உதயநிதி போட்ட ரூட்.. ஸ்டாலினின் ராஜதந்திரம்.. உள்ளே வந்த கமல்ஹாசன்.. ஆஹா "நேஷனல் லெவல்" பிளானாமே!
சென்னை: ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலில் காங்கிரஸ் - திமுக கூட்டணிக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி ஆதரவு அளித்து உள்ளது. காங்கிரஸ் - திமுக கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு நிபந்தனையற்ற ஆதரவு கொடுப்பதாக கமல்ஹாசன் தெரிவித்து உள்ளார்.
ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தல் சூடுபிடித்து உள்ளது. ஆர்.கே நகர் நகர் தேர்தலுக்கு இணையாக அல்லது அதற்கும் மேலாக இந்த தேர்தல் அதிக கவனம் பெற்றுள்ளது. ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் நெருங்கி வருகிறது. வரும் பிப்ரவரி 27ம் தேதி இங்கே இடைத்தேர்தல் நடக்க உள்ளது. மார்ச் 3ம் தேதி இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளன.
ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்தவர் ஈவெரா திருமகன். இவர் காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன் ஆவார். உடல்நிலை மோசமான நிலையில் ஈவெரா திருமகன் கடந்த ஜனவரி 4ம் தேதி மரணம் அடைந்ததார்.

வேட்பாளர்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தற்போது காங்கிரஸ் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் நிற்க வைக்கப்பட்டு உள்ளார். முதலில் ஈரோடு கிழக்கில் காங்கிரஸ் சார்பாக சம்பத் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது. அதன்பின் வேறு தலைவர்களை காங்கிரஸ் ஆலோசனை செய்வதாக கூறப்பட்டது. ஆனால் கடைசியில் ஈவிகேஎஸ் இளங்கோவன் இங்கே போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து ஈவிகேஎஸ் இளங்கோவன் நேரில் சென்று கமல்ஹாசனிடம் ஆதரவும் கேட்டார். இதையடுத்து நேற்று மக்கள் நீதி மய்யம் கட்சி இது தொடார்பாக ஆலோசனை நடத்தியது.

ஆலோசனை
ஆலோசனையின் முடிவில் ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலில் காங்கிரஸ் - திமுக கூட்டணிக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி ஆதரவு அளிப்பதாக முடிவு எடுக்கப்பட்டது. காங்கிரஸ் - திமுக கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு நிபந்தனையற்ற ஆதரவு கொடுப்பதாக கமல்ஹாசன் தெரிவித்து உள்ளார். தமிழ்நாட்டில் வித்தியாசமான அரசியல் கொள்கையுடன் கட்சியை தொடங்கியவர் கமல்ஹாசன். தமிழ்நாட்டில் திராவிடம், தலித்தியம், கம்யூனிசம், வலதுசாரி, இடதுசாரி என்ற தத்துவங்கள் இருக்கின்றன. இந்த தத்துவங்கள் எல்லாம் ஒன்று வலது என்ற முனையில் இருக்கும்.. அல்லது இடது என்ற முன்னிலையில் நிற்கும். இந்த நிலையில்தான் கமல்ஹாசன் புதிதாக மய்யம் என்ற தத்துவத்தை கொண்டு வந்தார். பல்வேறு நாடுகளில் இருக்கும் மய்ய - centrist அரசியல் கொள்கையை தமிழ்நாட்டிற்கும் இறக்குமதி செய்தார் கமல்ஹாசன்.

நெருக்கம்
கடந்த சட்டசபை தேர்தலிலும் கூட மக்கள் நீதி மய்யம் பிரதான கட்சிகளுடன் இணையாமல் தனியாக போட்டியிட்டது. இந்த தேர்தலுக்கு பின் திமுக, காங்கிரஸ் தலைவர்களுடன் கமல்ஹாசன் அதிகம் நெருக்கம் காட்டி வந்தார். முக்கியமாக திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுடன் நெருக்கமாக கமல்ஹாசன் பழகி வருகிறார். விக்ரம் படத்தை வெளியிட்டது, அதன்பின் கமலின் பல படங்களுடன் ஒப்பந்தம் செய்தது, இந்தியன் 2 படத்தை வெளியிட உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பிற்குள் வந்தது என்று உதயநிதி - கமல் நெருக்கமாகி உள்ளனர். இன்னொரு பக்கம் காங்கிரஸ் கட்சியுடனும் கமல்ஹாசன் நெருக்கமாகி விட்டார். கடந்த சில நாட்களுக்கு முன் பாரத் ஜோடோ யாத்திரையில் கமல்ஹாசன் கலந்து கொண்டார். நான் ஏன் இங்கே இருக்கிறேன் என்று பலர் என்னிடம் கேட்பார்கள். நான் ஒரு இந்தியனாக இங்கே இருக்கிறேன். என் அப்பா ஒரு காங்கிரஸ் நிர்வாகி. எனக்கு பல்வேறு அரசியல் கொள்கைகள் இருந்துள்ளன. நான் தனியாக கட்சி நடத்தி வருகிறேன். ஆனால் என்னுடைய நாடு என்று வரும் போது, கட்சி கோடுகள், எல்லைகள் எல்லாம் மறைந்துவிடும். நான் அந்த வேறுபாடுகளை மறந்துவிட்டு இங்கே வந்து இருக்கிறேன், என்று கமல்ஹாசன் குறிப்பிட்டார்.

கூட்டணி
அதன்பின் காங்கிரஸ் - திமுக கூட்டணியில் தற்போது அதிகாரபூர்வமாக இணைந்து உள்ளார். எதிர்பார்த்தபடியே இவர்கள் கடைசியில் கூட்டணி வைத்துள்ளனர் . இதனால் நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் காங்கிரஸ் - திமுக கூட்டணியில் இணைய உள்ளதோ என்ற கேள்வி எழுந்தது. அதாவது நாடாளுமன்ற தேர்தலில் திமுக - காங்கிரஸ் சார்பாக எம்பி தேர்தலுக்கு கமல்ஹாசன் போட்டியிட உள்ளாரோ என்ற எழுந்துள்ளது. முக்கியமாக கமல்ஹாசன் அரசியல் ஆலோசகர் ஒருவருடன் நெருக்கமாக இருந்து வருகிறார். அந்த ஆலோசகர்தான் மக்கள் நீதி மய்யம் தொடங்கிய நேரத்தில் கட்சியை உருவாக்குவதில் பல்வேறு ஆலோசனைகளை வழங்கியது. அதே நிர்வாகி திமுகவிற்கு மிகவும் நெருக்கமாக இருந்து வருகிறார். அந்த ஆலோசகரின் அறிவுறுத்தலின் பெயரில் திமுக, காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்க கமல் முடிவு செய்ததாக கூறப்படுகிறது.

ஆலோசனை
அவர் சொன்ன ஆலோசனையின் பெயரில்தான் கமல்ஹாசன் இந்த முடிவை எடுத்தாக கூறப்படுகிறது. திமுக + காங்கிரசுடன் கூட்டணி வைக்கும் பட்சத்தில் கமலுக்கு மாநில அரசியலில் பெரிதாக ரோல் இருக்காது. அது திமுக + கமல் இடையே ஒரு வித conflict of intrest ஐ ஏற்படுத்தும் என்பதால் கமல்ஹாசன் பெரும்பாலும் தேசிய அரசியல் மீது கவனம் செலுத்துவார் என்று கூறப்படுகிறது. அதாவது நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி சார்பாக கோவையில் இவர் போட்டியிட வாய்ப்பு உள்ளது என்கிறார்கள். சட்டசபை தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் நூலிழையில்தான் கமல் வானதி சீனிவாசனிடம் தோல்வி அடைந்தார். அப்போது அவர் கூட்டணியில் இல்லை.

கோவை
இப்போது காங்கிரஸ் - திமுக கூட்டணியில் இணைந்து போட்டியிட்டால், செந்தில் பாலாஜியின் அசுர உழைப்பையும் சேர்த்து கமல்ஹாசன் வெற்றிபெற வாய்ப்புகள் இருக்கின்றன. இதனால் கோவை லோக்சபா தொகுதியில் கமல்ஹாசன் போட்டியிட வாய்ப்புகள் உள்ளன. ஆனால் கோவையை விட்டுக்கொடுக்க திமுக விரும்பாமல் இருக்கவும் வாய்ப்புகள் உள்ளன. கோவையில் இதற்காகவே திமுக கடுமையான தேர்தல் பணிகளை செய்து வருகிறது. அப்படி இருக்கும் பட்சத்தில், சென்னையில் ஏதாவது ஒரு நாடாளுமன்ற தொகுதியில்.. பெரும்பாலும் தென் சென்னையில் கமல்ஹாசன் போட்டியிட வாய்ப்பு உள்ளது.












Click it and Unblock the Notifications