பாஜக பற்றி கேட்டதும்.. சட்டென "சீரியஸான" எடப்பாடி.. அதுக்கு நான் என்ன செய்யணும்?.. வந்ததே கோபம்!
சென்னை: பாஜக குறித்த கேள்விக்கு அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்த விதம் அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
அதிமுகவில் உட்கட்சி பூசல் உச்சம் தொட்டுள்ளது. அதிமுகவில் மீண்டும் நிர்வாகிகள் ஆதரவை எப்படியாவது பெற்றுவிட வேண்டும் என்று ஓ பன்னீர்செல்வம் தீவிரமாக முயன்று கொண்டு இருக்கிறார்.
இதற்காக சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரை கட்சிக்குள் கொண்டு வரவும் கூட ஓ பன்னீர்செல்வம் தயாராக இருக்கிறார். விரைவில் இவர்களை நேரில் சந்திப்பேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
இன்னொரு பக்கம் எடப்பாடி பழனிசாமி.. பொதுக்குழு மேல்முறையீட்டு வழக்கில் தனக்கு சாதகமாக தீர்ப்பு வரும் என்று நம்பிக்கொண்டு இருக்கிறார். இதன் மூலம் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக மீண்டும் பதவி ஏற்க முடியும் என்று அவர் நம்புகிறார்.

நம்பிக்கை
இதற்கு இடையில்தான் அதிமுக விவகாரத்தில் பாஜகதான் முக்கிய முடிவுகளை ரகசியமாக எடுப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேச்சுக்கள் எழுகின்றன. ஓ பன்னீர்செல்வத்தின் திடீர் எழுச்சிக்கு பின் டெல்லி பாஜகதான் இருப்பதாக கூறப்படுகிறது. அதோடு சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் அதிமுகவிற்குள் வருவதால் கிரீன் சிக்னலை பாஜக கொடுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளர் ஆனதை டெல்லி விரும்பவில்லை.. இதன் காரணமாகவே எடப்பாடி பின்னடைவை சந்தித்து வருகிறார் என்றும் கூறப்படுகிறது.

திருச்சி
இந்த நிலையில்தான் நேற்று திருச்சியில் இது தொடர்பான கேள்விகளுக்கு எடப்பாடி பழனிசாமி பதில் அளித்தார். செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்வியில், அதிமுக பிரச்சனையை பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர்தான் சரி செய்ய முடியும் என்ற கருத்து நிலவி வருகிறது. இவர்கள் இருவரும்தான் அதிமுகவின் உட்கட்சி பிரச்சனையை சரி செய்ய முடியும் என்ற கருத்து பரவலாக நிலவுகிறதே.. அதை பற்றி என்ன நினைக்கிறீர்கள்? என்ற கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி பதில் அளித்தார். இந்த கேள்வியை கேட்டதும் அவர் முகம் கொஞ்சம் சீரியஸாக மாறியது.

பதில்
இதையடுத்து அவர் அளித்த பதிலில்,அது உங்களுடைய கருத்து அதுக்கு நான் என்ன சொல்ல முடியும். எங்களுடைய நிலைப்பாடு அப்படி இல்லை. அதிமுகவில் எம்ஜிஆர் காலத்திலும் சரி, ஜெயலலிதா காலத்திலும் சரி தனித்தே இயங்கி இருக்கிறது. அவர்கள் வழியைத்தான் நாங்கள் பின்பற்றி வருகிறோம். இரண்டு பெரும் தலைவர்களின் வழிகாட்டுதல்களை பின்பற்றித்தான் நாங்கள் செயல்பட்டு வருகிறோம். அவர்கள் எங்களுக்கு போட்டுக்காட்டிய வழியை நாங்கள் பின்பற்றி வருகிறோம்.

பாஜக
நாட்டு மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்றுதான் கட்சி நடத்தி வருகிறோம். ஏழை, எளிய மக்கள், ஒடுக்கப்பட்ட மக்கள் முன்னேற்றம் அடைய வேண்டும் என்று கட்சி நடத்தி வருகிறோம். அவர்களுக்காகவே நாங்கள் பாடுபடுகிறோம். இந்த இயக்கம் உருவாக்கப்பட்டது அவர்களுக்காகவே. நாங்கள் தொண்டர்களுக்காக செயல்படுகிறோம். அதிமுக தனித்தே செயல்பட்டு வருகிறது என்று எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டார்.












Click it and Unblock the Notifications