ராஜ் பவன் மீது குண்டுவீச்சு.. அதே புள்ளி.. திமுக அரசு நிதி உதவி செய்கிறதோ? பகீர் கிளப்பும் அண்ணாமலை!
சென்னை: இந்தத் தொடர் தாக்குதல்களை பார்க்கும்போது, இந்தத் தாக்குதல்களுக்கு திமுக அரசுதான் நிதியுதவி செய்கிறது என்று நினைக்கத் தோன்றுகிறது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பரபரப்பு குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன்பு இன்று பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரபல ரவுடியான கருக்கா வினோத் என்பவர் இருசக்கர வாகனத்தில் வந்து குண்டு வீச முயன்றுள்ளார். பெட்ரோல் குண்டு வீசிவிட்டு இருசக்கர வாகனத்தில் தப்பிக்க முயன்ற கருக்கா வினோத்தை போலீசார், விரட்டிப் பிடித்து கைது செய்தனர்.

சென்னை தேனாம்பேட்டையை சேர்ந்த ரௌடி கருக்கா வினோத்தை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில் தான் சிறையில் இருந்த காலத்தில் வெளியே வர ஆளுநர் ஒப்புதல் அளிக்காததால் பெட்ரோல் குண்டு வீசியது தெரியவந்துள்ளது.
பிரபல ரவுடியான கருக்கா வினோத் சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில், கைதாகி கடந்த வாரம்தான் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார். கருக்கா வினோத் கடந்த 2022ஆம் ஆண்டு பாஜக அலுவலகம் மீது தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ராஜ் பவன் மீதான குண்டு வீச்சு சம்பவத்திற்கு அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, "ராஜ்பவன் மீது இன்று பெட்ரோல் குண்டு வீசப்பட்டது, தமிழகத்தின் உண்மையான சட்டம்-ஒழுங்கைப் பிரதிபலிக்கிறது. முக்கியமில்லாத விஷயங்களில் மக்களின் கவனத்தை திசை திருப்புவதில் திமுக மும்முரமாக இருக்கும் சமயத்தில், குற்றவாளிகள் தெருக்களில் இறங்கிவிட்டனர்.
2022ஆம் ஆண்டு பிப்ரவரியில் சென்னை பாஜக தலைமை அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்திய அதே நபர் தான் இன்றும் ராஜ்பவன் மீது தாக்குதல் நடத்தியுள்ளார். இந்தத் தொடர் தாக்குதல்கள், இந்தத் தாக்குதல்களுக்கு திமுக அரசுதான் நிதியுதவி செய்கிறது என்று நினைக்கத் தோன்றுகிறது. மு.க.ஸ்டாலின் எப்பொழுதும் செய்வது போல் இப்போது அடுத்த திசைதிருப்பலுக்கு தயாராகிக் கொண்டிருப்பார்" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications