எடப்பாடிக்கு பின்னணியில் ‘பெரிய’ தலை.. எல்லா மூவும்.. ‘சக்கர வியூகத்தில் சிக்கிய ஓபிஎஸ்’.. ஒரே வழி!
சென்னை : உச்ச நீதிமன்றம் சென்றுள்ள ஓ.பன்னீர்செல்வம், நெருக்கடி வளையத்திற்குள் சிக்க வைக்கப்பட்டுள்ளார் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள். டெல்லியின் ஏகோபித்த ஆதரவு கிடைத்தால் மட்டுமே இதிலிருந்து அவரால் மீள முடியும் என்ற சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளாராம்.
சென்னை உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக துரைசாமி நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தான் பொதுக்குழு செல்லும் என தீர்ப்பளித்த 2 நீதிபதிகளில் ஒருவர்.
ஒருவேளை உச்ச நீதிமன்றம், மீண்டும் இந்த மேல்முறையீட்டு வழக்கை சென்னை ஐகோர்ட் பக்கம் திருப்பி விட்டால், ஓ.பன்னீர்செல்வத்துக்கு சாதகமான தீர்ப்பு கிடைப்பது குதிரைக் கொம்புதான் என்கிறார்கள்.
எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக முக்கியமான வழக்கறிஞர்கள் ஆஜரானதற்குப் பின்னணியிலும், நீதிமன்ற நகர்வுகளிலும் ஒரு ஓய்வுபெற்ற நீதிபதியின் கை இருப்பதாகவும் சொல்கிறார்கள்.
ஓபிஎஸ்ஸுக்கு 'பெரிய’ அடி.. 'ஷார்ப்’ பாயிண்ட்டோடு ரெடியாகும் ஈபிஎஸ்.. இது மட்டும் நடந்தா.. அவ்ளோதான்!
கேள்விக்குறி
அதிமுக பொதுக்குழு வழக்கில் உயர் நீதிமன்ற 2 நீதிபதிகள் அமர்வு அளித்த தீர்ப்பில் ஜூலை 11ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஓபிஎஸ் தொடர்ந்துள்ள மேல்முறையீட்டு வழக்கு அவருக்கு சாதகமான விளைவைக் கொடுக்குமா என்பது பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது. ஏனெனில், உச்ச நீதிமன்றத்திலும் ஓபிஎஸ் கோரிக்கை ஏற்கப்படவில்லை என்றால், தேர்தல் ஆணையத்தில் அவரது பேச்சு சுத்தமாக எடுபடாது.
ஓபிஎஸ்ஸுக்கு சிக்கல்?
ஏற்கனவே உச்சநீதிமன்றத்திற்குச் சென்ற வழக்குதான் உயர் நீதிமன்றத்திற்கு ரிமாண்ட் செய்யப்பட்டது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள்தான் உயர் நீதிமன்றம் தீர விசாரித்து, எந்தச் சாய்வும் இன்றி உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டுக்கு உத்தரவிட்டனர். அதன் அடிப்படையிலேயே விரிவான விசாரணை நடத்தப்பட்டு ஆகஸ்ட் 17ஆம் தேதி தனி நீதிபதியால் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதை எதிர்த்த மேல்முறையீட்டு வழக்கில், முந்தைய தீர்ப்பு, 2 நீதிபதிகள் அமர்வால் ரத்து செய்யப்பட்டது.
குழப்பும் சுப்ரீம் கோர்ட்
உயர் நீதிமன்றம் தீர விசாரித்தே இந்த தீர்ப்பை அளித்ததாக உச்ச நீதிமன்றம் கருதினால், ஓபிஎஸ் அளிக்கும் மேல் முறையீட்டு மனுவை நிராகரிக்கக் கூடும். ஆனால், உயர் நீதிமன்ற தனி நீதிபதியும், இரு நீதிபதிகள் அமர்வும் மாறுபட்ட தீர்ப்புகளை அளித்திருப்பதால், இதில் உச்ச நீதிமன்றம் என்ன முடிவு எடுக்கும் என்பது விடைதெரியாத கேள்வியாக இருக்கிறது. ஏற்கனவே ஓபிஎஸ், ஈபிஎஸ் மோதல் தொடர்பாக உச்ச நீதிமன்றம் சென்றபோது அங்கு உட்கட்சி பிரச்சனை தொடர்பாக விசாரிக்க அவர்கள் விரும்பவில்லை. அதனால்தான் ஐகோர்ட்டுக்கே திருப்பி அனுப்பப்பட்டது.
ஓபிஎஸ் அச்சத்திற்கு காரணம்
இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டிலும், மீண்டும் உயர் நீதிமன்றத்திலேயே தீர்த்துக் கொள்ளும்படி அனுப்பினால் என்ன செய்வது என ஓபிஎஸ் தரப்பு அச்சத்தில் இருக்கிறதாம். காரணம், சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக புதிதாக நியமனம் செய்யப்பட்டிருப்பவர் நீதிபதி துரைசாமி. நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் அமர்வு தான் இந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமான தீர்ப்பையே அளித்தது.
பொறுப்பு தலைமை நீதிபதியாக துரைசாமி
அதிமுக வழக்கில் தீர்ப்பளித்த கையோடு, சென்னை உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதி ஆகியுள்ளார் துரைசாமி. ஐகோர்ட் தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி 12ஆம் தேதியோடு ஓய்வு பெறுவதால், அடுத்த தலைமை நீதிபதி நியமிக்கப்படும் வரை பொறுப்பு தலைமை நீதிபதியாக துரைசாமி நியமிக்கப்பட்டுள்ளார். இதனால், மீண்டும் வழக்கு இங்கு வந்தாலும் தீர்ப்பு மாறாது என ஓபிஎஸ் தரப்பினரிடையே கிலி ஏற்பட்டுள்ளதாம்.
ஆலோசனை
இதனால், இந்தச் சிக்கலை தீர்க்க என்ன செய்வது என ஓபிஎஸ், மூத்த வழக்கறிஞர்களுடனும், நெருக்கமான சில புள்ளிகளுடனும் ஆலோசனை நடத்தியுள்ளார். அப்போது, நமக்கு டெல்லி பாஜக முழு ஆதரவு கிடைத்தால் மட்டுமே இனி நம்மால் நடைபோட முடியும். ஈபிஎஸ்ஸுக்கு ஆதரவாக ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவர் எல்லா மூவ்களையும் செய்து வருகிறார். அரிமா சுந்தரம் போன்ற மூத்த வழக்கறிஞர்கள் எடப்பாடிக்கு ஆஜரானதற்கும், இந்த தீர்ப்பு நேரெதிராக வந்ததற்கும் பின்னணியில் அவர் தான் இருக்கிறார்.
பின்னணியில் ஓய்வுபெற்ற நீதிபதி
அவரை கண்ட்ரோல் செய்தால் மட்டுமே நாம் நீதிமன்றத்தில் முன்னேற முடியும். அதற்கு கண்டிப்பாக பாஜக உதவி தான் தேவை. பாஜக தலைமை சொன்னால் மட்டுமே அந்த ஓய்வுபெற்ற நீதிபதி பின்வாங்க வாய்ப்பு உள்ளது என மிக மூத்த சட்ட வல்லுநர்களும், நெருக்கமான டெல்லி புள்ளிகளும் ஓபிஎஸ்ஸிடம் தெரிவித்துள்ளனராம். இதைத் தொடர்ந்து ஓபிஎஸ், டெல்லியை நோக்கி சில மூவ்களைச் செய்து வருவதாகக் கூறப்படுகிறது. ஓபிஎஸ் தரப்பின் திட்டம் நிறைவேறுமா என்பது அரசியல் பார்வையாளர்களால் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது.