ரேஷன் பாமாயில் பாதுகாப்பானதா? உங்கள் சமையல் எண்ணெய்க்குப் பின்னால் இருக்கும் அதிர்ச்சி உண்மைகள்
சென்னை: பாமாயில் என்றாலே உடலுக்கு தீங்கு என்ற பார்வை உள்ளது. நிஜமாகவே பாமாயில் உடலுக்கு தீங்கு தரக்கூடியதா? பாமாயிலில் சத்துக்கள் உள்ளதா? இதை முறைப்படி சுத்தப்படுத்தி, உபயோகப்படுத்தினால், பல நன்மைகள் கிடைக்கும் என்பது உண்மையா? டாக்டர்கள் சொல்வது என்ன? ரேஷன் பாமாயில் ஆரோக்கியமானதா? பித்தம் நீக்கி பயன்படுத்தும் எளிய முறைகள் என்னென்ன என்பதை பற்றியெல்லாம் சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.
ரேஷன் கடைகளில் மலிவான விலையில் பாமாயில் வழங்கப்படுவதால், பலரும் இது தரம் குறைந்த எண்ணெய் என்று தவறாக நினைக்கிறார்கள். ஆனால், உண்மையில் பாமாயிலில் உடலுக்குத் தேவையான வைட்டமின் A, வைட்டமின் E மற்றும் பீட்டா கரோட்டின் போன்ற சத்துக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளன.

பாமாயில் நன்மைகள்
இவை கண்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதுடன், உடலில் புற்றுநோய் செல்கள் உருவாகாமல் தடுக்கவும் பெரிதும் உதவுகின்றன. குறிப்பாக, இதிலுள்ள இயற்கையான ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வல்லவை.
பாமாயிலை அப்படியே நேரடியாக சமையலுக்கு பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று நம் முன்னோர்கள் கூறுவார்கள். இதற்குக் காரணம், பாமாயிலை அப்படியே பயன்படுத்தினால் உடலில் பித்தம் அதிகரிக்கும். இதனால் சிலருக்குத் தலைசுற்றல் அல்லது மயக்கம் போன்ற உணர்வுகள் ஏற்படலாம். எனவே, ரேஷன் பாமாயிலை வாங்கியவுடன் அதனைச் சுத்திகரிப்பு செய்துவிட்டுப் பயன்படுத்துவதே சிறந்தது.
எப்படி சுத்தம் செய்வது
ஒரு வாணலியில் பாமாயிலை ஊற்றி மிதமான தீயில் சூடுபடுத்த வேண்டும். எண்ணெய் புகை வரும் அளவுக்குக் காயக் கூடாது. ஒரு சிறிய நெல்லிக்காய் அளவு புளியை எடுத்து, அதனுள் சிறிது கல் உப்பை வைத்து உருட்டிக் கொள்ள வேண்டும்.
எண்ணெய் சூடானதும், இந்த புளி உருண்டையையும், தோல் சீவிய ஒரு துண்டு இஞ்சியையும் எண்ணெய்க்குள் போட வேண்டும். 10 நிமிடம் கழித்துப் பார்த்தால் புளி கருப்பாக மாறியிருக்கும். பாமாயிலில் இருக்கும் பித்தத்தை இந்தப் புளியும் இஞ்சியும் முழுமையாக ஈர்த்துவிடும். அதன் பிறகு எண்ணெயை ஆறவைத்து வடிகட்டிப் பயன்படுத்தினால், அது மற்ற சமையல் எண்ணெய்களைப் போலவே ஆரோக்கியமானதாக மாறிவிடும்.
ரத்தத்தில் கெட்ட கொழுப்பு
டாக்டர் ரீதியாக பார்த்தால், தேங்காய் எண்ணெயை விட பாமாயிலில் நிறைவுற்ற கொழுப்பு (Saturated Fat) குறைவுதான். பாமாயிலில் ஆரோக்கியமான கொழுப்புகள் சம அளவில் இருப்பதால், இது ரத்தத்தில் கெட்ட கொழுப்பை அதிகரிப்பதில்லை என்று ஆய்வுகள் கூறுகின்றன. இதய நோய் வருமோ என்று அச்சப்படுபவர்கள், மருத்துவர்களின் ஆலோசனையின்படி இதனை மிதமான அளவில் தாராளமாகச் சேர்த்துக் கொள்ளலாம்.
இருநதாலும் ஏற்கனவே இதயம் சம்பந்தப்பட்ட பாதிப்பு உள்ளவர்கள், அதிக உடல் பருமன் கொண்டவர்கள் மற்றும் சர்க்கரை நோயாளிகள் எந்த ஒரு எண்ணெயையுமே அளவோடு பயன்படுத்துவது அவசியம்.
நீண்ட காலமாகப் பாமாயில் பயன்படுத்தாதவர்கள், திடீரென இதனை உணவில் சேர்க்கும்போது ஆரம்பத்தில் சிலருக்குச் செரிமான மாற்றங்கள் ஏற்படலாம். அதனால் முறையாக சுத்திகரிப்பு செய்யப்பட்ட பாமாயிலை சரியான அளவில் உணவில் சேர்த்துக் கொள்வது ஆரோக்கியத்திற்கு எந்த விதமான தீங்கையும் ஏற்படுத்தாது. அரசு வழங்கும் மலிவான விலை என்பது அதன் தரத்தை குறிப்பதல்ல, அது ஏழை எளிய மக்களுக்கான சத்துணவுத் திட்டம் என்பதை நாம் உணர வேண்டும்..!!












Click it and Unblock the Notifications