டாஸ்மாக் பார்களில் இரவு 10 மணிக்கு மேல் மது விற்பனையா? திடீர் சோதனைகள் நடத்த சென்னை ஐகோர்ட் ஆணை!
சென்னை: டாஸ்மாக் பார்களில் சட்ட விரோதமாக மது விற்கப்படுகிறதா என கண்டறிய திடீர் சோதனைகளை நடத்த காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் இரவு 10 மணிக்கு மேல் மதுபானம் விற்கப்படுவதாக தொடரப்பட்ட வழக்கில் போலீசார் சோதனை நடத்த ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சென்னை: டாஸ்மாக் மதுபான கடைகளுடன் இணைந்த பார்களில் சட்ட விரோதமாக மது விற்கப்படுகிறதா? என திடீர் சோதனைகள் நடத்த வேண்டும் என டாஸ்மாக் நிர்வாகத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தவிட்டுள்ளது.

சென்னை ஓட்டேரியில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடையை ஒட்டிய பாரில் சட்ட விரோதமாக மது விற்பனை நடைபெறுவதாகவும், இரவு 10 மணிக்கு மேல் சட்ட விரோதமாக அங்கு மதுபானங்கள் விற்கப்படுவதாகவும் கூறி தேவராஜன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நலன் மனு தாக்கல் செய்திருந்தார்.
அவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், டாஸ்மாக் கடை விற்பனையாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுடன் கூட்டு சேர்ந்து பார் உரிமம் பெற்றவர்கள், மதுபான விற்பனைக்கு தடை விதிக்கப்பட்ட நேரங்களில் சட்ட விரோதமாக மதுபானங்கள் விற்று வருகின்றனர். இது தொடர்பாக டாஸ்மாக் நிர்வாகத்திற்கும், காவல்துறைக்கும் புகார்கள் அளித்தும் அவர்கள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே, டாஸ்மாக் மதுபான கடைகளுடன் இணைந்த பார்களில் சட்ட விரோதமாக மது விற்கப்படுவதை தடுக்க தான் அளித்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
தேவராஜன் தாக்கல் செய்த இந்த பொதுநல மனு, சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி எம்.எம் ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி அருள் முருகன் அமர்வு, டாஸ்மாக் மதுபான கடைகளுடன் இணைந்த பார்களில் சட்ட விரோதமாக மதுபானங்கள் விற்கப்படுகிறதா? என திடீர் சோதனைகள் நடத்தப்பட வேண்டும் என டாஸ்மாக் நிர்வாகத்திற்கும், காவல்துறையினருக்கும் உத்தரவிட்டது.
மேலும், மனுதாரர் தேவராஜின் புகார் மனுவை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க டாஸ்மாக் நிர்வாகத்திற்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தது சென்னை ஐகோர்ட் அமர்வு.












Click it and Unblock the Notifications