சசிகலாவிடம் 5 பேர் கொண்ட வருமான வரி குழு விசாரணை.. பெங்களூர் சிறையில்
சசிகலாவிடம் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்த உள்ளனர்
பெங்களூரு: பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலாவிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கடந்த ஆண்டு, நவம்பர் மாதம் சசிகலா குடும்பத்தாருக்கு சொந்தமான 187 இடங்களில் கடந்த 5 நாட்களாக வருமான வரித்துறையினர் ரெய்டு நடத்தினார்கள்.
இதில் ஏராளமான நகைகள், பணம், வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆவணங்கள் போன்றவற்றை வருமான வரித்துறையினர் கைப்பற்றினார்கள்.

மறுத்து விட்டது
எனவே சோதனையில் சிக்கிய பொருட்கள், ஆவணங்கள் குறித்து சசிகலாவிடம் விசாரணை நடத்த வருமான வரித்துறை, ஏற்கனவே சிறை அதிகாரிகளிடம் அனுமதி கேட்டிருந்தது. ஆனால், சசிகலா மவுன விரதம் இருப்பதால் அதற்கு அனுமதி அளிக்க சிறை நிர்வாகம் மறுத்துவிட்டது.

மீண்டும் கடிதம்
அதற்கு பிறகு 10 நாட்களுக்கு முன்பு மீண்டும் சசிகலாவிடம் 13, 14-ம் தேதிகளில் விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கேட்டு, இன்னொரு கடிதத்தை சிறை நிர்வாகத்திற்கு அனுப்பினார்கள்.

இன்று, நாளை விசாரணை
இதற்கு சிறை அதிகாரிகளும் ஒப்புக் கொண்டதுடன், 5 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் இந்த விசாரணையில் இடம்பெற வேண்டும் என்ற குறிப்பையும் தங்களது கடிதத்தில் தெரிவித்திருந்தார்கள். அதன்படி, இன்றும் நாளையும் சசிகலாவிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தவுள்ளனர்.

தனி அறை
இந்த இரு தினங்களிலும் அதிகாரிகள் சிறைக்கு சென்று சசிகலாவை ஒரு தனி அறையில் அமர வைத்து நேரடி விசாரணையில் இறங்குவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இன்று காலை வருமான வரித்துறை அதிகாரிகளின் விசாரணை தொடங்கியது. ஒரு பெண் உள்பட 5 பேர் அடங்கிய குழு விசாரணை மேற்கொண்டுள்ளது. மாலை வரை விசாரணை நடைபெறவுள்ளது. இதனால் சிறை வளாகம் பரபரப்பாக உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.












Click it and Unblock the Notifications