ஆவின் பால்.. முதலில் இதை பண்ணுங்க.. ரொம்ப முக்கியம்.. பால்வளத்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
சென்னை: தமிழ்நாட்டில் கறவை மாடுகளுக்கு ஆவின் தாது உப்புக் கலவை கொடுக்க வேண்டும் என்று பால்வளத்துறை அறிவுறுத்தி உள்ளது.
சமீபத்தில் பால்வளத்துறை அமைச்சராக மனோ தங்கராஜ் நியமனம் செய்யப்பட்டார். இவரின் நியமனத்தை தொடர்ந்து ஆவின் துறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்பே ஆவினில் விரைவில் தண்ணீர் விற்பனையும் ஆவின் மூலம் மேற்கொள்ளப்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இதன் மூலம் பால் மற்றும் பால் பொருட்களின் விற்பனையை தொடர்ந்து 1 லிட்டர், 200மி.லி குடிநீர் பாட்டில்களை விற்பனைக்கு கொண்டு வருகிறது ஆவின்.

ஒப்பந்தம் அடிப்படையில் தண்ணீர் விற்க இவர்கள் முடிவு செய்துள்ளனர். எடுப்பவரிடம் தேவையான அளவிற்கு குடிநீர் ஆலைகள் மற்றும் இயந்திரங்கள் இருக்க வேண்டும் அதன்படி ஆரம்ப நாட்களில் இருந்து நாளொன்றுக்கு ஒரு லட்சம் குடிநீர் பாட்டில்களை விற்பனை செய்ய ஆவின் நிர்வாகம் திட்டம் போட்டுள்ளது.
அதையடுத்து அமைச்சர் மனோ தங்கராஜ் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஆவின் பால் பாக்கெட்டுகளில் புதிய மாற்றங்களை தமிழ்நாடு அரசு ஏற்படுத்தும் என்று தெரிவித்துள்ளார். அதன்படி ஆவின் பச்சை நிற பால் பாக்கெட்டுகளான ஆவின் 'கிரீன் மேஜிக்' பால் பாக்கெட்டை புதிய வடிவில் அறிமுகம் செய்துள்ளது ஆவின் நிர்வாகம்.
இந்த பாக்கெட்டுகளில் தோற்றம் மொத்தமாக மாற்றப்பட்டு உள்ளது. வரும் நாட்களில் மற்ற வண்ண பால் பாக்கெட்டுகளில் நிறங்களும் மாற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. தற்போது ஆவினில் தரமற்ற பால் பாக்கெட்டுகள் உள்ளன.
இதனால் அதில் லீக் ஏற்படுகிறது. இந்த நிலையில் தற்போது பாக்கெட்டுகளை மாற்றி வருகிறோம். டாக்டர்கள் தொடங்கி பால்துறை வல்லுனர்கள் வரை பலரை ஆலோசித்து பால் பாக்கெட்டுகளில் தரத்தை மாற்ற முடிவு செய்து பணிகளை மேற்கொண்டு வருகிறோம் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் கூறி உள்ளார்.
இந்த நிலையில் பால் கொடுக்கும் கறவை மாடுகளுக்கு ஆவின் தாது உப்புக் கலவை கொடுக்க வேண்டும் என்று பால்வளத்துறை அறிவுறுத்தி உள்ளது. இது தொடர்பாக ஆவின் செய்துள்ள போஸ்டில், தாது உப்பு கலவை என்பது சுண்ணாம்புச் சத்து, மணிச்சத்து போன்ற நுண் சத்துக்கள் அடங்கிய கலவையாகும். இதை ஆங்கிலத்தில் Mineral Mixture என்று அழைப்பார்கள். இதை அனைத்து வகையான மாடுகளுக்கும் தினசரி கொடுத்து வரலாம்.
ஆவின் தாது உப்புக் கலவை அத்தியாவசியமான தாதுசத்துக்களை தேவையான அளவில் சரிவிகிதத்தில் கொண்டதாகும். கறவைமாடுகளின் உடல்எடை, வளர்ச்சி மற்றும் இனப்பெருக்கத்திறன் ஆகியவற்றை மேம்படுத்த பல்வேறு விதமான தாது உப்புக்கள் தேவைப்படுகின்றன. மாடுகளில் தாதுஉப்புக்களின் பற்றாக்குறையினால் கன்றுகளில் வளர்ச்சியும், மாடுகளில் பால் உற்பத்தித்திறனும், நோய் எதிர்ப்புத் திறனும் மற்றும் சினைபிடிக்கும் திறனும் பாதிக்கப்படுகின்றன. எனவே, தாது உப்பு கலவையை மாடுகளின் தீவனத்தில் சேர்த்து அளிப்பது அத்தியாவசியமாகும்.
ஆவின் தாது உப்பு கலவையை பயன்படுத்தும் அளவு:
1. கறவை மாடுகள் மற்றும் எருமைகள் ---- தினமும் 100-200 கிராம் (பால் உற்பத்தியின் அளவை பொறுத்து)
2.வளரும் மாடுகள் மற்றும் பால் இல்லாத மாடுகள் ---- தினமும் 50 கிராம்
3.கன்றுகள் ---- தினமும் 20-25 கிராம்

தாது உப்புகளை தீவனமாக அளிக்கும் முறை:
மாடுகளுக்கு தாது உப்புகளை அடர் தீவனத்துடன் சேர்த்து தீவனமாக கொடுக்க வேண்டும். இவற்றுடன் 15-20 சமையல் உப்பும் சேர்த்து கொடுக்கவேண்டும்.
· கன்றுகளின் உடல்வளர்ச்சியினை துரிதப்படுத்தும்.
· உட்கொண்ட தீவனத்தின் செரிமானத்தை அதிகரிக்கின்றது.
· எலும்பு வளர்ச்சி மற்றும் இரத்த உற்பத்திக்கு மிகவும் அவசியமாகும்.
· தரமான பால் உற்பத்தியை பெருக்குகின்றது.
· இனப்பெருக்கத்திறனை அதிகரித்து கன்றுகள் பிறக்கும் இடைவெளியினை குறைக்கின்றது.
· உற்பத்தித்திறன் நாட்களை அதிகரிக்கச் செய்கின்றது.
· நோய் எதிர்ப்புத்திறன் கூடுகின்றது.
· கன்று ஈனும் காலத்தில் ஏற்படும் நோய்களை தவிர்க்கின்றது.
தற்போது ஆவின் தாது உப்பு கலவை ஈரோடு, துத்துக்குடி, விழுப்புரம், திருச்சி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட ஒன்றியங்களில் அந்தந்த பகுதிக்கு உகந்த நான்கு வகை தாது உப்பு கலவைகளை உற்பத்தி செய்து விநியோகம் செய்கிறது. ஆவின் பால் உற்பத்தியாளர்களுக்கு தாது உப்பு கலவை வெளிச்சந்தை விலையை காட்டிலும் குறைந்த விலையில் வழங்கப்பட்டு வருகிறது.
இது அனைத்து கிராம பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களிலும் கிடைக்கும். பால் உற்பத்தியாளர்கள் சலுகை விலையில் வாங்கி பயன்பெறலாம்.












Click it and Unblock the Notifications