18யை தொட்ட கள்ளச்சாராய பலி.. குற்றம் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் உறுதி
சென்னை: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி பலியானவர்களின் எண்ணிக்கை 18யை தொட்டுள்ளது. இந்நிலையில் தான் முதல்வர் ஸ்டாலின் வேதனை தெரிவித்துள்ளார். அதோடு குற்றத்தை தவறிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறியுள்ள ஸ்டாலின், இத்தகைய குற்றங்கள் இரும்பு கரம் கொண்டு அடக்கப்படும் என சூளுரைத்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் காலனியை சேர்ந்த 26 நபர்கள் இன்று காலையில் வாந்தி, வயிற்று வலி, வயிற்றெரிச்சல் போன்ற பிரச்சனைகளால் திடீரென்று பாதிக்கப்பட்டனர். இதையடுத்து அவர்கள் அனைவரும் கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

விசாரணையின் அவர்கள் கள்ளச்சாராயம் குடித்தது தெரியவந்தது. கள்ளச்சாராயம் தயாரித்து பாக்கெட்டுகளில் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் அதனை வாங்கி குடித்து தான் உடல்நல பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டது தெரியவந்தது. மேலும் அடுத்தடுத்து உயிர் பலி ஏற்பட தொடங்கியது.
பிரவீன் குமார் (வயது 26), சுரேஷ் (40), சேகர் (59), இந்திரா, மணிகண்டன் உள்பட 18 பேர் வரை தற்போது இறந்துள்ளனர். அதுமட்டுமின்றி 80 பேர் கள்ளக்குறிச்சி, புதுச்சேரி மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர். இதுதொடர்பாக பாக்கெட் சாராயம் விற்ற கோவிந்தராஜ் என்கிற கண்ணுகுட்டி (49) என்பவர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து 200 லிட்டர் கள்ளச்சாராயம் கைப்பற்றப்பட்டுள்ளது.
தற்போது 80 பேர் சிகிச்சையில் உள்ள நிலையில் 10 பேரின் நிலைமை மோசமாகி உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இன்னும் உயிர் பலி அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இந்நிலையில் தான் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்த விவகாரம் குறித்து முதல்வர் ஸ்டாலின் வேதனை தெரிவித்துள்ளார். அதோடு இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் பற்றி பொதுமக்கள் தகவல் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். குற்றங்கள் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படும் என தெரிவித்துள்ளார். இதுபற்றி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது:
‛‛கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தியவர்கள் உயிரிழந்த செய்திகேட்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். இந்த விவகாரத்தில் குற்றத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். தடுக்கத் தவறிய அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்கள் குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். சமூகத்தைப் பாழ்படுத்தும் இத்தகைய குற்றங்கள் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படும்'' என கூறியுள்ளார்.
முன்னதாக இதுபோன்ற பதிவை முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். ஆனால் அதற்கு பிறகு அந்த பதிவு உடனடியாக ‛டெலிட்' செய்யப்பட்டது. ‛டெலிட்' செய்யப்பட்டதற்கான காரணம் என்ன? என்பது தெரியவில்லை. அதன்பிறகு அடுத்த சில நிமிடங்களில் மீண்டும் மேற்கண்ட பதிவு முதல்வர் ஸ்டாலினின் எக்ஸ் பக்கத்தில் வெளியிடப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications