உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் உதவித் தொகையுடன் முதுநிலை தமிழ் படிப்பு.. எப்படி விண்ணப்பிக்கலாம்?
சென்னை: சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் உதவித் தொகையுடன் கூடிய தமிழ் முதுநிலைப் பட்டப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.
உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தமிழ்ப் பல்கலைக்கழக ஏற்புடன் 5 ஆண்டு கால ஒருங்கிணைந்த தமிழ் முதுநிலைப் பட்டம், தமிழ் முதுநிலைப் பட்டப்படிப்பு, தமிழ் முனைவர் பட்ட வகுப்பு ஆகிய படிப்புகள் ஆண்டு தோறும்வழங்கப்படுகின்றன. இந்த நிலையில் 2025-26 கல்வியாண்டுக்கான 5 ஆண்டு ஒருங்கிணைந்த தமிழ் முதுநிலைப் பட்டப்படிப்புக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

2 ஆண்டு கால தமிழ் முதுநிலைப் பட்டப்படிப்புக்கும் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இது இலக்கியத் துறையாகும். இந்த வகுப்பில் சேர்க்கை பெறும் மாணவர்களுக்கு தேர்வு அடிப்படையில் மட்டும் தமிழக அரசு ரூ.2 ஆயிரம் கல்வி உதவித்தொகை மாதந்தோறும் அளிக்கப்பட்டு வருகின்றன. இந்த தமிழ் முதுநிலைப் பட்டப்படிப்பில் இணைய விரும்புவோர் www.ulakaththamizh.in என்ற இணைய முகவரியில் விதிமுறைகள், தகவல்கள் மற்றும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து தெரிந்து கொள்ளலாம்.
அல்லது நேரில் சென்றும் விண்ணப்பத்தை பெற்றுக் கொள்ளலாம். இரு பாலருக்கு என்று தனித்தனியே கட்டணம் இல்லாமல் தங்கும் விடுதி வசதி அளிக்கப்பட்டு வருகிறது. அந்த விடுதிகளில் காலியிடங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப முதலில் வருபவர்களுக்கு மட்டும் முன்னுரிலை அடிப்படையில் அறைகள் ஒதுக்கீடு செய்யப்படும். தாமதமாக வருபவர்கள் வரிசைப்படி காத்திருக்க வேண்டும்.
இதற்கான விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து முழுமையாக தகவல்களை நிரப்பிய பின், கல்வி சான்று அல்லது மாற்றுச் சான்றிதழ்களுடன் கையெழுத்திட்டு தபால் அல்லது நேரில் வந்து கொடுக்கலாம். தபால் மூலமாக அனுப்புவோர் இயக்குநர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், 2ஆம் முதன்மை சாலை, மையத் தொழில்நுட்ப பயிலக வளாகம், தரமணி, சென்னை - 13. விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய கடைசி நாள் ஜூன் 27ஆம் தேதியாகும்.












Click it and Unblock the Notifications