குஜராத்தில் காங்கிரஸ் படுதோல்வி.. ராகுல் பிரச்சாரம் செய்யாததுதான் காரணமா.. கே எஸ் அழகிரி ஓபன் டாக்
சென்னை: குஜராத் தேர்தல் தோல்விக்கு ராகுல் காந்தி தீவிர பிரசாரத்தில் ஈடுபடாததே காரணம் என்று விமர்சனம் எழுந்துள்ள நிலையில், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி இதனை மறுத்துள்ளார்.
இமாசல பிரதேசம், குஜராத் சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன.
இதில் இமாசல பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை தாண்டி காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்றுள்ளது. அங்கு ஆளும் பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சியை பிடித்து விடும் என்பதே தற்போதைய டிரெண்ட் ஆக உள்ளது.
குஜராத்தில் பாஜக முன்னிலை
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட குஜராத்தில் பாஜக படு தோல்வியை சந்தித்து உள்ளது. பாஜக அசுர வெற்றியை பெற்று 7-வது முறையாக ஆட்சியை தக்க வைத்துள்ளது. இதனால், பாஜகவின் 27 ஆண்டு கால ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற காங்கிரசின் கனவு தவிடு பொடியாகியுள்ளது. தற்போதைய நிலவரப்படி காங்கிரஸ் 17 இடங்களில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது. பாஜக 157- இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.
காங்கிரசுக்கு பெருத்த ஏமாற்றம்
காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக மல்லிகார்ஜூன கார்கே தேர்வு செய்யப்பட்ட பிறகு அக்கட்சி சந்திக்கும் முதல் தேர்தல் இது என்பதால் அக்கட்சியினர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. அதேபோல், ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையும் கட்சியினர் மத்தியில் புது புத்துணர்ச்சியை அளித்ததால் காங்கிரச் கட்சியினர் நம்பிக்கையில் இருந்தனர். ஆனால், இந்த நம்பிக்கைக்கு மாறாக முடிவுகள் குஜராத்தில் அமைந்துள்ளது கட்சியினருக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.
ராகுல் காந்தி முழு கவனம் செலுத்தவில்லை
ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரை மீது மட்டுமே கவனம் செலுத்தியதாகவும் தேர்தல் பிரசாரத்தில் ஆர்வம் காட்டவில்லை என்று பிரசாரத்தின் போதே எதிர்க்கட்சிகள் விமர்சித்தன. தற்போது குஜராத்தில் காங்கிரஸ் படு தோல்வியை நோக்கி சென்று கொண்டிருக்கும் நிலையில், இது தொடர்பான விவாதங்களும் கிளம்பியுள்ளன. ராகுல் காந்தி குஜராத்தில் பிரசாரத்தில் தனது முழு கவனத்தையும் செலுத்தவில்லை என்றும் இதுவே அக்கட்சி படு தோல்வியை சந்திக்க ஒரு காரணம் என்றும் அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
கே எஸ் அழகிரி கருத்து
இந்த நிலையில், இவ்விவகாரம் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி கூறியிருப்பதாவது:- ராகுல் காந்தி லட்சிய பயணத்தில் உள்ளார். இந்த பயணம் அரசியல் நோக்கங்களுக்கானது அல்ல. காந்தியின் உடைய தண்டி யாத்திரை எப்படி அரசியல் நோக்கத்திற்காக நடத்தப்படவில்லையோ.. அதேபோல ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமைப்பயணமும் அரசியல் காரணங்களுக்காக நடத்தப்படவில்லை. மத நல்லிணகக்த்திற்காக சமூக நல்லிணக்கத்திற்காகத்தான் ராகுல் காந்தியின் நடைபயணம் நடைபெறுகிறது. அனுபவம் வாய்ந்த இயக்கம் காங்கிரஸ். 100 ஆண்டுகளுக்கும் மேலாக நாங்கள் பல்வேறு தேர்தல்களை சந்தித்து வருகிறோம்.
கடுமையாக உழைத்து வெற்றியை பெறும்
வெற்றி பெற்றவர்கள் மக்களுக்கு மேலும் உழைப்பதற்கான காரணங்களை உருவாக்கி கொள்ள வேண்டும். வெற்றி பெறாதவர்கள் வெற்றி பெறுவதற்கான காரண காரியங்களை உருவாக்கி கொள்ள வேண்டுமே தவிர இதில் உள்நோக்கம் சொல்லக்கூடாது. காங்கிரஸ் இன்னும் கடுமையாக உழைத்து வெற்றியை பெறும். அதற்கான இலக்கை நோக்கி நாங்கள் பயணித்துக் கொண்டு இருக்கிறோம். பாஜகவை பொறுத்தவரை தேர்தல்களையே கார்பரேட்களை வைத்து சர்வாதிக முறையில்தான் அணுகுகிறார்கள். அந்த மாயை ஒழிய இன்னும் சிறிது காலம் ஆகும். அந்த மாயையில் இருந்து மக்கள் விடுபட்டு கொண்டு இருக்கிறார்கள்.