பெண்கள் இழிவு...அழுத்தமா...ஏன் நடவடிக்கை இல்லை...இந்திய தவ்ஹீத் ஜமாஅத் கேள்வி!!
சென்னை: சமூக வலைதளங்களில் பெண்கள் குறித்து இழிவாக கருத்துகள் பதிவிடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்திய சமூகத்தில் பெண்கள் கல்வி,தொழில்துறை,மருத்துவம் மற்றும் ஊடகங்களில் ஏனைய வளர்ந்த நாடுகளின் பெண்களுக்கு இணையான பங்கை கொடுத்து வருகிறார்கள் என்று இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தவ்ஹீத் ஜமாஅத் துணைப் பொதுச்செயலாளர் முஹம்மது ஷிப்லி விடுத்து இருக்கும் அறிக்கையில், ''இந்திய சமூகம் சந்தித்துக் கொண்டு வரும் ஆண்,பெண் பாரபட்சம், நீதியின்மை, பாலியல் வன்முறை, வகுப்புவாதம், மதவாத அரசியல், சிறுபான்மை வெறுப்பு, ஆணவக் கொலைகள் என பல்வேறு சமகாலப் பிரச்சனைகளுக்கு எதிராக பெண் செயல்பாட்டாளர்களும்,பெண் ஊடகவியலாளர்களும், கூர்மையாக எழுதியும்,பேசியும் வருகிறார்கள்.

இவர்களின் எழுத்தும்,பேச்சும் மக்கள் மத்தியில் கருத்துப் புரட்சியையும்,சரியான புரிதலையும் உருவாக்குகிறது. இதனால் எரிச்சலடைகின்ற வகுப்புவாத, மதவாத சக்திகள் பெண் ஆளுமைகள் குறித்து ஆபாசமாகவும், இழிவாகவும் சமூக ஊடகங்களில் எழுதியும், பேசியும் மன உளைச்சலை தருகிறார்கள். இதன் மூலம் அவர்களின் குரல் பாதிக்கப்பட்டோர் பக்கம் ஒலிக்காமல் இருக்க தடுக்க முயல்கிறார்கள்.
வகுப்புவாத, மதவாத சக்திகளால் தாக்கப்பட்ட பெண்கள் பலர் பல்வேறு புகார்கள் காவல்துறையில் அளித்திருந்தும் அரசியல் அழுத்தம் காரணமாகவே நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர் என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் பரவலாக எழுந்துள்ளது. இது தமிழக காவல்துறை மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கையையும், நன்மதிப்பையும் குலைத்துவிடும் என்பதில் சந்தேகமில்லை.
எனவே,தமிழக அரசும்,காவல்துறையும் அரசியல் அழுத்தங்களுக்கு அஞ்சாமலும், தயக்கமின்றியும், சமூக வலைதளங்களில் பெண்கள் குறித்து ஆபாசமாக, இழிவாக கருத்துகள் பதிவிடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று வலியுறுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications