மோடி அலை.. டார் ஆன கட்சிகள்.. டயர்ட் ஆன மக்கள்...!
பாஜக ஆட்சி விரைவில் முடிவுக்கு வர போகிறதா?
Recommended Video
சென்னை: மோடி அலை என்று சொல்லி சொல்லியே இப்போது அது கிட்டத்தட்ட காணாமல் போய்விட்டது!!
நான்கரை வருஷங்களுக்கு முன்பு திடீரென நாடெங்கும் புது அலை வீசியது. அந்த மெகா அலையை கண்டு எல்லோருமே மிரண்டார்கள்!!
டிஜிட்டல் விளம்பரங்கள் மூலமாக உள்ளே நுழைந்தார் பிரதமர் மோடி. நம் நாட்டில் ஒரு பிரதமரை இதுவரை எந்த மீடியாவும் இவ்வளவு தூக்கி பிடித்ததில்லை. ஒரேயடியாக மீடியாக்கள் மோடியை உச்சத்தில் கொண்டு போய் வைத்து புகழ் பாடியது. மீடியாவை மோடியா என்று கிண்டலடிக்கும் அளவுக்கு அது ஓவராகவே இருந்தது.
வடமாநில மக்கள்
பாஜகவுக்கு என்று ஒருசேனல் தனியாக தேவையே இல்லை என்ற அளவுக்குதான் ஆரம்ப கால மோடிக்கு விளம்பரங்களை வாரி தந்தது. அச்சே தீன், க்ளீன் இந்தியா என புது புது வார்த்தைகளில் படிப்பறிவும், போதிய தொழில் நுட்ப அறிவும் இல்லாத வட மாநில மக்களை திணறடித்தார்.
அடடா... நிஜமா?
மன் கி பாத் என ரேடியாவில் பேசுவது, வெளிநாடுகளுக்கு பறப்பது என எல்லாவற்றையுமே மக்கள் வியந்து பார்த்தார்கள். மோடியின் பயணங்கள் ஏன் எதற்காக என்று வாட்ஸ் ஆப்புகளும், சோசியல் மீடியாவிலும் பாஜகவினர் போட்ட பதிவுகளைப் பார்த்த பலரும் அடடா நிஜமா இருக்குமோ என்று வியந்து நின்றனர்.
கிளம்பிவிட்டது படை
எத்தனையோ அரசியல் கட்சிகள் காங்கிரஸ் உட்பட அன்று மோடியை கண்டு நடுங்கின. அவ்வளவு எதற்கு, தமிழகத்தின் சிறிய கட்சிகள், மதிமுக, தேமுதிக, பாரிவேந்தர் என எல்லாம் நேரில் போய் கட்டித் தழுவிக் கொண்டன. ஆனால் இன்றோ நிலைமை தலைகீழாகி விட்டது. மோடியின் இந்த நான்கரை ஆண்டுகளை மக்கள் கண்கூடாக பார்த்துவிட்டனர். மோடி அலை என்பதை உடைக்க ஒரு படையே கிளம்பி விட்டது. பாஜகவுக்கு எதிராக அரசியல் திரும்பி கொண்டிருக்கிறது.
மீம்ஸ்கள் பறந்தன
மோடி கடைப்பிடித்த பலவும் கூடு அவருடைய ஒரிஜினல் இல்லை. அன்றைய சூழல், நாட்டில் தலைவிரித்தாடிய பஞ்சம், இந்திரா காந்தியை பல நாடுகளுக்கு பறக்க செய்து விவசாயம், தொழில், வர்த்தகம் உள்ளிட்டவற்றை கையாள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அன்றைய காலங்களில் வெளிநாட்டுக்கு இந்திரா காந்தி சென்றார் என்பதற்காக அவரோடு போட்டி போட்டுக் கொண்டு வெளிநாடு பயணத்தை ஆரம்பித்தார் மோடி. விளைவு மீம்ஸ்கள் பறக்க ஆரம்பித்தன.
ரேடியோதான்
அதேபோல நேரு காலத்தில் சமூக ஊடகங்கள் இல்லை. அன்றைக்கு இருந்தது வெறும் ரேடியோதான். அதுவும் ஊருக்கு ஒன்று பொதுவாக வைக்கப்பட்டிருக்கும். அதனால் பொதுமக்களிடம் தன் கருத்தை கூற நேரு ரேடியோவில்தான் பேச முடிந்தது. அதைத்தான் மன் கி பாத் என்று மாற்றிப் பேசினார் மோடி.
டயர்டாகி விட்டார்கள்
அச்சேதின், கிளீன் இந்தியா.. இதெல்லாம் இன்றைக்கு எந்த நிலையில் இருக்கிறது என்பதும் சொல்ல தேவையில்லை. நான்கரை வருஷங்களுக்கு முன்பு மிரண்ட, அதிர்ந்த கட்சிகள்கூட இன்றைக்கு பாஜகவை பார்த்து பயப்படாத நிலை ஏற்பட்டுவிட்டது. கடந்த பொதுத் தேர்தலின்போது மோடியைப் பார்த்து வியந்த அத்தனை பேரும் தற்போது அயர்ச்சிப் பார்வை தான் பார்க்கிறார்கள் என்பதே நிதர்சனம். அந்த அளவுக்கு டயர்டாகி விட்டார்கள் மக்கள்.