ராமநாதபுரம் தொகுதியை கொடுத்தால் பரவாயில்லை! திமுகவிடம் செல்லமாக அடம் பிடிக்கும் முஸ்லிம் லீக்!
சென்னை: நாடாளுமன்றத் தேர்தல் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையை திமுக தொடங்கியிருக்கும் நிலையில், ராமநாதபுரம் தொகுதியையே தங்களுக்கு மீண்டும் ஒதுக்கினால் பரவாயில்லை என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் செல்லமாக அடம் பிடிக்க ஆரம்பித்துள்ளது.
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியை பொறுத்தவரை திமுக கூட்டணியில் நீண்ட காலமாக அங்கம் வகிக்கும் ஒரு கட்சியாகும். இன்று நேற்றல்ல காயிதேமில்லத் காலம் தொட்டு திமுகவுடன் நட்புறவை பேணி வரும் கட்சி இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி. இடையே சில ஆண்டுகள் மனக்கசப்புகள் வந்து சென்றாலும் அக்கட்சியின் தேசியத் தலைவராக காதர் மொகிதீன் வந்ததிலிருந்து திமுகவுடன் சுமூகமாக உறவு பேணப்படுகிறது.

இந்நிலையில் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 2 எம்.பி.சீட்களை எதிர்பார்க்கும் முஸ்லீம் லீக், திமுக தொகுதி பங்கீட்டு குழு தங்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் போது அதுபற்றி பேச திட்டமிட்டுள்ளது. சிட்டிங் எம்.பி. தொகுதியான ராமநாதபுரத்தை மீண்டும் திமுகவிடம் கேட்போம் எனக் கூறும் காதர் மொகிதீன் கூடுதலாக 1 தொகுதியையும் கேட்போம் என நம்பிக்கை பொங்க தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் தொகுதி கிடைக்காவிட்டால் திருச்சி நாடாளுமன்ற தொகுதியையாவது தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்பது இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் எதிர்பார்ப்பாக உள்ளது. வேலூர் தொகுதியில் போட்டியிடும் திட்டத்தில் இல்லாத முஸ்லீம் லீக், ராமநாதபுரத்தை திமுக மறுக்கும் பட்சத்தில் திருச்சி தொகுதியை கேட்டு வாங்கிவிட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது.
இந்திய யூனியன் முஸ்லீம் லீக்குடன் திமுக விரைவில் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. ராமநாதபுரம் தொகுதியை திமுக மாணவரணித் தலைவர் ராஜீவ்காந்தி எதிர்பார்த்து காய் நகர்த்தி வருவது குறிப்பிடத்தக்கது. தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை குறித்த தகவல் ஸ்பெயின் சென்றுள்ள முதல்வர் ஸ்டாலினுக்கு அவ்வப்போது அப்டேட் செய்யப்படும் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications