரியுமா?
அதே வேளையில் ராகுல் இங்கு போட்டியிட்டு வென்றால் கேரள மாநில மற்றும் தமிழக தண்ணீர் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்குமா என்ற ஒரு கேள்வியும் இப்போது எழுந்துள்ளது. கபினி ஆறு கேரளாவின் வயநாடு பகுதியில் உற்பத்தி ஆகிறது. இந்த ஆறு கர்நாடகா வழியாக பாய்ந்து காவிரியில் கலந்து பின்னர் தமிழகம் வந்து வங்க கடலில் கலக்கிறது. இதனால் காவிரியில் தங்களுக்கும் பங்கு உண்டு கேரளா 1960ம் ஆண்டு முதல் போராடி வருகிறது.
கேரளாவை பொருத்தமட்டில் சமீப காலங்களில் இந்தப் பிரச்சனை ஒரு பெரும் போராட்டமாக உருவெடுத்து வருகிறது. இதனால் வயநாடு தொகுதியில் போட்டியிட்டு மக்களவை உறுப்பினராக ராகுல் தேர்வு செய்யப்பட்டால் இந்த பிரச்னைக்கு ஒரு தீர்வு வருமா என்று கேரள மாநில விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். கேரளாவுக்கு உரிய பங்கை காவிரியில் இருந்து தரவேண்டும் என்று ராகுல் குரல் கொடுக்கும் பட்சத்தில் காவிரி அதிக தூரம் பயணித்து அதிக பாசன பகுதிகளை வளமாக்கும் தமிழகத்திற்கும் உரிய பங்கை கர்நாடகா தந்தே ஆகவேண்டிய நிர்பந்தம் ஏற்படும். ஆனால் ஒரு கட்சியின் தேசியத் தலைவராக இருக்கும் ராகுல் அதை செய்வாரா என்ற கேள்வி இப்போதே எழுந்துள்ளது.
இப்போது மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சராக இருப்பவர் நிர்மலா சீதாராமன். இவர் தமிழகத்தை சேர்ந்தவர். ஸ்ரீரங்கத்தை பூர்விகமாக கொண்டவர். ஆனால் கர்நாடக மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டதால் அவரது செயல்பாடுகள் தமிழகத்திற்காக, தமிழக நலன் சார்ந்து எப்போதும் இருந்ததில்லை என்ற விமர்சனம் எப்போதும் இருந்ததுண்டு.
காவிரிப் பிரச்சனையாக இருக்கட்டும், அல்லது ஓகி புயல் தாக்கிய நேரமாக இருக்கட்டும், குரங்கணியில் தீ விபத்து ஏற்பட்ட காலத்திலும் சரி அவர் தமிழகத்திற்கு முழுமையாக உதவவில்லை என்ற குற்றசாட்டு அவர் மீது இப்போதும் உண்டு. தமிழகத்தில் ஓபிஎஸ் மீது பல்வேறு விமர்சனங்கள் இருந்தாலும் அவர் நமது துணை முதலமைச்சர். அவர் நிர்மலா சீதாராமனை பார்க்க சென்றபோது அவரை வாசலில் காக்க வைத்து திருப்பி அனுப்பியவர் இவர் ஆகவே அந்த கோபமும் தமிழக மக்களுக்கு நிர்மலா சீதாராமன் மீது உண்டு.
நிர்மலா சீதாராமன் கர்நாடக மாநிலத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்டதால் அவர் தமிழகத்தை சேர்ந்தவராக இருந்தாலும் அவர் கர்நாடக மாநிலத்தின் சார்பாகவே செயல்பட்டது போல ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் இருந்து தேர்வு செய்யப்பட்டால் அவர் தென் மாநிலங்களின் உரிமைகளுக்காக வேண்டியவற்றை செய்வாரா என்ற குரல் தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருக்கிறது. செய்வாரா ராகுல்?
இது ஒருபுறம் என்றால் வயநாடு மாவோயிஸ்டுகள் அதிகம் உள்ள பகுதி. நாட்டின் உயர் பாதுகாப்பு பிரிவில் இருக்கும் ராகுல் இங்கு போட்டியிடுவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. மொத்தத்தில் வயநாட்டுக்கு ராகுல் வருவாரா மாட்டாரா என்பது சுவாரஸ்யமான எதிர்பார்ப்பாக மாறியுள்ளது.












Click it and Unblock the Notifications