"நின்னு கேளுங்க".. ஆளுநர் பற்றி அப்பாவு சொன்ன அதே வார்த்தை.. ரிப்பீட் அடித்த எடப்பாடி.. புரியலையே!
சென்னை: எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நேற்று சபாநாயகர் அப்பாவுவிற்கு எதிராக கொடுத்த புகார்கள் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. அப்பாவு பாணியிலேயே எடப்பாடி வைத்த சில புகார்கள் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
2023ம் வருடத்தின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கி நடந்து வருகிறது. சட்டசபை கூட்ட தொடரின் முதல் நாளிலேயே அவையில் மிகப்பெரிய அளவில் சர்ச்சைகள் ஏற்பட்டன.
தமிழ்நாடு என்பதைவிட தமிழகம் என்று சொல்வதே சரியாக இருக்கும் என்று மாநில ஆளுநர் ஆர்.என். ரவி பேசியதாக சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. ஆளுநரின் இந்த பேச்சுக்கு எதிராக தமிழ்நாட்டில் திமுக, திமுக கூட்டணி கட்சிகள் கடுமையாக கொந்தளித்து உள்ளன. இந்த நிலையில்தான் ஆளுநர் ஆர். என் ரவி நேற்று தமிழ்நாடு சட்டசபையில் ஆற்றிய உரை பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாடு அரசு தயாரித்து கொடுத்த உரையை படிக்காமல், ஆளுநர் ஆர். என் ரவி அதில் சில பத்திகளை நீக்கியும், சில வரிகளை தாமாக சேர்த்தும் பேசி இருக்கிறார்.

என்ன நடந்தது?
இதையடுத்தே ஆளுநரின் உரையை நீக்கிவிட்டு உண்மையான உரையை பதிவு செய்யும்படி முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றினார். இந்த தீர்மானம் சட்டசபையில் வெற்றிபெற்ற நிலையில், ஆளுநர் ரவியின் பேச்சு நீக்கப்பட்டு, உண்மையான அரசு தயாரித்த உரை சட்டசபை பதிவில் ஏற்றப்பட்டது. இந்த நிலையில் ஆளுநர் ஆர். என் ரவியின் பேச்சை விமர்சனம் செய்த சபாநாயகர் அப்பாவு அளித்த பேட்டியில், ஆளுநர் உரையில் ஏற்கனவே அச்சிடப்பட்டவை மட்டுமே அவைக்குறிப்பில் இடம்பெறும். தீர்மானத்தின்படி அரசு தயாரித்த உரை மட்டுமே அவை குறிப்பில் இருக்கும். ஆளுநர் சுயமாக பேசிய விஷயங்கள் இடம்பெறாது. ஆளுநரின் செயல்கள் சந்தேகம் எழுப்புகிறது. உயர் பதவி கிடைக்கும் என்ற நோக்கத்தில் ஆளுநர்கள் மத்திய அரசுக்கு ஆதரவாக நடந்துகொள்வதாக எனக்கு சந்தேகமாக உள்ளது.

தேசிய கீதம்
தேசிய கீதம் இசைத்து முடித்த பின்னர் அவையில் இருந்து ஆளுநர் புறப்படுவதே மரபு. அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கர் பெயரை கூட ஆளுநர் உச்சரிக்கவில்லை., என்று சபாநாயகர் அப்பாவு குறிப்பிட்டு இருந்தார். உயர் பதவி கிடைக்கும் என்ற நோக்கத்தில் ஆளுநர்கள் மத்திய அரசுக்கு ஆதரவாக நடந்துகொள்வதாக எனக்கு சந்தேகமாக உள்ளது என்று ஆளுநரை குறித்து சபாநாயகர் அப்பாவு குற்றச்சாட்டு வைத்தது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. நேற்று எடப்பாடி பழனிசாமி இந்த வாசகத்தை பயன்படுத்தி அப்பாவுவை விமர்சனம் செய்ததும் மேலும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஸ்டாலின் பதிலடி
தமிழ்நாடு சட்டசபையில் நேற்று ஒட்டுமொத்தமாக சட்ட ஒழுங்கு கெட்டு விட்டதாக எடப்பாடி பழனிசாமி புகார் வைத்தார். இதற்கு முதல்வர் ஸ்டாலின் எழுந்து பதில் அளித்தார். அவருடைய ஆட்சியில் சட்டம் ஒழுங்கு எப்படி இருந்தது என்பதை பெரிய பட்டியலே வைத்திருக்கிறேன் என்று கூறி முதல்வர் ஸ்டாலின் பெரிய பட்டியலை வாசித்தார். முதல்வர் ஸ்டாலினின் இந்த உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டசபையில் இருந்து அதிமுக எடப்பாடி தரப்பினர் வெளிநடப்பு செய்தனர். எடப்பாடி வெளிநடப்பு செய்த பின் அளித்த பேட்டியில், அப்பாவு பெரிய பதவி பெற வேண்டும் என்று இப்படி செய்கிறார். அவரின் செயல் நியாயமாக, நடுநிலையாக இல்லை என்று எடப்பாடி கூறினார்.

ஆளுநருக்கு ஆதரவா?
ஆளுநரை அப்பாவு எப்படி விமர்சனம் செய்தாரோ.. அதே வார்த்தையை பயன்படுத்தி அப்பாவுவை எடப்பாடி விமர்சனம் செய்துள்ளார். வேண்டும் என்றே எடப்பாடி இப்படி விமர்சனம் செய்து இருக்கிறாரா? ஆளுநருக்கு தார்மீக ஆதரவு கொடுக்கும் விதமாக எடப்பாடி இப்படி பேசி இருக்கிறாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது. முன்னதாகவே ஆளுநர் ரவி பேசிய பின் முதல்வர் ஸ்டாலின் பேசி இருக்க கூடாது, ஆளுனர் மரபை மீறிவிட்டார் என்று எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்தது குறிப்பிடத்தக்கது. அவையில் இருந்து வெளிநடப்பு செய்த எடப்பாடி இந்த பேட்டி கொடுத்துவிட்டு அவைக்கு திரும்பி வந்ததும் முதல்வர் ஸ்டாலின் அவரை விமர்சனம் செய்தார். அதில் நீங்கள் புகார் வைக்கிறீர்கள்.. அதற்கு முதலில் எங்களின் பதிலை கேளுங்கள். இப்படி பாதியில் ஓடி விடாதீர்கள். நின்று கேளுங்கள் என்று விமர்சனம் செய்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications