கிண்டி ரேஸ் கோர்ஸில் பசுமை பூங்கா அமைக்க தடை.. தேசிய பசுமை தீர்ப்பாயம் கொடுத்த ஷாக்.. காரணம் என்ன?
சென்னை: கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் தேசிய பசுமைப் பூங்கா அமைப்பதற்கு தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம் இடைக்கால தடை விதித்துள்ளது. இதே இடத்தில் ஏரி அமைக்கக் கோரிய மனு மீதான விசாரணையில் தலைமைச் செயலாளர் அறிக்கை தாக்கல் செய்யும் வரை பசுமைப் பூங்கா அமைக்கும் நடவடிக்கையை மேற்கொள்ள கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் கிண்டியில் உள்ள ரேஸ் கோர்ஸ் மைதானம் குதிரை பந்தயம் நடத்தும் இடமாக இருந்து வந்தது. இதுதொடர்பாக வழக்கு தொடரப்பட்ட நிலையில், ரேஸ் கோர்ஸில் நடக்கும் செயல்களில் எந்தப் பொதுநலனும் இல்லை. அந்த நிலத்தை மெட்ராஸ் ரேஸ் கிளப் நிர்வாகம் உள்வாடகைக்கு விட்டு பெரும் தொகையை சம்பாதித்து வருகிறது.

பசுமை பூங்கா
இதனால் தமிழக அரசு அந்த நிலத்தை மீட்டு வளர்ச்சி திட்டங்களுக்கு பயன்படுத்தலாம் என்று தெரிவித்தது. தொடர்ந்து தமிழக அரசு வருவாய் துறை மூலமாக ரேஸ் கோர்ஸ் இடத்தை மீட்டது. இதனைத் தொடர்ந்து கிண்டியில் பசுமை பூங்கா அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. அதுமட்டுமல்லாமல் மழை நீரை சேமிக்கும் வகையில் 4 குளங்கள் அமைக்க சென்னை மாநகராட்சி ஈடுபட்டது. அதேபோல் 118 ஏக்கர் நிலம் பசுமை பூங்கா அமைக்க தோட்டக்கலைத்துறைக்கு மாற்றப்பட்டது.
பசுமை பூங்காவில் அமையும் வசதிகள்
அதேபோல் 118 ஏக்கரில் பசுமை பூங்கா அமைப்பதற்கான திட்ட அறிக்கை, வடிவமைப்பு ஆகியவற்றை தயார் செய்ய தமிழக அரசு டெண்டர் கோரியது. பசுமை பூங்காவில் மலர்படுகைகள், தோட்டங்கள், மலர் சுரங்க பாதைகள், பறவைகளுக்கான தனி இடம், வண்ணத்துப்பூச்சிக்கான தோட்டம், நீர்வீழ்ச்சிகள், கண்ணாடி மாளிகைகள், குழந்தைகள் விளையாடுவதற்கான இடங்கள் உள்ளிட்ட வசதிகள் உருவாக்கப்பட இருந்தன.
118 ஏக்கரில் ஏரி அமைக்கலாமா?
இந்த நிலையில் சென்னை வேளச்சேரி ஏரி வரத்துக் கால்வாய் ஆக்கிரமிப்பு மற்றும் ஏரியில் கழிவுநீர் கலப்பது தொடர்பாக தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்கு ஒன்றை விசாரணைக்கு எடுத்தது. இந்த வழக்கை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம், மழை வெள்ள பாதிப்பில் இருந்து வேளச்சேரியைப் பாதுகாக்கும் வகையில் ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் 118 ஏக்கர் நிலத்தில் ஏன் ஏரி அமைக்கக்கூடாது? என்று கேள்வி எழுப்பியது.
தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு
தொடர்ந்து, இதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்யத் தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. இந்த சூழலில் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. இதன் காரணமாக அறிக்கை தாக்கல் செய்யப்படும் வரை கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் பசுமை பூங்கா அமைக்க தொடர்பான நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது.












Click it and Unblock the Notifications