இதழில் கதை எழுதும் நேரமிது - முத்தத்தின் புராண கதை பற்றி சில சுவாரஸ்ய தகவல்கள்
முத்தமிடும் பழக்கத்தை கண்டு பிடித்தது யார் என்று தெரியாது அந்த செயலுக்கு முத்தம் என பெயர் வைத்தது யாரோ எவரோ ? ஆனால் இதனை கண்டு பிடித்து பரப்பியவர் காதலுக்கு புகழ்பெற்ற நம் புராணகால இந்திரன் தான்.
சென்னை: இன்று சர்வதேச முத்த தினத்தை உலகம் கொண்டாடிக்கொண்டிருக்கிறது. அதன் நல்லது கெட்டதுகளை, நன்மை தீமைகளை தீவிரமாக ஆராய்ந்து கொண்டிருக்கிறது. முத்தம் இந்த உலகத்தில் என்றைக்குத் தோன்றியது, முதல் முத்தம் யாருக்கு யாரால் கொடுக்கப்பட்டது, அல்லது எந்த இனக் குழுவுக்கு இந்தப் பழக்கம் இருந்தது என்ற கேள்விகளுக்கு விடை இல்லை.
இந்த முத்தமிடும் பழக்கத்தை கண்டு பிடித்தது யார் தெரியுமா ? அந்த செயலுக்கு முத்தம் என பெயர் வைத்தது யாரோ எவரோ ? ஆனால் இதனை கண்டு பிடித்து பரப்பியவர் காதலுக்கு புகழ்பெற்ற நம் புராணகால இந்திரன் தான் என்று கூறியுள்ளார் எழுத்தாளர் மு.ரா.சுந்தரமூர்த்தி.
இந்திரலோகம் என்பதே ஒரு உல்லாசபுரி தான். அங்கே ரம்பை, மேனகை, ஊர்வசி , திலோதமை என்று ஏராளமான அழகிகள் , நடனமாதுகள் உண்டு. ஆனாலும் இந்திர முத்ததை பழகியது இவர்களிடம் இருந்து அல்ல. அவன் முத்தமிட பழகியது ஒரு பூலோக மங்கையிடம் இருந்து தான்.
பூலோகத்தில் ஆதிநாளில் ஒரு முனிவர் இருந்தார். அவருக்கு ஒரு மகள். அவளுக்கு தோலில் ஏதோ பிரச்னை , அது கடுமையாகி பார்க்கவே கொடூரமாகி விட்டது. முனிவரும் மகள் குணமடைய வேண்டி எத்தனையோ மருவத்துவர்களிடம் காண்பித்து விட்டார்.
எந்த மருந்திலும் அவளது தோல் நோய் குணமடையவில்லை. அவளோ இளம்பெண் திருமணம் செய்ய வேண்டிய பருவத்தினள். அவளுக்கு இப்படி ஒரு பிரச்சனை என்றால் யார் அவளை மணக்க முன் வருவார்கள். முனிவரின் கவலை அதிகரித்தது.
ஒருநாள் முனிவரை பார்க்க ஒரு ரிஷி வந்தார். முனிவரின் கவலை படர்ந்த முகத்தை பார்த்துவிட்டு என்ன பிரச்சனை என்னிடம் கூறுங்கள் முடிந்தால் தீர்த்து வைக்க முயற்சிக்கிறேன் என்றார்.
முனிவர் தான் மகளின் நிலையை எடுத்துச் சொன்னார். எத்தனையோ வைத்தியம் பார்த்தும் பலனில்லை என வருத்தப்பட்டார். அதனை கேட்ட ரிஷி உங்கள் மகள் ஜாதகத்தில் தோஷம் இருக்கிறது... அது நிவர்த்தியானால் தோல் நோய் போய் விடும் என்று சொன்னார்.
அப்படியா ? என பெருமூச்சு விட்ட முனிவர். என் மகளின் தோஷ நிவர்த்திக்கு என்ன தான் பரிகாரம் எனக்கேட்டார். அதற்கு ரிஷி , உங்கள் மகள் தோஷ நிவர்த்திக்கு இந்திரன் வழிபாடு ஒன்று தான் வழி என்று கூறினார்.
வேத காலத்தில் இந்திரன் வழிபாடு பிரபல்யமாக இருந்த ஒன்று. அவரிடம் இருந்து இந்திர வழிபாட்டு முறைகளை கேட்டறிந்த முனிவர்... அவர் புறப்பட்ட பின் மகளை அழைத்து விபரங்களை சொன்னார்.
இந்திரனை மகிழ்விக்க, அவனது வழிபாட்டில் சுராபான, சோமபான நிவேதனம் முக்கியமானதாக இருந்தது. முனிவரின் மகள் சோமபான தயாரிப்புக்கான பணிகளில் இறங்கினாள். சோமபானம் ஒருவகை தாவர வேரின் சாற்றில் இருந்து எடுக்கப்படும் ஒன்றாகும்.
அந்தவேரை தேடி வனந்தாரங்களில் அலைந்த முனிவர் மகள். ஓரிடத்தில் அதனை கண்டு பிடித்தாள். சாறு எடுக்கும் பக்குவத்தில் வேர் முற்றி இருக்கிறதா என அறிய அதனை பற்களால் கடித்து பார்த்தாள். வேரிலிருந்து வெளிப்பட்ட சாற்றின் மணம் இந்திரலோகம் வரை சென்றது.
இந்திரன் துடித்து எழுந்தான் நமக்கு நிவேதனம் செய்ய யாரோ சோமபான சாறு எடுக்கிறார்கள் என அறிந்து , அவள் இருக்கும் இடத்திற்கே நேராக வந்து விட்டான்.
அவள் கையில் எதும் இல்லை. ஆனால் சோமபான வேரின் சாறு அவள் வாயில் இருந்தது. இந்திரன் அப்படியே அவள் இதழோடு இதழ் வைத்து சாறை உறிஞ்சி அருந்தினான்.
சோமபான போதை எப்போதையும் விட பன்மடங்காகவும் தனிச் சுவையாகவும் இருந்தது. அது எப்படி என்று யோசிக்கும் வேளையில், அது அவள் இதழின் ரசம் என விளங்கியது.
அப்புறமென்ன முத்தப் பறிமாற்றம் உச்சம் அடைந்தது . இப்படி தொடங்கி முத்தப் பழக்கம் இன்று பற்பல பரிணாமங்களுடன் அன்பின் பறிமாற்றமாக காதலின் பறிமாற்றமாக, கூடலின் முன்னோட்டமாக உலகேங்கும் உலா வருகிறது .
எப்படியாக இருந்தாலும் உளவியல்ரீதியாகப் பார்த்தால் முத்தம் ஒரு மனிதனுக்கு மிகவும் அவசியம் என்கின்றனர் மனநல மருத்துவர்கள்.