ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது!
இந்திய ஐடி சேவை நிறுவனங்கள் தற்போது ஒரு புதிய உத்தியை கையாண்டு வருகின்றன. செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சி காரணமாக புதிதாக திட்டத்தை பெறும் போதும் கட்டண நிர்ணயம் மற்றும் விலை அழுத்தம் அதிகரித்து, வளர்ச்சி அடைவது கடினமாகி வரும் நிலையில், பிற நிறுவனங்களை வாங்கி விரைவாக வளர்ச்சியை எட்டும் முயற்சியில்
ஈடுபட்டுள்ளன.
ஏஐ துறையில் முன்னேற வேண்டும் என்பது தான் ஒட்டுமொத்த ஐடி சேவை துறையின் இலக்கு, ஆனால் இந்த வளர்ச்சியை வேகமாக அடைய வேண்டும் என்பதற்காக M&A பிரிவில் காலம் காலமாக பின்தங்கி வந்த இந்திய ஐடி சேவை நிறுவனங்கள் தற்போது தீவிரமாக இறங்கியுள்ளது.

பெரும் தொகை முதலீடு
கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்திய ஐடி நிறுவனங்கள் சுமார் 7.1 பில்லியன் டாலர் அளவுக்கு பெரும் தொகையை முதலீடு செய்து சிறு நிறுவனங்களையும், வர்த்தகத்தையும் வாங்குதற்காக செலவிட்டுள்ளன.
இதுவே 2025-ம் ஆண்டில் பார்த்தால் 5 பில்லியன் டாலரும், 2026-ம் ஆண்டின் இதுவரை 2.1 பில்லியன் டாலரும் செலவிடப்பட்டுள்ளது என்று தொழில்நுட்ப ஆலோசனை நிறுவனமான UnearthInsight தெரிவித்துள்ளது.
முக்கிய ஒப்பந்தங்கள்
கடந்த 2 வருடத்தில் இந்திய ஐடி நிறுவனங்களின் மிகப்பெரிய M&A ஒப்பந்தம் என்றால் கோஃபோர்ஜ் (Coforge) நிறுவனம் டிசம்பர் 2025-ல் Encora என்ற நிறுவனத்தை 2.35 பில்லியன் டாலருக்கு வாங்கியது தான். அதைத் தொடர்ந்து டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) Coastal Cloud என்ற நிறுவனத்தை 700 மில்லியன் டாலருக்கு வாங்கியது. இந்த ஒப்பந்தங்கள் ஐடி துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.
சிறிய நிறுவனங்கள் தான் இலக்கு
தற்போதைய M&A செயல்பாடுகள் பெரும்பாலும் சிறிய அல்லது வளர்ச்சி குறைந்து வரும் நிறுவனங்களை ஒப்பீட்டளவில் குறைந்த விலையில் வாங்கும் வகையில் உள்ளன.
உதாரணமாக, மும்பை நிறுவனமான LTM, ஐரோப்பா மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள ரேன்ஸ்டாட் (Randstad) நிறுவனத்தின் தொழில்நுட்ப மற்றும் ஆலோசனைப் பிரிவை 170 மில்லியன் டாலருக்கு வாங்கியது. அதேபோல் ஹெக்ஸ்வேர் (Hexaware) மிகக் குறைந்த தொகையில் CPS என்ற நிறுவனத்தை வாங்கியுள்ளது.
பணம் தான் பிராதனம்
இந்த M&A செயல்பாடுகளில் பெரும்பாலும் இந்திய ஐடி நிறுவனங்கள் சொந்த பணத்திலிருந்து (Cash) வாங்குகின்றன. முன்பணம் அல்லது செயல்திறன் அடிப்படையிலான கூடுதல் தொகை என இரு வழிகளில் பணம் செலுத்தப்படுகிறது.
TCS, இன்ஃபோசிஸ், HCL டெக், விப்ரோ, டெக் மஹிந்திரா போன்ற முன்னணி நிறுவனங்கள் தங்களின் நிகர லாபத்தை விட அதிகமான பணப்புழக்கத்தை (Cash Flow) கொண்டுள்ளதால், இந்த பணத்தை வைத்து நிறுவனங்களை வாங்குகிறது.
AI தொழில்நுட்பம் காரணமாக சேவைகளின் விலை குறைந்து வரும் சூழலில், புதிய வாடிக்கையாளர்களைப் பெறவும், புதிய நாடுகளில் நுழையவும், சந்தைப் பங்கை அதிகரிக்கவும் சிறிய நிறுவனங்களை வாங்குவது உதவுகின்றன என்று தொழில்துறை வல்லுநர்கள் கூறுகின்றனர்.
இந்தப் போக்கு தொடர்ந்தால், இந்திய ஐடி துறை மேலும் வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், சிறிய நிறுவனங்களை வாங்கும் போது அவற்றின் வளர்ச்சித் திறனையும் சரியாக மதிப்பீடு செய்ய வேண்டும் என்பதும் தொழில்துறை வட்டாரங்களின் கருத்தாக உள்ளது.












Click it and Unblock the Notifications