இன்று மதியம் 1 மணி வரை சென்னை உள்பட 5 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம்
சென்னை: சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் விழுப்புரம் ஆகிய 5 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணிநேரத்திற்கு கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Recommended Video
தென்கிழக்கு வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் வடசென்னைக்கும் இடையே கரையை கடக்கிறது.
இதனால் கடந்த இரு தினங்களாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. நேற்று இரவு முதல் விடிய விடிய மழை பெய்துள்ளது. ஏற்கெனவே வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் மழை பெய்ததால் சென்னையே வெள்ளக்காடாக மாறியுள்ளது.

போக்குவரத்துக்கு தடை
சென்னையில் உள்ள 11 சுரங்கபாதைகள் நிரம்பியுள்ளதால் அவை போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டு மூடப்பட்டுள்ளது. அது போல் முக்கிய சாலைகளில் வெள்ளம் தேங்கியுள்ளதால் அவையும் மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில் சென்னையின் பெரும்பாலான இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

மக்கள் அவதி
மழை நீருடன் பாம்பு, பூரான், தேள் உள்ளிட்ட விஷஜந்துக்கள் வீட்டிற்குள் வருவதால் மக்கள் அவதியடைந்துள்ளனர். வேளச்சேரி, தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்குவதால் அங்கு தரைதளத்தில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் தேங்கி சோஃபா, வாஷிங் மெஷின், பிரிட்ஜ், விண்டோ ஏசியின் அவுட் டோர் யூனிட் உள்ளிட்டவை சேதமடைந்துள்ளன.

5 மாவட்டங்கள்
ஒரு பக்கம் தண்ணீரை அப்புறப்படுத்தும் பணிகளில் அரசு ஈடுபட்டு வந்தாலும் மறு புறம் மழை விட்டு விட்டு பலமாக பெய்துவருவதால் அந்த பணிகள் செய்தும் பலனில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று மதியம் 1 மணி வரை சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் விழுப்புரம் ஆகிய 5 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணிநேரத்திற்கு கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.

கனமழை தொடரும்
சென்னையில் கனமழை தொடரும் என தெரிவித்துள்ளதால் ஏற்கெனவே புளியந்தோப்பு, வியாசர்பாடி, பட்டாளம், மூலகொத்தளம், செம்பாக்கம், வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதில் மேலும் மழை என்றால் மேற்கொண்டு தண்ணீர் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். இன்று மாலை முதல் மழை படிப்படியாக குறையும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications