சுதந்திர தினவிழா கொண்டாட்டம்! நாளை இந்த ரோட்டில் போக முடியாது.. சென்னை டிராபிக் போலீஸ் அறிவிப்பு
சென்னை: சென்னை தலைமை செயலகத்தில் நாளை சுதந்திர தின விழா கொண்டாடப்படும் நிலையில் ஐந்தடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது. அதேபோல போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டிருக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15ம் தேதி தமிழக அரசு சார்பில் சென்னை தலைமை செயலகத்தில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல இந்த ஆண்டும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடியை ஏற்றி வைக்க இருக்கிறார். இதனையடுத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கிறது. சென்னை கோட்டை கொத்தளத்திற்கு, சென்னை மாநகர காவல்துறை ஆணையர் சந்தீப் ராய் ரத்தோட் தலைமையில், 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது.

இது தவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோயம்பேடு பஸ் ஸ்டான்ட், கடற்கரை, வழிபாட்டு தலங்கள், சென்னை விமான நிலையம், சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கிறது.
மேலும் தனியார் தங்கும் விடுதிகளில் திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. குற்ற பின்னணி உள்ள பழைய கைதிகள் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். அதேபோல சென்னையில் போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டிருக்கிறது. இது குறித்து போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "சென்னை கோட்டையில் நாட்டின் 76வது சுதந்திர நாள் விழா செவ்வாய்க்கிழமை (ஆக.15) கொண்டாடப்படவுள்ள நிலையில் காலை 6 மணி முதல் நிகழ்ச்சி முடியும் வரை அந்த பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதில், நேப்பியா் பாலம் முதல் போர் நினைவுச்சின்னம் வரையிலான காமராஜா் சாலை, போர் நினைவுச்சின்னத்திலிருந்து இந்திய ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை வடக்கு பகுதி வரையிலான ராஜாஜி சாலை மற்றும் கொடிமரச்சாலையில் அனைத்து வாகனங்களின் போக்குவரத்தும் தடை செய்யப்படும். காமராஜர் சாலையிலிருந்து ராஜாஜி சாலை வழியாக பாரிமுனையை நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் சுவாமி சிவானந்தா சாலை, அண்ணாசாலை, முத்துசாமி பாலம், ராஜா அண்ணாமலை மன்றம் மற்றும் வடக்கு கோட்டை பக்க சாலை வழியாக பாரிமுனையை வந்து அடையலாம்.
பாரிமுனையிலிருந்து ராஜாஜி சாலை வழியாக காமராஜா் சாலை நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் வடக்கு கோட்டை பக்க சாலை, ராஜா அண்ணாமலை மன்றம் சந்திப்பு, முத்துசாமி சாலை, ஈவிஆர் சாலை, பல்லவன் சாலை, அண்ணா சாலை, வாலாஜா சாலை வழியாக காமராஜா் சாலையை சென்றடையலாம். அண்ணா சாலையிலிருந்து கொடிமரச்சாலை வழியாக பாரிமுனை செல்லும் வாகனங்கள் வாலஜா சிக்னல் சந்திப்பு, முத்துசாமி பாலம், ராஜா அண்ணாமலை மன்றம், என்எப்எஸ் சாலை வழியாக பாரிமுனையை சென்றடையலாம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications