தமிழ்நாட்டில் உருவாகும் புதிய மாவட்டம்? சட்டசபையில் திடீரென கேட்ட குரல்.. எந்த பகுதி தெரியுமா?
சென்னை: தமிழ்நாடு சட்டசபை மானிய கோரிக்கையில் புதிய மாவட்டம் தொடர்பான அறிவிப்பு வெளியாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. முக்கியமாக சில பகுதி மக்களின் பல வருட கோரிக்கைகள் ஏற்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
கடந்த வருடம் சட்டசபையில் அமைச்சர் கே.என். நேரு மூலம் மேற்கொள்ளப்பட்ட அறிவிப்பின்படி புதுக்கோட்டை, நாமக்கல், திருவண்ணாமலை, காரைக்குடி ஆகிய நகரங்களை மாநகராட்சியாக தரம் உயர்த்தி தமிழக அரசு கடந்த மார்ச் மாதம் அரசாணை வெளியிட்டது.

இப்போது இதை செயல்பாட்டிற்கு கொண்டு வரும் பணிகள் நடக்கின்றன. அடுத்த 20 நாட்களில் முழுமையாக புதுக்கோட்டை மாநகராட்சியாக செயல்பாட்டிற்கு வந்துவிடும்.,
புதுக்கோட்டை நகராட்சி மற்றும் 11 அண்டை கிராம பஞ்சாயத்துகள் புதுக்கோட்டை மாநகராட்சியின் பகுதிகளை உருவாக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அதேபோல திருவண்ணாமலை நகராட்சி மற்றும் 18 கிராம பஞ்சாயத்துகள் புதிய திருவண்ணாமலை மாநகராட்சியை அமைக்கும்.
நாமக்கல் நகராட்சி மற்றும் 12 கிராம பஞ்சாயத்துகள் இணைந்து புதிய நாமக்கல் நகராட்சியாக மாறும். காரைக்குடி நகராட்சி, இரண்டு டவுன் பஞ்சாயத்துகள் மற்றும் ஐந்து கிராம பஞ்சாயத்துகள் இணைந்து காரைக்குடி மாநகராட்சியாக மாறும் என்று அறிவிக்கப்பட்டது. கடந்த வருடம் புதிய மாவட்டம் தொடர்பான அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை.
கேள்வி நேரம்: இந்த நிலையில் தற்போது மானிய கோரிக்கை விவாதத்தில், புதிய மாவட்டம் தொடர்பான அறிவிப்பு வெளியாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. பொதுவாக சட்டசபை கூட்டத்தொடர் சமயங்களில் இது போல் புதிய மாவட்ட அறிவிப்புகள் வெளியாவது வழக்கம். கடந்த ஆட்சியில் ராணிப்பேட்டை உள்ளிட்ட பல புதிய மாவட்டங்கள் உருவாகின. ஒன்றுபட்ட வேலூர் மாவட்டத்திலிருந்து நிர்வாக வசதிக்காக ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்கள் பிரிக்கப்பட்டன. இந்த நிலையில் அதே போல புதிய மாவட்டங்களை உருவாக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் கும்பகோணம் மாவட்டம் உருவாக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணம் வட்டம், கும்பகோணம் மாநகராட்சி மற்றும் கும்பகோணம் ஊராட்சி ஒன்றியம் ஆகியவை அமைந்து உள்ளன. இந்த கும்பகோணத்தை தனி மாவட்டமாக மாற்ற வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன. தனி மாவட்டம் வேண்டும், நாங்கள் மிகப்பெரியநகரம். மற்ற பல மாவட்டங்களை விட நல்ல வருவாய் ஈட்டுகிறோம்.
நேற்று சட்டசபையில் கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டத்தை உருவாக்க வேண்டும் என்று சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் திமுக எம்.எல்.ஏ.அன்பழகன் கோரிக்கை விடுத்தார். இதற்கு அரசு செவி சாய்க்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஏன் கும்பகோணம்: மற்ற மாவட்டங்களை விட அதிக வருமானம் ஈட்டி வருகிறோம். அப்படி இருக்கும் போது எங்களுக்கு மட்டும் மாவட்ட அந்தஸ்து கொடுக்காமல் இருப்பது ஏன் என்று கும்பகோணம் மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதோடு கும்பகோணம் மக்கள் பொதுவாக ஆட்சி அலுவலகத்திற்கு செல்ல வேண்டும் என்றால் கூட தஞ்சாவூர் செல்ல வேண்டி உள்ளது.
இதற்கு கிட்டத்தட்ட 1 மணி நேரம் வரை ஆகிறது. அப்படி இருக்கும் பட்சத்தில் கும்பகோணத்தை உடனே மாவட்டமாக மாற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். விரைவில் அது தொடர்பான அறிவிப்பு வெளியாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications