அடி மேல் அடி... சசிகலாவின் பையனூர் பங்களாவை முடக்கிய வருமான வரித்துறை... நிம்மதி இழந்த உறவினர்கள்..!
சென்னை: சசிகலாவுக்கு சொந்தமான பையனூர் பங்களாவை வருமான வரித்துறையினர் முடக்கியுள்ளனர். இதன் சந்தை மதிப்பு ரூ.100 கோடி வரை இருக்கும் எனக் கருதப்படுகிறது.
சொத்துகுவிப்பு வழக்கில் சிறைத்தண்டனையை அனுபவித்து கடந்த பிப்ரவரி மாதம் விடுதலையான சசிகலாவுக்கு அடுத்தடுத்து பல்வேறு சோதனைகள் வந்த வண்ணம் உள்ளன.

சிறைவாசத்துக்கு பிறகு இழந்த செல்வாக்கை மீட்டுவிடலாம் என எண்ணிய சசிகலா, தொடர்ந்து ஏமாற்றங்களையும் அதிர்ச்சிகளையும் மட்டுமே சந்தித்து வருகிறார். இருப்பினும் தனது மனத்தைரியத்தால் அவைகளை எல்லாம் துணிச்சலாக எதிர்கொண்டு அரசியல் ஆடுபுலி ஆட்டத்தின் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்குவதற்கான நேரத்திற்காக காத்திருக்கிறார்.
கடந்த 2017-ம் ஆண்டு ஜெயலலிதா, சசிகலா மற்றும் அவரது உறவினர்களுக்கு சொந்தமான 157 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. அதில் பினாமி சொத்துக்கள் என வகைப்படுத்தப்பட்ட சொத்துக்களை முடக்க வருமான வரித்துறை முடிவு செய்தது. அந்த வகையில் ஏற்கனவே சசிகலாவுக்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ள சூழலில், இப்போது பையனூர் பங்களாவும் முடக்கப்பட்டுள்ளது.
இந்த பையனூர் பங்களாவை பொறுத்தவரை இசையமைப்பாளர் கங்கை அமரனிடம் வாங்கப்பட்டது. ஜெயலலிதா பெயரை பயன்படுத்தி சசிகலா தரப்பு மிரட்டி பையனூர் பங்களாவை தன்னிடம் இருந்து வாங்கியதாக கங்கை அமரன் ஏற்கனவே குற்றஞ்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
பையனூர் பங்களா குறித்த ஆவணங்களை நன்கு விசாரித்து, அது பினாமி சொத்து எனக் கண்டறியப்பட்ட பின்னரே இந்த முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. மேலும், பினாமி சொத்துக்கள் குறித்த விசாரணையை தீவிரப்படுத்தியுள்ள வருமான வரித்துறை இனி அடுத்தடுத்து பல்வேறு அதிரடிகளை காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிறைக்குள் சொகுசாக இருக்க சசிகலா லஞ்சம் கொடுத்தார் என்ற குற்றச்சாட்டு இப்போது கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வேகமெடுத்துள்ள நிலையில், 100 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்தும் முடக்கப்பட்டிருக்கிறது. சசிகலாவை சூளும் இது போன்ற சோதனைகளால் அவரது உறவினர்கள் நிம்மதி இழந்துள்ளனர். இருப்பினும் சசிகலா இதனை வெளிக்காட்டிக்கொள்ளாமல் வழக்கமான உற்சாகத்துடன் இரண்டாவது அரசியல் இன்னிங்ஸ் குறித்த பணிகளில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளார்.












Click it and Unblock the Notifications