ஜி ஸ்கொயர் நிறுவனம் தொடர்புடைய இடங்களில் 2வது நாளாக ஐ.டி ரெய்டு.. 100க்கும் மேற்பட்ட இடங்களில் பரபர!
சென்னை : ஜி ஸ்கொயர் நிறுவனம் தொடர்புடைய அலுவலகங்களில் வருமான வரித் துறையினர் இன்று இரண்டாவது நாளாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர். நேற்று அதிகாலையில் தொடங்கி சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட இடங்களில் இந்தச் சோதனை நடைபெற்ற நிலையில், இன்றும் சோதனை தொடர்கிறது.
சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது ஜி ஸ்கொயர் ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான நிறுவனம். நேற்று காலை முதல் சென்னை, திருச்சி, கோவை உட்பட தமிழ்நாட்டில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் ஜி ஸ்கொயர் நிறுவன அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

சென்னையில் சேத்துப்பட்டு ஹாரிங்டன் சாலை, நுங்கம்பாக்கம், ஆழ்வார்பேட்டை, திருச்சி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித் துறையினரின் சோதனை நடைபெற்றது. அதேபோல் கர்நாடகா மற்றும் தெலுங்கானாவிலும் உள்ள ஜி-ஸ்கொயர் நிறுவனங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஒரே நேரத்தில் அதிக அளவு நிலங்களைக் கையகப்படுத்தியதாகவும், குறைந்த காலக்கட்டத்தில் அதிக வருமானம் ஈடுட்டியதாகவும் ஜி-ஸ்கொயர் நிறுவனம் மீதான புகாரின் அடிப்படையில் இந்த வருமான வரிச் சோதனை நடைபெற்று வருகிறது.
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை சமீபத்தில் ஜி ஸ்கொயர் நிறுவனம் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்ததுடன், இந்நிறுவனத்துடன் திமுகவின் முக்கிய பிரமுகர்களுக்குத் தொடர்பு இருப்பதாகவும் குற்றம்சாட்டி இருந்தார்.
இந்தப் பின்னணியில் ஜி ஸ்கொயர் நிறுவனத்தின் அலுவலகங்கள், அந்நிறுவன நிர்வாகிகளுக்கு சொந்தமான இடங்களில் நேற்று அதிகாலை தொடங்கி வருமான வரித்துறை சோதனை தீவிரமாக நடைபெற்றது. இந்நிலையில் ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்குத் தொடர்பான இடங்களில் இரண்டாம் நாளாக இன்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
ஜி ஸ்கொயர் நிறுவனத்தின் முக்கிய பொறுப்பில் இருக்கும், சுதிர், பிரவின்,பாலா, ஆதவ் அர்ஜூன் அண்ணா நகர் சட்டமன்ற உறுப்பினர் எம்.கே மோகனின் மகன் கார்த்திக் உள்ளிட்ட 19 நிறுவனங்கள், வீடுகளில் சோதனை இரண்டாவது நாளாக நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே, தங்கள் நிறுவனம் மீதுஅண்ணாமலை முன்வைத்த குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்றும், அண்ணாமலையின் இந்தக் குற்றச்சாட்டுகளால் பல ஆண்டு உழைப்பில் பெறப்பட்ட தமது வாடிக்கையாளர்களின் நம்பிக்கை சிதைக்கப்பட்டுள்ளதாகவும் ஜி ஸ்கொயர் நிறுவனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications