நொறுங்குதே கூட்டணி கணக்கு..தமிழகத்தின் ஏக்நாத் ஷிண்டே? அதிமுகவை உடைக்கும் செங்கோட்டையன்? பரபர ப்ளான்
சென்னை: அதிமுக பாஜக கூட்டணி தொடர்பான பேச்சுகள் ஒருபுறம் இருக்க எடப்பாடி பழனிச்சாமி விதித்த சில நிபந்தனைகளால் பாஜக திறப்பு கடும் அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமியை தவிர்த்து விட்டு செங்கோட்டையன் தலைமையில் அதிமுக உருவாக்கப்படலாம் எனவும் மகாராஷ்டிராவில் சிவசேனாவை இயக்குனர் ஷிண்டே உடைத்தது போல அதிமுகவை செங்கோட்டையன் உடைக்கலாம் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். அதிமுகவில் தொடர்ந்து உட்கட்சி பூசல்கள் தொடர்ந்து வரும் நிலையில் எப்போது வேண்டுமானாலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம் எனவும் கூறப்படுகிறது
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா இருந்தவரை அதிமுகவில் ராணுவ கட்டுப்பாடு இருந்தது. ஜெயலலிதாவை தவிர அங்கு யாரும் எதுவும் செய்து விட முடியாது. எவ்வளவு பலம் பொருந்திய அமைச்சரானாலும், நிர்வாகி ஆனாலும் நொடிப்பொழுதில் தூக்கி அடித்தார் ஜெயலலிதா.

அவரது மறைவுக்குப் பிறகு அதிமுகவில் ஒவ்வொரு நாளும் ஏதாவது பிரச்சனை வந்து கொண்டே தான் இருக்கிறது. ஓ.பன்னீர்செல்வம் பதவி நீக்கம், சசிகலா, டிடிவி தினகரன் சிறைக்குச் சென்றது. தொடர்ந்து கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டது என பரபரப்பான நிகழ்வுகள் அரங்கேறியது.
ஒரு கட்டத்தில் தனது ஆட்சிக்கு துணையாக இருந்த ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியிலிருந்து வெளியேற்றினார் எடப்பாடி பழனிச்சாமி. அதற்குப் பிறகு அதிமுகவில் பல மாற்றங்கள் அரங்கேறி இருக்கிறது. பாஜகவுடன் கூட்டணியே கிடையாது என கூறிய எடப்பாடி பழனிச்சாமி அமித் ஷாவைச் சந்தித்து பேசியது பல யூகங்களை கிளப்பி இருக்கிறது. 2026 தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் என அமித் ஷா கூறியது அதிமுக கூட்டணியை மனதில் வைத்து தான் என்கின்றனர்.
இது ஒரு புறம் இருக்க சீமானுடன் பாஜக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. மறுபுறமோ அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தனி ஆவர்த்தனம் நடத்தி வருகிறார். அவரை முன்வைத்தே பல சலசலப்புகள் அதிமுகவில் எழுந்திருக்கிறது. அவிநாசி அத்திக்கடவு திட்டம் தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமியின் பாராட்டு விழாவை புறக்கணித்தது, நிர்மலா சீதாராமன் தனியே சந்தித்தது, ராமேஸ்வரம் பயணம், சட்டசபை நிகழ்வுகள் என செங்கோட்டையனை சுற்றி பல சர்ச்சை வளையங்கள் இருந்திருக்கிறது.
அதிமுக பாஜக கூட்டணியை பொறுத்தவரை பாஜக தலைமையில் தான் கூட்டணி, பாஜகவை சேர்ந்தவர் தான் முதல்வர் வேட்பாளர் என பாஜக அறிவுறுத்தியதாகவும், அதற்கு எடப்பாடி பழனிச்சாமி ஒப்புக்கொள்ளவில்லை என கூறப்படுகிறது. இதை அடுத்து செங்கோட்டையனை துருப்புச் சீட்டாக வைத்து அதிமுக கூட்டணியை இறுதி செய்ய டெல்லி பாஜக காய் நகர்த்தி வருகிறது. மேலும் ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோரை கொண்ட ஒருங்கிணைந்த அதிமுகவை செங்கோட்டையனை வைத்து உருவாக்கவும் 'டெல்லி' திட்டமிட்டதாக கூறப்படுகிறது.
ஒருவேளை பாஜகவின் நிபந்தனைகளுக்கு எடப்பாடி பழனிச்சாமி ஒத்துவரவில்லை என்றால் அவரை ஓரம் கட்டி விட்டு அல்லது மகாராஷ்டிராவில் சிவசேனாவை செய்தது போல செங்கோட்டையனை ஏக்நாத் ஷிண்டேவை போல மாற்றி அதிமுகவை உடைக்கலாம் எனவும் கிசுகிசுக்கப்படுகிறது. கடந்த சில நாட்களாகவே செங்கோட்டையனின் நடவடிக்கைகள் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராகவே இருக்கிறது.
அவரது செயல்பாடுகளும் நடவடிக்கைகளும் தமிழக அரசியல் களத்தில் மட்டுமல்ல அதிமுகவிலும் புயலை கிளப்பி இருப்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் செங்கோட்டையன் குறித்து எடப்பாடி பழனிச்சாமி இதுவரை எதுவுமே பேசவில்லை என்பதையும் கவனிக்க வேண்டும். அதனால் இவர்கள் இருவருக்குமிடையே மோதல் நிச்சயம் நடக்கிறது என்கின்றனர் அதிமுகவினர்.












Click it and Unblock the Notifications