இபிஎஸ் தலைமையில் துவங்கிய அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்.. சென்னை ஓட்டலில் தீவிர ஆலோசனை
சென்னை: அதிமுக இரண்டாகப பிளவுபட்டுள்ள நிலையில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் எம்.எல்.ஏக்கள் கூட்டம் சென்னையில் துவங்கியது. நாளை நடக்கும் ஜனாதிபதி தேர்தல் குறித்தும், ஓ பன்னீர் செல்வத்தின் சட்டசபை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவியை இபிஎஸ் அணி பறிப்பது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதிமுகவானது இபிஎஸ், ஓபிஎஸ் என இரு அணிகளாகப் பிளவுபட்டுள்ளது. அதிமுகவின் பொதுச்செயலாளர் நானே என இன்னொரு பக்கம் சசிகலா கூறி வருகிறார். தற்போதைய நிலையில் அதிமுக 3 பிரிவுகளாக உள்ளது.
அதிமுகவின் இபிஎஸ், ஓபிஎஸ் இரு கோஷ்டிகளும் கட்சி நிர்வாகிகளை மாறி மாறி நீக்கம் செய்து அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர். அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் பதவி செல்லுபடியாகும் என்ற அடிப்படையில் ஓபிஎஸ் தரப்பு நீக்கம் தொடர்பான அறிவிப்புகளை வெளியிடுகிறது. அதிமுகவின் இடைக்காலப் பொதுச்செயலாளர் என்ற அடிப்படியில் இபிஎஸ் தரப்பு ஓபிஎஸ் கோஷ்டி நிர்வாகிகளை நீக்கி வருகிறது. ஆனால், பொதுச்செயலாளர் தொடர்பான வழக்கு நிலுவையில் இருக்கும் போது இரு கோஷ்டிகள் இப்படி நீக்கிக் கொண்டிருப்பது செல்லாது என்கிறார் சசிகலா.

இந்நிலையில் சென்னை அடையாறு நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தை இபிஎஸ் கோஷ்டி கூட்டியுள்ளது. சட்டசபையில் அதிமுகவுக்கு மொத்தம் 65 எம்.எல்.ஏக்கள். உள்ளனர். இவர்களில் 62 பேர் தற்போது இபிஎஸ் கோஷ்டியில் உள்ளனர். 3 எம்.எல்.ஏக்கள் மட்டும்தான் ஓபிஎஸ் அணியில் உள்ளனர். இபிஎஸ் அணியிலும் ஒவ்வொரு மண்டலமாக எம்.எல்.ஏக்கள் பிரிந்தும் உள்ளனர்.
இந்த பரபரப்பான நிலையில் சென்னையில் இன்று அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தை இபிஎஸ் கோஷ்டி கூட்டியிருக்கிறது. இந்தக் கூட்டத்தில் சட்டசபை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவியில் இருந்து ஓபிஎஸ்ஸை நீக்கும் முடிவு எடுக்கப்படலாம்; அப்படி ஓபிஎஸ் நீக்கப்பட்டால் சட்டசபை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவிக்கு யாரை நியமிப்பது என்கிற ஆலோசனையும் நடைபெறக் கூடும். இபிஎஸ் கோஷ்டியில் பல சீனியர்கள் ஓரம் கட்டப்பட்டுள்ளதாக கூறப்படுவதால் இன்றைய எம்.எல்.ஏக்கள் கூட்டம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஓரம்கட்டப்பட்டுள்ள சீனியர் எம்.எல்.ஏக்களில் ஒருவரை இன்றே சட்டசபை எதிர்க்கட்சித் துணைத் தலைவராக அறிவிக்கவும் வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் தான் இன்று மாலை 4 மணிக்கு அடையாறு நட்சத்திர ஹோட்டலில் அதிமுக எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் துவங்கியது. இந்த கூட்டத்தில் பங்கேற்க பாஜக எம்எல்ஏக்கள் நயினார் நாகேந்திரன் எம்ஆர் காந்தி உள்ளிட்டவர்களும் சென்றனர். இதனால் இந்த கூட்டத்தில் நாளை நடக்கும் ஜனாதிபதி தேர்தலில் பாஜகவின் ஆதரவு வேட்பாளர் திரெளபதி முர்முவுக்கு ஓட்டளிப்பது பற்றி விவாதிக்கப்பட உள்ளது. அதன்பிறகு அதிமுக கட்சி சார்ந்த விஷயங்கள் ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.












Click it and Unblock the Notifications