திருப்போரூர் முருகன் கோயில் உண்டியலில் விழுந்த ஐபோன் இன்று ஒப்படைப்பு! சேகர்பாபு தகவல்
சென்னை: திருப்போரூர் முருகன் கோயில் உண்டியலில் விழுந்த ஐபோன் அதன் உரிமையாளரிடம் இன்று ஒப்படைக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் கந்தசாமி திருக்கோயிலில் 6 மாதங்கள் கழித்து உண்டியல் திறக்கப்பட்டது. அதில்ரூ 52 லட்சம் ரொக்கம், 289 கிராம் தங்கம் , 620 கிராம் வெள்ளி இருந்தது. இத்துடன் ஒரு ஐபோனும் இருந்தது. இது யாருடையது என கோயில் நிர்வாகத்தினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போதுதான் அந்த போன், சென்னை அம்பத்தூர் விநாயகபுரத்தைச் சேர்ந்த தினேஷ் என்பவருக்கு சொந்தமானது என கண்டறியப்பட்டது.

இதுகுறித்து தினேஷுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே தினேஷ் திருப்போரூர் கோயிலுக்கு வந்து தனது போனை பெற்றுக் கொள்ளலாம் என தனது குடும்பத்தினருடன் வந்துள்ளார். ஆனால் கோயில் நிர்வாகத்தினர் உண்டியலில் போட்ட அனைத்து பொருட்களும் முருகனுக்கே சொந்தம் என கூறி போனை தர மறுத்துவிட்டனர்.
அந்த போனின் விலை ரூ 1.50 லட்சம் என்று சொல்லியும் செல்போனை திருப்பி கொடுக்க கோயில் நிர்வாகமோ மறுத்துவிட்டது. வேண்டுமானால் உங்கள் போனில் இருக்கும் தரவுகளை எடுத்துக் கொண்டு போனை கொடுங்கள் என்றனராம். இதையடுத்து அந்த போனில் இருந்த போட்டோக்கள், வீடியோக்கள், கான்டாக்ட்கள், முக்கிய மெசேஜ்களை தினேஷ் எடுத்துக் கொண்டதும், போனை மறக்காமல் கோயில் நிர்வாகம் கேட்டு வாங்கிக் கொண்டனராம். இதற்கு பலர் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் கடந்த டிசம்பர் 29ஆம் தேதி அன்று புத்தாண்டுக்கான புதிய காலண்டரை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது: ஐபோன் குறித்து மகிழ்ச்சிகரமான முடிவு வரும் ஜனவரி 2 அல்லது 3 தேதிகளில் எடுக்கப்படும் என்றார்.
இந்த நிலையில் இன்றைய தினம் சேகர்பாபு பேட்டி அளித்த போது உண்டியலில் விழுந்த ஐபோன் இன்று உரியவரிடம் ஒப்படைக்கப்படும் என தெரிவித்துள்ளார். இதனால் அந்த போனின் உரிமையாளர் மகிழ்ச்சியடைந்துள்ளார்.












Click it and Unblock the Notifications