21 காரணங்கள்.. முதல்வர் ஸ்டாலின் திடீரென ஆளுநரை சந்தித்தது ஏன்? அமைச்சரவை மாற்றமா? மேட்டரே வேறயாம்!
சென்னை: தமிழ்நாடு ஆளுநர் ஆர் . என் ரவியை முதல்வர் ஸ்டாலின் திடீரென சந்திக்க சென்றது தமிழ்நாடு அரசியல் உலகில் பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையை மாற்ற முடிவு செய்துள்ளாரா என்ற விவாதத்தையும் இது எழுப்பி உள்ளது. ஆனால் தற்போது முதல்வர் அலுவலகம் சார்பாக இந்த சந்திப்பு குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாகவே தமிழ்நாடு அரசில் அமைச்சரவை மாற்றம் செய்யப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகி வருகின்றன. செயல்படாத அமைச்சர்கள் சிலர் மாற்றம் செய்யப்படாலாம் என்று தகவல்கள் வந்த வண்ணம் இருக்கின்றன.
அதேபோல் சில அமைச்சர்களின் இலாக்கா மாற்றம் செய்யப்படலாம் என்று கூறப்பட்டு வருகின்றது. ஆனால் இதுவும் எந் தகவலும் உறுதி செய்யப்படவில்லை.

உதயநிதி
முக்கியமாக விரைவில் உதயநிதியை அமைச்சரவையில் சேர்ப்பது பற்றிய அறிவிப்புகள் வரலாம் என்று அறிவாலய வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன. முதல்வர் ஸ்டாலினின் லண்டன் பயணத்திற்கு முன்பாக உதயநிதி அமைச்சர் ஆவார் என்றும் கூட தகவல்கள் வந்தன. இவருக்கு இளைஞர் நலன் உள்ளிட்ட முக்கிய துறைகளில் ஏதாவது ஒன்று வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

அமைச்சரவை
முக்கியமாக சில மூத்த அமைச்சர் உள்ளிட்ட 2-3 அமைச்சர்களின் பதவிகள் பறிக்கப்படலாம் என்றும் செய்திகள் வந்துள்ளன. இது போக டிஆர்பி ராஜா உள்ளிட்ட சில இளம் எம்எல்ஏக்கள் அமைச்சராக்கப்படலாம் என்றும் தகவல்கள் வருகின்றன. நாளை, ஜூன் 3ம் தேதி முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாள் வருகிறது. அப்போது அமைச்சரவை மாற்றம் குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்று அரசியல் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டது.

என்ன காரணம்
சமீபத்தில் கூட உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக வேண்டுமென திருச்சி, திண்டுக்கல்லில் நடைபெற்ற திமுக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம் செய்யப்பட்டது. இந்த நிலையில்தான் தமிழ்நாடு ஆளுநர் ஆர் . என் ரவியை முதல்வர் ஸ்டாலின் திடீரென சந்திக்க செல்கிறார்.. முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையை மாற்ற முடிவு செய்துள்ளாரா என்ற விவாதத்தையும் இது எழுப்பி உள்ளது. அமைச்சரவை மாற்றம் செய்ய வேண்டும் என்றால், புதிய அமைச்சர்கள் நியமனத்தில் ஆளுநர் கையெழுத்து போட வேண்டும்.இதற்காக ஆளுநரை சந்திக்க முதல்வர் சென்று இருக்கிறாரா என்ற கேள்வி எழுந்தது

ஸ்டாலின் சந்திப்பு
ஆனால் முதல்வர் ஸ்டாலினின் இந்த பயணத்திற்கு பின் அமைச்சரவை மாற்றம் காரணம் இல்லை என்றே அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. முதல்வர் ஸ்டாலின் ஆளுநர் ரவியை திடீரென சந்தித்தது ஏன் என்று முதல்வர் அலுவலகம் சார்பாக அதிகாரபூர்வமாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டு நிலுவையிலுள்ள சட்டமுன்வடிவுகளுக்கு விரைவில் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை முதல்வர் ஸ்டாலின் சந்தித்தார்.

என்ன காரணம்
குறிப்பாக, மருத்துவ மாணவர் சேர்க்கை விரைவில் தொடங்க உள்ள நிலையில், தமிழ்நாடு சித்த மருத்துவப் பல்கலைக்கழக சட்டமுன்வடிவு, 2022-க்கு ஒப்புதல் வழங்கிட ஆளுநர் அவர்களை வலியுறுத்தினார். இந்தச் சந்திப்பின் தொடக்கத்தில், நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் சட்டமுன்வடிவை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தமைக்கு தெரிவித்துக் கொண்டார். ஆளுநர் அவர்களுக்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் நன்றி

21 மசோதாக்கள்
அதோடு, தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, ஆளுநர் அவர்களின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்கள் (திருத்தச்) சட்டமுன்வடிவு, 1983, தமிழ்நாடு அடுக்குமாடிக் குடியிருப்பு உரிமை சட்டமுன்வடிவு, 2022, தமிழ்நாடு பல்கலைக்கழக சட்டமுன்வடிவு 2022 உள்ளிட்ட 21 சட்டமுன்வடிவுகளுக்கு விரைந்து ஒப்புதல் அளித்து, அரசியல் சாசனத்தின் உணர்வையும், தமிழக மக்களின் விருப்பத்தையும் நிலைநிறுத்திடுமாறு ஆளுநரை, முதல்வர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.
ஆளுநருடனான இந்தச் சந்திப்பின் போது, நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், உயர் கல்வித் துறை அமைச்சர் சு. பொன்முடி மாண்புமிகு தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் உடனிருந்தனர், என்று முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications