ஜெயலலிதாவுக்கும் சசிகலாவுக்கும் சுமூக உறவு இல்லை-போட்டுக் கொடுத்த இளவரசி மகள் கிருஷ்ணப்பிரியா
சென்னை: 2012-ம் ஆண்டுக்குப் பின்னர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கும் சசிகலாவுக்கும் இடையே சுமூக உறவு இல்லை என்று நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் சசிகலாவின் உறவினரான இளவரசி மகள் கிருஷ்ணப்பிரியா தெரிவித்திருக்கிறார்.
ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்ட நிலையில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆட்சிக் காலத்தில் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த விசாரணை ஆணையம் தமது அறிக்கையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் அளித்தது.

சட்டசபையில் ஆறுமுகசாமி கமிஷன் அறிக்கை
தமிழக சட்டசபையில் இன்று நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த விசாரணை அறிக்கையில் ஜெயலலிதாவின் தோழி சசிகலா மீது பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டுள்ளன. ஜெயலலிதா மயக்கம் அடைந்த பின்னரான அனைத்து சிகிச்சைகளையும் சசிகலா ரகசியமாக்கினார் என குற்றம் சாட்டப்பட்டது.

சசிகலா உள்ளிட்ட 8 பேர் மீது குற்றச்சாட்டு
மேலும் ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ சிகிச்சையை சசிகலாதான் தடுத்தார்; எய்ம்ஸ் மருத்துவமனை குழு 5 முறை வந்த போதும் ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ சிகிச்சை தரவில்லை எனவும் ஆறுமுகசாமி ஆணையம் குற்றம்சாட்டியிருக்கிறது. அத்துடன் சசிகலா, டாக்டர் கே.எஸ்.சிவக்குமார், முன்னாள் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் குற்றம் செய்தவர்களாக முடிவு செய்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் ஆறுமுகசாமி ஆணையம் பரிந்துரைத்துள்ளது. இந்த அறிக்கையில் சசிகலாவின் அண்ணன் ஜெயராமனின் மகள் (இளவரசி மகள்) கிருஷ்ணப்பிரியா அளித்த வாக்குமூலம் மிக முக்கியமானதாக இடம்பெற்றுள்ளது. 2012-ம் ஆண்டுக்குப் பின்னர் ஜெயலலிதாவுக்கும் சசிகலாவுக்கும் இடையே சுமூகமான உறவு இருந்தது இல்லை என கிருஷ்ணப்பிரியா கூறியதாக ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கை தெரிவித்துள்ளது.

வெளியேற்றிய ஜெயலலிதா
ஜெயலலிதா- சசிகலா மோதல், இணக்கம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம் கூறியிருப்பதாவது: டெஹல்காவில் சதித் திட்டம் வெளியிடப்பட்டதன் விளைவாக 2011-ம் ஆண்டு நவம்பர் மாதம், போயஸ் கார்டனில் இருந்து சசிகலாவை ஜெயலலிதா வெளியேற்றினார். அப்போது பத்திரிகை ஆசிரியர் சோ உடனிருந்தார். சசிகலா, உறவினர்கள் மீது சந்தேகம் இருந்ததால்தான் இளவரசி உள்ளிட்டோரை போயஸ் கார்டனில் இருந்து வெளியேற்றினார் ஜெயலலிதா.

கிருஷ்ணப்பிரியா சாட்சியம்
2012-ம் ஆண்டு அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில், சசிகலா மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுடன் தொடர்பு கொள்ள வேண்டாம் என்று ஜெயலலிதா எச்சரித்தார். சசிகலா எழுதிக் கொடுத்த உறுதி மொழிக் கடிதத்தின் அடிப்படையில்தான் அவரை ஜெயலலிதா மீண்டும் போயஸ் கார்டனுக்குள் அனுமதித்தார். கிருஷ்ணப்பிரியாவின் சாட்சியத்தின்படி, சசிகலாவுக்கும் ஜெயலலிதாவுக்கும் இடையே நல்லுறவு இல்லை. ஜெயலலலிதாவின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப சேவை செய்ததால் மட்டுமே, சசிகலா போயஸ் கார்டனுக்குள் மீண்டும் நுழைய அனுமதிக்கப்பட்டார். ஜெயலலிதா தம்முடன் பேசியது இல்லை என்கிறார் இளவரசி. இவ்வாறு ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications