சீக்ரெட் போன் கால்.. ரகசிய பேச்சு.. திமுக கூட்டணியை உடைக்க எடப்பாடி பிளான்.. தொடங்கிய வேலை
சென்னை: திமுகவின் கூட்டணியை உடைக்கும் விதமாக எடப்பாடி பழனிசாமி புதிய கூட்டணி கணக்குகளை போட்டு வருகிறாராம்.
அதிமுக - பாஜக மோதல் காரணமாக அந்த கூட்டணி முறிந்தது. இதையடுத்து எடப்பாடி பழனிசாமி அளித்த பேட்டியில், இனிமேல் பாஜகவுடன் கூட்டணி கிடையாது. பாஜக கூட்டணி என்பது இனி நடக்காது. 2024 லோக்சபா தேர்தலில் அவர்களுடன் கூட்டணி வைக்க மாட்டோம். அதேபோல் 2026 சட்டசபை தேர்தலிலும் கூட்டணி வைக்க மாட்டோம். எங்கள் கூட்டணி மொத்தமாக முறிந்துவிட்டது.

இஸ்லாமியர்கள் எதிர்பார்த்தது போல இந்த கூட்டணி முறிந்துவிட்டது. இந்த கூட்டணியை நாங்கள் முறிக்கவில்லை. எங்கள் தொண்டர்கள்தான் முறித்தனர். இந்த கூட்டணி முறிவதற்கு காரணம் எங்கள் தொண்டர்களின் கோரிக்கைதான். அவர்களின் கோரிக்கையை ஏற்று கூட்டணியை முறித்து உள்ளோம் என்று எடப்பாடி பழனிசாமி கூறி இருக்கிறார்.
புதிய கூட்டணி: அதேபோல் 2024 லோக்சபா தேர்தல் புதிய கூட்டணி அமைப்போம் என்றும் கூறியுள்ளார். அதிமுக தலைமையில் புதிய கூட்டணி அமைக்கப்படும் என்று கூறியுள்ளார். அந்த வகையில்தான் புதிய கூட்டணி அமைப்பதற்கான தீவிர ஏற்பாடுகளை எடப்பாடி பழனிசாமி செய்து வருகிறாராம். அதன் ஒரு கட்டமாக பல்வேறு முக்கிய தலைவர்களுக்கு ரகசியமாக போன் செய்து பேசி வருகிறாராம்.
சமீபத்தில் கூட விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனிடம் அரசியல் கட்சி தலைவர்கள் தொடர்ந்து போன் மூலம் நலம் விசாரித்து வந்தனர்.
அதன்படி திருமாவளவனிடம் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு உடல் நலம் குறித்து விசாரித்தார். அவரின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். விரைவில் குணமடைந்து அரசியல் பணிகளுக்கும், மக்கள் பணிகளுக்கும் திரும்பும்படி பணித்தார். போதிய ஓய்வு எடுத்துவிட்டு வரும்படி அவரிடம் குறிப்பிட்டார்.
முக்கிய போன் கால்: இந்த போன் காலின் போதே திமுக கூட்டணி கட்சிகளை தன் பக்கம் இழுக்க எடப்பாடி முயன்று வருகிறார் என்று கூறப்பட்டது. அந்த வகையில் முக்கியமான தலைவர் ஒருவருக்கு எடப்பாடி பழனிச்சாமி போன் செய்து தங்கள் கூட்டணிக்கு வரும்படி அழைத்து உள்ளார் என்று கூறப்படுகிறது.இந்த போன் கடந்த 2 நாட்களுக்கு முன் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.
திமுக மீது மக்கள் அதிருப்தியில் இருக்கிறார்கள்.. நீங்கள் நம்ப பக்கம் வந்துடுங்க என்று திமுக கூட்டணியில் உள்ள கட்சி ஒன்றிற்கு போன் செய்து தங்கள் பக்கம் வரும்படி அழைப்பு விடுத்ததாக கூறப்படுகிறது.
முக்கியமாக 2024 லோக்சபா தேர்தலில் திமுக தனது கூட்டணி கட்சிகளுக்கு அதிக இடங்களை கொடுக்காது. கடந்த தேர்தலில் கூட்டணியில் காங்கிரசுக்கு 10 இடங்கள் தரப்பட்டது. விசிக, கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகளுக்கு தலா 2 இடங்கள் கொடுக்கப்பட்டது. ஆனால் இந்த முறை அதை காங்கிரஸ் 6-7 இடங்கள் என்று குறைக்க திமுக முடிவு செய்துள்ளது. அதேபோல் விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு 1 இடம் என்ற அளவில் குறைக்க முடிவு செய்துள்ளனர்.
இதனால் கூட்டணி கட்சிகள் அப்செட் ஆகும் வாய்ப்பு உள்ளது. இதனால் கூட்டணியில் மோதல் கூட ஏற்படலாம். அப்படி நடக்கும் பட்சத்தில் அதை பயன்படுத்தி அதிமுக .. திமுக கூட்டணியை உடைத்து.. அதில் இருந்து விசிக , கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகளை தங்கள் பக்கம் இழுக்க முயற்சி செய்யலாம் என்கிறார்கள்.
அந்த வகையில்தான் தற்போது அதிமுக பாஜக கூட்டணி முறிந்துள்ள நிலையில் தற்போது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திமுகவின் கூட்டணி தலைகளுக்கு போன் போட்டு பேசி வருவதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications