அதிக வரி செலுத்துவதால், தமிழகத்திற்கு அதிக திட்டங்கள் கேட்பது பிரிவினைவாத மனநிலை: நிர்மலா சீதாராமன்
சென்னை: துக்ளக் இதழின் 52ஆவது ஆண்டு நிறைவு விழாவில் கலந்து கொண்ட நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்தி விவகாரம், திராவிட மாடல் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்துப் பேசினார்.
துக்ளக் இதழின் 52ஆவது ஆண்டு நிறைவு விழா நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்தி விவகாரம், திராவிட மாடல் என பல்வேறு விவகாரங்கள் குறித்தும் விரிவாக பேசினார்.

நிர்மலா சீதாராமன்
அப்போது அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகையில், "பாஜக உயர்ந்த குலத்தில் பிறந்தவர்களுக்கான கட்சி. வடமாநில கட்சி என்று என்று தொடர்ந்து தமிழகத்தில் தவறான கருத்துகள் பரப்பப்படுகின்றது. பாஜக கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தில் நல்ல வளர்ச்சி அடைந்துள்ளது. இந்தியாவில் கடந்த 8 ஆண்டுகளில் பெரிய மாறுதல்கள் நாட்டில் நடந்துள்ளது. பல முன்னேறி நாடுகளைக் காட்டிலும் இந்தியா பல மடங்கு வளர்ச்சி அடைந்துள்ளது. கொரோனா பெருந்தொற்று பாதிப்பிற்குப் பிறகு கூட வேகமாக வளரும் நாடு இந்தியா எனச் சர்வதேச நிதியம் கூறி உள்ளது.

கொரோனா
கொரோனா பாதிப்பு இருந்த சமயத்தில் வேக்சின் குறித்த அவநம்பிக்கையும் தயக்கத்தையும் காங்கிரஸ் கட்சி ஏற்படுத்தியது. காங்கிரஸ் தலைவர்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வேக்சினை போட்டுக்கொண்டார்களா அல்லது வெளிநாட்டு வேக்சின் போட்டுக்கொண்டார்களா என்பதை இதுவரை வெளிப்படையாகக் கூறவில்லை. காங்கிரஸ் கட்சி இந்த நாட்டுக்கு எதிராகப் போராடும், நாட்டை உடைக்க பார்க்கும் சக்திகள் உடன் கைகோர்த்துள்ளது. நேரு ஆட்சியில் இருந்த போது சீனா போர் தொடுத்தது. அப்போது அசாம் மக்களைக் காக்க நேரு தவறிவிட்டார்.

காங்கிரஸ் ஆட்சி
நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் தேசிய கட்சிகள் கண்டிப்பாகத் தேவை. தாழ்த்தப்பட்ட பழங்குடி இன மக்களுக்கு எதிராகச் செயல்படும் கட்சியாகவே காங்கிரஸ் உள்ளது. நாட்டில் இப்போது ஒவ்வொரு மாதமும் 36 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உருவாகின்றன. சோசியலிசம் என்ற பெயரில் ஆட்சி செய்த காங்கிரஸ் 60 ஆண்டுக்காலம் மக்களுக்கு ஏதும் செய்யவில்லை. 60 ஆண்டுகள் காங்கிரஸ் ஆட்சி செய்ததே மக்களின் துரதிருஷ்டவசம் தான்.

திராவிட மாடல்
நலத்திட்டங்களைச் சிலருக்கு மட்டும் கொடுத்துவிட்டு சிலருக்குக் கொடுக்காமல் விடுவது தான் திராவிட மாடல். மத்திய அரசு பாகுபாடு காட்டுவதாகவும் மத்திய, மாநில அரசுக்கு இடையே சுமுக உறவில்லை என்றும் இங்கே பொய் பிரசாரம் செய்யப்படுகிறது. தமிழகம் அதிக வரி செலுத்துவதால், தமிழ்நாட்டிற்கு அதிக அதிக திட்டங்களைத் தர வேண்டும் எனத் தமிழக அரசு சார்பில் கூறப்படுகிறது. பிரிவினைவாத மனநிலை கொண்டதால் தான் இப்படிக் கூறுகின்றனர்.

இந்தி
பிப்ரவரி, மார்ச் ஆகிய இரு மாத ஜிஎஸ்டி தொகையில் இருந்து மத்திய அரசின் பங்கு தமிழகத்திற்கு வழங்க வேண்டும். மிக விரைவில் அதுவும் வழங்கப்படும். என்னால் ஆங்கிலம் பேசும் அளவிற்கு இந்தி பேச முடியவில்லை என்பது வருத்தமாக உள்ளது. இந்தி திணிக்கப்படவில்லை. இந்தி கற்றுக்கொண்டு பேசினால் அதில் தவறில்லை. திராவிட இயக்கம் இந்தி கற்றுக்கொள்ளும் தனிமனித உரிமையைப் பறித்துள்ளது. தமிழகத்தில் விரைவில் பாஜக ஆட்சி அமைய வேண்டும்" என்றார்.












Click it and Unblock the Notifications