4-வது நாளாக சென்னையில் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்.. எழிலகத்தை முற்றுகையிட முயன்றதால் கைது
சென்னை: சம வேலைக்கு சம ஊதியம் கோரியும், திமுக தேர்தல் வாக்குறுதி எண் 311 ஐ நிறைவேற்ற வலியுறுத்தியும் இடை நிலை ஆசிரியர்கள் சென்னையில் இன்று 4-வது நாளாக போராட்டம் நடத்தினர். அப்போது சாலை மறியலில் ஈடுபட்ட அவர்கள் எழிலகத்தை முற்றுகையிட முயன்றனர். இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்து வாகனங்களில் அழைத்து சென்றனர். அப்போது போலீசார் ஆசிரியர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பான சூழல் உண்டானது.
திமுக கடந்த சட்டமன்ற தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளில் ஒன்று சம வேலைக்கு சம ஊதியம் தரப்படும் என்பது. தேர்தல் வாக்குறுதி 311 ஆக இந்த வாக்குறுதியை திமுக அளித்த நிலையில், ஆட்சி முடிவடையும் நிலையிலும் இதனை நிறைவேற்றவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.

4வது நாளாக போராட்டம்
இடை நிலை ஆசிரியர்கள் சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 3 நாட்களாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். சென்னையில் நேற்று முன்தினம் பள்ளிக் கல்வி இயக்குனரக அலுவலகத்தை இடைநிலை ஆசிரியர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தை தொடங்கினர். கடந்த சனிக்கிழமையும் சென்னையில் கூடிய அவர்கள் எழும்பூரில் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராடினர்.
நேற்றும் 3 வது நாளாக கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் கைது செய்யப்பட்டு அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர். இதையடுத்து இன்றும் 4 வது நாளாக சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி போராட்டம் நடத்தினர். சென்னை எழிலகத்தினை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
விரைவில் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்
அப்போது அவர்களை போலீசார் கைது செய்தனர். இதனால் அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சாலையின் நடுவே அமர்ந்து கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி கோஷங்கள் எழுப்பினர். இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர்.
எந்த வித நிபந்தனையும் இன்றி போர்க்கால அடிப்படையில் விரைவில் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். இல்லெயெனில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்றும் கூறினார்கள். கோரிக்கையை நிறைவேற்ற கூறி போராடினால் கூட அதற்கும் இந்த அரசு அனுமதி மறுக்கின்றது என்றும் கூறினர்.

போலீசார் இடையே தள்ளுமுள்ளு
தொடர்ந்து போராட்டக்காரர்கள் உழைப்பாளர் சிலை அருகே சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சம வேலைக்கு சம ஊதியம் கோரிக்கையை நிறைவேற்ற கோரி பதாகைகளை ஏந்தியபடி போராட்டம் செய்தனர். தொடர்ந்து போலீசார் அவர்களை கைது செய்ய முயன்ற போது அவர்கள் அங்கிருந்து எழ மறுத்தனர்.
இதையடுத்து போலீசார் அவர்களை குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்தனர். இதில் ஒரு சிலர் கைதாக மறுப்பு தெரிவித்ததால் போலீசார் ஆசிரியர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு உண்டானது.












Click it and Unblock the Notifications