இளைஞர்களால் நடத்தப்படும் இளம் காளைகள் கட்சி... தேர்தலில் களமிறங்க ஆலோசனை..!
சென்னை: மதுரை மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்களால் நடத்தப்படும் இளம் காளைகள் கட்சி வரும் சட்டமன்றத் தேர்தலில் களமிறங்குவது குறித்து தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது.
தேர்தலில் போட்டியிடுவதா அல்லது தங்கள் கோரிக்கைகளை ஏற்கும் கட்சிக்கு ஆதரவு நல்குவதா என விவாதித்து வருகின்றனர் அந்தக் கட்சி நிர்வாகிகள்.
இளம் காளைகள் கட்சியின் கொள்கைகளை பொறுத்தவரை தமிழகத்தின் பாரம்பரியத்தை மீட்டெடுக்க வேண்டும் என்பது பிரதானமாக இருக்கிறது.

இளம் காளைகள்
கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு பிறகு மதுரையை சேர்ந்த நேதாஜி கார்த்திகேயன் என்பவர் இளம் காளைகள் கட்சியை தொடங்கினார். தொடக்கத்தில் அதில் உறுப்பினர் சேர்க்கை மந்தமாக இருந்த நிலையில் இப்போது மதுரை மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் ஓரளவு உறுப்பினர்களையும் சேர்த்துள்ளனர்.

தனித்து போட்டி
இந்நிலையில் வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து இளம் காளைகள் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். தனித்து போட்டியிடுவதா இல்லை கோரிக்கைகளை ஏற்கும் கட்சிக்கு ஆதரவு அளிப்பதா என்பது பற்றி விவாதம் நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி எழுபது சதவீதம் முக்கிய அரசியல் கட்சி ஒன்றுக்கு இளம் காளைகள் கட்சி ஆதரவு தெரிவிக்கும் எனக் கூறப்படுகிறது.

சென்னையில் ஆலோசனை
ஆனால் அதேவேளையில் வழக்கம்போல் பெரிய அரசியல் கட்சிகளுக்கு ஆதரவு என லெட்டர் பேடுகளை கொடுக்காமல், இந்த முறை சிறிய கட்சிகள் அனைத்தும் ஒருங்கிணைந்து தேர்தலில் போட்டியிடுவது பற்றியும் விவாதிக்கப்படுகிறது. கடந்த வாரம் இளம் காளைகள் கட்சி தலைவர் நேதாஜி கார்த்திகேயன் தலைமையில் சென்னையில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றிருக்கிறது.

சூர்யாவுக்கு அழைப்பு
மதுரையின் பாரம்பரியமான தமுக்கம் மைதானம் மீட்பு, பாரம்பரிய மருத்துவம் மீட்டெடுப்பு, இயற்கை வள கொள்ளைகள் தடுத்து நிறுத்தம் என்பன உள்ளிட்ட கொள்கைகளை வகுத்து இளம் காளைகள் கட்சி செயல்பட்டு வருகிறது. இதனிடையே சூர்யாவை அரசியலுக்கு வருமாறு அழைப்பு விடுத்த கட்சியும் இது தான் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications