"அதிக வரி பிடிக்கப்போறாங்க".. ஆதாருடன் - பான் கார்டு இணைச்சாச்சா? வருமான வரித்துறை முக்கிய அட்வைஸ்
சென்னை: வருமான வரித்துறையின் சட்டத்தின்படி வரி செலுத்துவோர் கண்டிப்பாக பான் கார்டு மற்றும் ஆதார் கார்டை இணைத்து வைத்திருக்க வேண்டும். இதனை செய்யாவிட்டால் ஆபத்து காத்திருக்கிறது என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
நம் நாட்டில் முக்கிய ஆவணங்களாக ஆதார் கார்டு மற்றும் பான் கார்டுகள் உள்ளன. இந்த 2 கார்டுகள் இன்றி ஏறக்குறைய அரசின் எந்த சேவைகளையும் பெற முடியாது என்ற நிலை உருவாகி உள்ளது.

மேலும் சிம்கார்டு வாங்குவதற்கும் ஆதார், பான் கார்டுகள் தேவையாக இருக்கிறது. இதனால் நாட்டில் உள்ள அனைவருக்கும் ஆதார் கார்டு, பான் கார்டுகள் வைத்திருப்பது மிகவும் முக்கியமாகும். இதில் பான் கார்டை வருமான வரித்துறை வழங்குகிறது. ஆதார் கார்டை யுஐஏஐ வழங்கி வருகிறது.
அதேபோல் வருமான வரி செலுத்துவதற்கும் ஆதார், பான் கார்டுகள் முக்கியமான ஆவணங்களாக உள்ளன. அதுமட்டுமின்றி ஆதார் கார்டுடன் பான் கார்டை கட்டாயம் இணைத்து வைத்திருக்க வேண்டும் என்று வருமான வரித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது வருமான வரித்துறையின் 139AA சட்டப்பிரிவு என்பது வரி செலுத்தும் அனைவரும் ஆதார் கார்டு விபரங்களை தெரிவிக்க வேண்டும் என்பதை உறுதி செய்கிறது.
அதேபோல் ஆதார் - பான் கார்டை ஒன்றாக இணைத்து வைத்திருக்க வேண்டும் என்பதை வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. இதற்கான காலஅவகாசம் என்பது மே மாதம் 31ம் தேதியுடன் முடிவுக்கு வந்தது. தற்போது ரூ.1000 அபராதம் செலுத்தி ஆதார் - பான் கார்டை இணைக்கலாம். இதனை வரி செலுத்துவோர் கட்டாயம் செய்ய வேண்டும். அதுமட்டுமின்றி ஆதார் - பான் கார்டு ஒன்றாக இணைக்காமல் விடும் வரி செலுத்தும் மாத சம்பளதாரர்களுக்கு இரட்டிப்பு இழப்பு ஏற்படும்.
அதாவது ஆதார் - பான் கார்டு இணைக்க ரூ.1000 அபராதம் மட்டுமின்றி டிடிஎஸ் பொருந்தும் விகிதத்தில் அதிகப்படியான வரித்தொகை என்பது பிடித்தம் செய்யப்படும். இதனால் ஒருவேளை ஆதார், பான் இணைப்பு செய்யாவிட்டால் அதிக வரி செலுத்த நேரிடும். இதனால் அபராதம் + அதிக வரி செலுத்துவது என இரட்டிப்பு பண இழப்பை சந்திக்க நேரிடும். அதுமட்டுமின்றி பான் கார்டு என்பது செயல்படாமல் போக வாய்ப்புள்ளது. இருப்பினும் இதில் சிலருக்கு விதிவிலக்கு வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி பார்த்தால் ஜம்மு காஷ்மீர், அசாம், மேகாலயா மாநிலங்களில் வசிப்போர், சூப்பர் சீனியர் சிட்டிசன் என அழைக்கப்படும் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் நம் நாட்டில் குடியுரிமை அல்லாத வரி செலுத்துவோர் உள்ளிட்டவர்களுக்கு இதில் இருந்து விலக்கு வழங்கப்படுகிறது. இப்படி செய்வதன் மூலம் 7 முதல் 30 நாட்களில் ஆதார் கார்டு - பான் கார்டை இணைத்து விடலாம். மேலும் அனைத்து வகையான டிடிஎஸ் விபரங்களும் விண்ணப்பம் 26AS-ல் தெரிவது மட்டுமின்றி வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்யும்போது அதனை பயன்படுத்தி கொள்ளலாம்.
மேலும் ஆதார் - பான் கார்டு இணைப்பை ஒவ்வொருவரும் ஆன்லைன் மூலம் செய்ய முடியும். இதற்கு https://www.incometax.gov.in/iec/foportal/ வருமான வரி இணையதளம் செல்ல வேண்டும். அங்கு இடது புறத்தில் உள்ள குயிக் லிங்க்ஸ் (Quick Links) என்பதை கிளிக் செய்து லிங்க் ஆதார் என்பதை கிளிக் செய்ய வேண்டும். பிறகு பான் மற்றும் ஆதார் நம்பரை பதிவிட்டு கிளிக் செய்ய வேண்டும். அதன்பிறகு அபராதம் குறித்து 'உங்கள் கட்டண விவரங்கள் சரிபார்க்கப்பட்டன' என்று ஒரு பாப்-அப் மெசேஜ் வரும்.
அதன்பிறகு பான்-ஆதார் இணைப்பிற்கான கோரிக்கையைச் சமர்ப்பிக்க, கன்ட்டினியூ பட்டனை கிளிக் செய்து விவரங்களை கொடுத்து லிங்க் ஆதார் என்பதை கிளிக் செய்யதால் பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணுக்கு ஓடிபி வரும். அவ்வளவு தான் பான்-ஆதார் அட்டையை இணைப்பதற்கான உங்களது கோரிக்கை சமர்ப்பிக்கப்பட்டு விடும். இதை செய்ய தெரியாவிட்டால் பான் கார்டு மையம், கம்ப்யூட்டர் சென்டர்களுக்கு சென்று பான்- ஆதார் இணைப்பை மேற்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications