விஜய் எனக்கு மாமனா மச்சானான்னு கேட்ட தினகரன்! "எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்கிறேன்"னு காமராஜ் சவால்
சென்னை: என்கிட்ட இவ்வளவு கேள்வி கேட்குறீங்கல்ல! விஜய்யிடம் ஒரே ஒரு பேட்டி எடுத்து போடுங்க, நான் எனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிடுகிறேன் என மன்னார்குடி எம்எல்ஏ காமராஜ் தெரிவித்துள்ளார்.
சென்னை அடையாறில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, காணாமல் போனதாக தாம் ஆளுநரிடம் புகார் அளித்திருந்த அமமுக எம்.எல்.ஏ. காமராஜ் விவகாரம் மற்றும் தவெகவின் குதிரைப் பேர நடவடிக்கைகள் குறித்து அவர் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

காமராஜ் கையெழுத்திட்டதாகக் கூறப்படும் கடிதம் மற்றும் காரில் அமர்ந்தபடி எடுக்கப்பட்ட வீடியோவின் நம்பகத்தன்மை குறித்து தினகரன் கேள்வியெழுப்பினார். இந்த வீடியோவை தவெகவினர் ஆணவத்துடனும், வன்மத்துடனும் வெளியிட்டுள்ளதாகவும், இது செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) மூலம் உருவாக்கப்பட்டிருக்கலாம் எனவும் அவர் சந்தேகம் தெரிவித்தார்.
தனது ஒப்புதலின்றி கடிதம் கொடுத்து கூட்டணிக்குள் குழப்பம் விளைவிப்பதுடன், தம்மை மிரட்டவும் தவெக முயல்வதாக தினகரன் குற்றம்சாட்டினார். தனது கட்சி எம்.எல்.ஏ. ஆதரித்திருந்தால், அவரை ஆளுநர் மாளிகைக்கு ஏன் அழைத்துச் செல்லவில்லை என்றும் அவர் வினவினார்.
நடிகர் விஜய்யையும் தவெகவையும் கடுமையாக விமர்சித்த தினகரன், "விஜய் 108 சீட் வென்றிருந்தால் எனக்கு என்ன.? விஜய் எனக்கு என்ன மாமனா? மச்சானா? நாங்கள் ஏன் தவெகவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்? விஜய் பெரிய ஹீரோவாக இருந்தால் எனக்கு என்ன?" என்று ஆவேசமாகக் கூறினார்.
முதல்-அமைச்சர் ஆவதற்காக விஜய் மோசடியில் ஈடுபடுவதாகவும், போலி ஆதரவு கடிதத்தின் பின்னணியில் அவரே இருப்பதாகவும் தினகரன் பகிரங்கமாக குற்றஞ்சாட்டினார். இதுபற்றிக் கவர்னரிடமும், காவல்துறையிடமும் புகார் அளித்திருப்பதாகக் குறிப்பிட்ட அவர், மக்களுக்கு தவெக விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
"ஊழலை ஒழிப்பேன் எனச் சொல்லிவிட்டு, முதல்-அமைச்சர் ஆவதற்கே ஊழல் செய்பவர் தவெக தலைவர் விஜய்," என தினகரன் சாடினார். "ஆட்சி அமைப்பதற்கே இவ்வளவு மோசடி செய்யும்போது, ஆட்சி அமைத்தால் பேரழிவுதான்" என்றும் அவர் எச்சரித்தார்.
இதனைத் தொடர்ந்து மன்னார்குடி தொகுதி வெற்றி வேட்பாளர் காமராஜ் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். "108 எம்.எல்.ஏ.க்கள் வைத்திருக்கிற விஜய் ஏன் இந்தவாறு முயற்சி செய்கிறார். மெஜாரிட்டி இருந்தால் தான் ஆட்சி அமைக்க வேண்டும். இல்லை என்றால் விட்டு விட்டு செல்ல வேண்டியதுதானே.. அடுத்த ஆப்சன் என்ன என்று நீங்கள் கவர்னரிடம் கேளுங்கள்," எனக் குறிப்பிட்டார்.
மேலும், "விஜய்யை உங்களால் (செய்தியாளர்கள்) பேட்டி எடுக்க முடியுமா..? உங்கள் அனைவரிடமும் கேட்கிறேன் விஜய்யிடம் ஒரு பேட்டி எடுத்து வாருங்கள்.. நான் எனது எம்.எல்.ஏ.பதவியை ராஜினாமா செய்கிறேன்," என காமராஜ் செய்தியாளர்களுக்கு சவால் விடுத்தார்.












Click it and Unblock the Notifications