சட்டம் ஒழுங்கை பேணிக்காக்கிறார் முதல்வர் ஸ்டாலின்... இந்திய யூனியன் முஸ்லீம் லீக் பாராட்டு..!
சென்னை: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை சிறப்பாக பேணிக்காப்பதாக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சித் தலைவர் காதர் மொகிதீன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
மேலும், சொன்னதை மட்டும் செய்யாமல் சொல்லாத பல நல்ல திட்டங்களையும் ஸ்டாலின் கொண்டு வந்துள்ளதாக புகழாரம் சூட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு;
ஒன்பது மாவட்டங்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 140 மாவட்ட கவுன்சிலர் பதவிகளில் 138 மாவட்ட கவுன்சிலர் பதவிகளையும் 74 ஊரக ஒன்றிய பதவிகளில் 73லும் 1,381 ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள் பதவிகளில் 1, 115 இடங்களில் திமுக கூட்டணி அமோகமாக வெற்றி பெற்று ஏறக்குறைய 95 சதவிகித வெற்றியை பெற்றிருக்கிறது.
கடந்த சட்டமன்ற தேர்தலைக் காட்டிலும் இந்த வெற்றி என்பது அளவிட முடியாததாகும். இந்த வெற்றிக்கு முழுமுதல் காரணமானவர் தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்தான். கடந்த ஆட்சியாளர்கள் தமிழகத்தை மிகப்பெரிய நிதி நெருக்கடியில் விட்டுச்சென்று விட்டனர்.ஆட்சிக்கு வந்த நான்கே மாதங்களில் 202 வாக்குறுதிகளை தமிழக முதல் அமைச்சர் நிறைவேற்றினார்.
திமுகவின் தாரக மந்திரம்"சொல்வதை செய்வோம் செய்வதை சொல்வோம்"என்பதாகும். ஆனால், சொல்லாததையும் இன்றைக்கு தமிழக முதல் அமைச்சர் செய்து வருகிறார். குறிப்பாக சட்டம் ஒழுங்கை சிறப்பாக பேணிக்காத்து வருகிறார். சமூக நல்லிணக்கத்தை பேணிக்காத்தும் மாநில உரிமைகளை நிலைநாட்டியும் வருகிறார். இதற்கெல்லாம் முத்தாய்ப்பு வைக்கும் வகையில்தான் தமிழக மக்கள் இந்த தேர்தல் முடிவை அளித்திருக்கிறார்கள்.
முதல் அமைச்சர் இது எங்களுடைய ஆட்சி அல்ல. நம்முடைய ஆட்சி என்றும் இது திமுகவிற்கு வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்ல, அனைவருக்கான ஆட்சி என்றும் எங்களுடைய செயல்பாடை பார்த்து ஓட்டு போடாதவர்களும் ஏன் போடாமல் விட்டுவிட்டோமே என்று வருத்தப்படும் அளவிற்கு எங்கள் ஆட்சியின் செயல்பாடு அமையும் என்று கூறினார்.
முதல் அமைச்சர் கூறியதுபோல இந்த குறுகியகால ஆட்சியில் செய்த நன்மைகளையும் இன்னும் செய்யப்போகும் ஏராளமான நன்மைகளை கருத்தில் கொண்டுதான் சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்காதவர்கள் இந்த 5 மாதங்களில் இப்போது நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தமிழக மக்கள் வாக்களித்துள்ளனர்.
'ஆரஞ்சு அலர்ட்..' கேரளாவில் கொட்டித் தீர்க்கும் கனமழை.. 2 குழந்தைகள் உட்பட 4 பேர் உயிரிழப்பு
வாக்களித்த தமிழக மக்களுக்கும் சிறப்பாக செயல் பட்ட கூட்டணி கட்சியின ருக்கும் எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். சிறப்பான முறையில் தேர்தலை நடத்தி முடித்திருக்கின்ற தமிழக தேர்தல் ஆணையம், தமிழக காவல் துறை தலைவர், அதிகாரிகள் அனைவருக்கும் எனது பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கிறேன்.