சிங்கப்பூர் சென்றார் அமைச்சர் டிஆர்பி ராஜா.. பதவியேற்ற 10 நாளிலேயே முக்கிய பயணம்! என்ன விவரம்?
சென்னை : தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா இன்று சிங்கப்பூர் சென்றுள்ளார். கடந்த மே 11ஆம் தேதி அமைச்சராகப் பொறுப்பேற்ற டி.ஆர்.பி.ராஜா இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் சிங்கப்பூர் சென்றுள்ளார். முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் தொடங்கவுள்ள நிலையில் முன்கூட்டியே சிங்கப்பூர் சென்றுள்ளார் டிஆர்பி ராஜா.
தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அமைந்து 2 ஆண்டுகள் முடிந்த நிலையில், அமைச்சரவையில் 3வது முறையாக மாற்றம் செய்யப்பட்டது. பால்வளத் துறை அமைச்சராக இருந்த சா.மு.நாசர் நீக்கப்பட்டு, அவருக்குப் பதில் மன்னார்குடி எம்எல்ஏ-வும், திமுக பொருளாளர் டி.ஆர்.பாலுவின் மகனுமான டி.ஆர்.பி.ராஜா அமைச்சரவையில் சேர்க்கப்பட்டார்.

சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் கடந்த மே 11ஆம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில், புதிய அமைச்சராக டிஆர்பி.ராஜாவுக்கு, ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். புதிய அமைச்சராகப் பொறுப்பேற்ற டிஆர்பி.ராஜாவுக்கு, அமைச்சர் தங்கம் தென்னரசு கவனித்து வந்த தொழில் துறை ஒதுக்கப்பட்டது.
பதவியேற்ற பிறகு பேசிய அமைச்சர் டி.ஆர்.பி ராஜா, "முதல்வரின் வழிகாட்டுதலின்படி, தொழில் துறையில் தமிழகம் தொடர்ந்து முன்னிலை வகிக்கப் பாடுபடுவேன். விவசாயம் சார்ந்த தொழிற்பேட்டை, டெல்டா பகுதியில் அமைக்கப்படும். தொழில் முதலீடுகளில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. முதலீடுகளை ஈர்ப்பதற்காக சிங்கப்பூர், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கு முதல்வர் செல்கிறார். அவரது பயணத்துக்கான ஏற்பாடுகளை, நான் மேற்கொள்ள உள்ளேன்" எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில், இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் சிங்கப்பூர் சென்றுள்ளார் தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா. சென்னையில் 2024 ஜனவரியில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டின் மூலம் தமிழ்நாட்டிற்கு அதிக தொழில் முதலீடுகளை ஈர்க்க அரசு திட்டமிட்டு வருகிறது. இதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மறுநாள் (மே 23) வெளிநாடுகளுக்குச் செல்கிறார்.
சிங்கப்பூர், ஜப்பான், இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு அரசு முறை பயணமாக சென்று தொழில் அதிபர்களை சந்தித்து தமிழ்நாட்டில் தொழில் தொடங்க அழைப்பு விடுக்க உள்ளார். இதையொட்டி முதலமைச்சரின் நிகழ்ச்சி முன்னேற்பாடுகளை கவனிக்க தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் சிங்கப்பூர் சென்றுள்ளார்.
முதலமைச்சர் ஸ்டாலினுடன் இணைந்து தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக சிங்கப்பூர், ஜப்பான், இங்கிலாந்து நாடுகளுக்குச் செல்லவுள்ளார் தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா. அதற்காக முன் கூட்டியே அவர் சிங்கப்பூர் சென்றுள்ளார். அமைச்சராகப் பொறுப்பேற்ற ஒரு வாரத்திலேயே டிஆர்பி ராஜா முக்கியமான வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டுள்ளது கவனிக்கப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications