ஆளுநரை அதிமுக பாதுகாக்கிறது..? ரவி வெளியேறியது தவறு! அடித்து சொல்கிறார் ஷ்யாம்
சென்னை: அண்ணா பல்கலைக் கழகம் உள்ளிட்ட பல இடங்களில் துணைவேந்தர் பதவி நிரப்பப்படாமல் இருப்பதற்கு ஆளுநர் ரவியின் அலட்சியப் போக்குதான் காரணம் என்றும் ஆகவே அவரைக் கண்டிக்க வேண்டிய கடமை எதிர்க்கட்சியான அதிமுகவுக்கு இல்லாமல் போனது வருத்தமளிப்பதாக மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்திருக்கிறார். சட்டசபையிலிருந்து இன்று ஆளுநர் வெளிநடப்பு செய்தது பற்றிப் பல விளக்கங்களை ஷ்யாம் முன்வைத்திருக்கிறார்.
தமிழக சட்டசபையின் இந்த ஆண்டிற்கான முதல் கூட்டம் இன்று தொடங்கியது. இன்றைய கூட்டத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றார். அப்போது அவருக்குப் பேரவையின் மரபுப்படி காவல்துறை அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. அதனையடுத்து பேரவையின் மரபுப் படி தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலுடன் தொடங்கியது. ஆனால், தேசிய கீதம் பாடலைத்தான் முதலில் பாட வேண்டும் என்று கூறி ஆளுநர் ரவி வெளிநடப்பு செய்தார்.

இந்த விவகாரம் குறித்து ராஜ்பவன் எக்ஸ் தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விளக்கத்தில், "தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று மீண்டும் பாரதத்தின் அரசியலமைப்பு மற்றும் தேசிய கீதம் அவமதிக்கப்பட்டன. ஆகவே ஆளுநர் வெளியேறினார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படி நடப்பது முதல்முறையல்ல; ஆளுநர் இரண்டாவது முறையாக இப்படி வெளிநடப்பு செய்திருக்கிறார்.
இது பற்றி பேசிய மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம், "ஆளுநர் அளித்துள்ள விளக்கம் தவறானதாகவே இருக்கிறது. சட்டமன்றக் கூட்டத் தொடரில் 'தமிழ்த் தாய்' பாடலை முதலில் பாடுவது என்பது 1969இல் இருந்து கடைப்பிடிக்கப்பட்டு வரும் மரபு. இந்தப் பாடல் கருணாநிதி முதல்வராக இருந்த போது கொண்டுவரப்பட்டது முதல் அதில் மாற்றம் இருந்ததில்லை. சட்டமன்றத்தை எப்படி வழி நடத்த வேண்டும் என்ற விதிமுறையைச் சபாநாயகர்தான் முடிவு செய்ய முடியும். திடீரென்று ஆளுநர் விருப்பத்திற்கு ஏற்ப அதில் மாற்றம் செய்ய முடியாது.

ஆளுநர் உரையை வாசிக்க விரும்பவில்லை. ஆளுநருக்கு ஆரம்ப முதலே உள்நோக்கம் இருக்கிறது என்ற கருத்து ஏற்கக்கூடியதுதான். ஆளுநர் விரைந்து முடிவு எடுக்காததால், துணைவேந்தர்களை நியமிப்பதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் இல்லை; பதிவாளரும் இல்லை. அதனால் படித்து முடித்தவர்களுக்குச் சான்றிதழ் அளிக்க முடியாத சூழல் இருக்கிறது. இது ஆளுநர் ரவிக்குத் தெரியாதா?
ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் மாநில அரசை தனது விரோதியாகப் பார்க்கிறார். ஆகவேதான், துரைமுருகன் கொண்டுவந்த தீர்மானம் ஏற்கும்படியாக உள்ளது. அதைக் கண்டிக்காத அதிமுக ஆளுநரின் பாதுகாப்பு அரணாகச் செயல்படுவது வருத்தமாக உள்ளது. எடப்பாடி பழனிசாமி அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் விவகாரத்தில் போராட்டங்களை நடத்துகிறார். அங்கே துணைவேந்தர், பதிவாளர் இல்லாதது நிர்வாக சீர்கேட்டுக்கு ஒரு காரணமாக உள்ளது. அதை எதிர்க்கட்சியாக ஆளுநரை எடப்பாடி இடித்துக் கூறவேண்டும். அதைச் செய்யாதது வருத்தமாக உள்ளது.

இப்படி ஆளுநரால் பாதிக்கப்பட்ட அரசுகளில் அதிமுக அரசு ஒன்று. சென்னா ரெட்டி இருக்கும் போது ஆளுநருக்கும் அன்றைய முதல்வர் சென்னா ரெட்டிக்கும் ஒரு மோதல் போக்கு நிலவியது. எனவே ஆளுநரால் திமுக மட்டுமே பாதிக்கப்படவில்லை. அதிமுகவும் பாதிக்கப்பட்டுள்ளது. அதை எடப்பாடி உணர்ந்து செயல்படவேண்டும்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications