துணை ராணுவம் குவிப்பு.. ஸ்டாலின் மகள் வீட்டில் 12 மணி நேரமாக தொடரும் வருமான வரி சோதனை.. பரபரப்பு
சென்னை: திமுக தலைவர் ஸ்டாலின் மகள் செந்தாமரை சபரீசன் வீட்டில் இன்று காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். 4 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருவதால் பரபரப்பு நிலவுகிறது.
சென்னை நீலாங்கரையில் ஸ்டாலின் மகள் செந்தாமரை வீடு உள்ளது. இவரது கணவர் சபரீசன். இவர் திமுக தலைவர் ஸ்டாலின் பிரச்சாரங்களில் மிகவும் உதவிகரமாக செயல்பட்டு வர கூடியவர்.
இந்த நிலையில்தான் அவரது வீடு மற்றும் அலுவலகம் உள்ளிட்ட 4 பகுதிகளில் ஒரே நேரத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

எ.வ.வேலு இடங்கள்
ஏற்கனவே திருவண்ணாமலையில் திமுக மூத்த தலைவர் எ.வ.வேலு வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி இருந்தனர். இப்போது ஸ்டாலின் மகள் வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது.

ஸ்டாலின் தங்கிய இடம்
திருவண்ணாமலையில் நடைபெற்ற சோதனையின்போது ஸ்டாலின் தங்கி சென்ற, வேலு நடத்திவரும் கல்லூரி விடுதியிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி இருந்தனர் இதற்கு திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

கெடுபிடிகள்
சபரீசன் வீட்டில் நடைபெறக்கூடிய வருமான வரி சோதனையை முன்னிட்டு வீட்டில் இருக்கக்கூடிய யாரும் வெளியே உள்ளவர்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொள்வதற்கு வருமானவரித் துறையினர் தடை விதித்துள்ளனர். அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

துணை ராணுவம்
சோதனை நடைபெறும் இடங்களில் துணை ராணுவம் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டுள்ளது. 15 அதிகாரிகள் காலை 7.15 மணி முதல் சோதனைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். 3 துணை இயக்குநர்கள் இந்த சோதனைக்கு தலைமை வகித்துள்ளனர். 12 மணிநேரமாகும் நிலையிலும் ஐடி ரெய்டு நிற்கவில்லை. இந்த சோதனைக்கு திமுக பொதுச் செயலாளர் துரை முருகன் மற்றும் பல்வேறு கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஸ்டாலின் இதுபோன்ற பூச்சாண்டிகளுக்கு பயப்படமாட்டோம் என்று தெரிவித்துள்ளார்.