"நான் ஸ்ட்ரெயிட்டா பீகாருக்கே பேசிட்டேன்" வட மாநில தொழிலாளர்கள் விவகாரத்தில் அண்ணாமலை!
தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என அண்ணாமலை பேட்டியளித்துள்ளார்
சென்னை: தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். அதேபோல தான் பீகார் பாஜக மாநில தலைவரிடம் பேசியதாகவும் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சோஷியல் மீடியாக்களில் இரண்டு வீடியோக்கள் பரவின. இது பீகார் மாநிலத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. அம்மாநில எதிர்க்கட்சியாக உள்ள பாஜக, தமிழ்நாட்டில் பீகார் இளைஞர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும், இதற்கு தமிழ்நாடு அரசுடன் பீகார் மாநில அரசும் சேர்ந்து துணை போகிறது எனவும் குற்றம் சாட்டியது. இதற்கு அம்மாநில துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ், முதலமைச்சர் நிதிஷ் குமார் ஆகியோர் விளக்கமளித்தனர்.
ஆனால் இந்த விளக்கத்தை ஏற்க மறுத்த பாஜக, சட்டமன்ற கூட்டத்தை கூட்ட விடாமல் அமளியில் ஈடுபட்டது. கடந்த இரண்டு நாட்கள் நடந்த இந்த அமளியையடுத்து அம்மாநில அரசு காவல்துறை அதிகாரிகள் அடங்கிய ஒரு குழுவை அமைப்பதாகவும், அக்குழு தமிழ்நாட்டிற்கு சென்று உண்மை நிலவரத்தை கண்டறியும் எனவும் கூறியிருந்தார். அதன்படி அதிகாரிகள் குழு இன்று தமிழ்நாடு வருகிறது. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பீகார் மாநில தலைவரிடம் விளக்கியுள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

அண்ணாமலை
இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், "வடமாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் சிறப்பாக, பாதுகாப்பாக இருக்கிறார்கள். இன்று காலை எனக்கு பீகார் பாஜக மாநில தலைவர் என்னை போனில் அழைத்து தமிழ்நாட்டில் இதுபோன்று பாதுகாப்பு பிரச்னைகள் இருக்கிறது என்று கூறினார். நான் உடனடியாக அதனை மறுத்து, அப்படியெல்லாம் கிடையாது. இங்கு வடமாநில மக்கள் சிறப்பாக இருக்கிறார்கள். நீங்கள் கூறுவதை போல நாங்கள் எதையும் நடக்க விடமாட்டோம். தமிழக காவல்துறை வட மாநில மக்களுக்கு பாதுகாப்பாக இருக்கிறது. அரசும் இந்த விஷயத்தில் அவர்களுக்கு துணை நிற்கிறது.

பார்த்து பேச வேண்டும்
எனவே இதுபோன்று தகவல்களை பரப்ப வேண்டாம் என்று அவருக்கு கூறினேன். தமிழ்நாட்டிற்கு அவப்பெயர் வந்தால் அதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். இந்த விஷயத்தில் வதந்தி பரப்புவோர் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே நேரத்தில் சில அரசியல் தலைவர்களும் பக்குவமாக பேச வேண்டும். மேடையில் மைக் இருக்கு, கை இருக்கு, வாய் இருக்கு என அரசியல் தலைவர்கள் உஷ்ணமாக பேசிவிட்டால் அடிமட்டத்தில் தொண்டர்கள் இன்னும் ஆக்ரோஷம் ஆகிவிடுவார்கள். எனவே எங்காவது தப்பு தவறுகள் நடந்துவிடும். எனவே வடமாநில தொழிலாளர்கள் விஷயத்தில் தமிழ்நாட்டில் எந்த பிரச்னையும் கிடையாது" என்று கூறியுள்ளார்.

எச்சரிக்கை
முன்னதாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த டிஜிபி சைலேந்திரபாபு, "வடமாநில காவல்துறை அதிகாரிகளிடம் உண்மை நிலவரத்தை எடுத்து கூறியிருக்கிறோம். எனவே தேவையற்ற வதந்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர்களுக்கு குறைந்தப்பட்சம் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்படும்" என்று எச்சரித்திருந்தார்.

கண்டனம்
அதேபோல நிலையின் தீவிரத்தை உணர்ந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசனுடன் தலைமை செயலகத்தில் அவசர ஆலோசனை மேற்கொண்டார். இதனையடுத்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், "இது போன்று வதந்தி பரப்புவோர்கள் இந்திய நாட்டிற்கும், நாட்டின் ஒருமைப்பாட்டிற்கும் எதிரானவர்கள். சமூக ஊடகங்களில் இப்படி கீழ்த்தரமாக சிலர் அரசியல் செய்வது கடும் கண்டனத்திற்குரியது" என்று சாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications