"ஸ்லீப்பர் செல்".. திமுக + பாஜக கூட்டணி? டென்ஷனில் சீறிய காங். தலைகள்! சைலண்ட்டாக ஆப் செய்த சீனியர்
திமுகவுக்கு எதிரான மனநிலையில் தமிழக காங்கிரஸ் வந்துள்ளதாக கூறப்படுகிறது
சென்னை: திமுக - காங்கிரஸ் கூட்டணியில் விரைவில் விரிசல் வந்துவிடும் போல் தெரிகிறது.. சமீப காலமாகவே நடந்து கொண்டிருக்கும், தமிழக அரசியலை பார்த்தால் அப்படித்தான் கணக்கு போட தோன்றுகிறதாம்.
கடந்த 3 மாத காலத்தை மட்டும் எடுத்து கொண்டால், திமுக மீது தமிழக காங்கிரசுக்கு லேசான வருத்தமும், கோபமும், அதிருப்தியும், தர்மசங்கடமும், நெருக்கடியும், இருக்கத்தான் செய்கிறது.
பிரதமர் மோடி சென்னை விழாவுக்கு வந்தபோது கூட, மாநில தலைவர் அழகிரி தன்னுடைய அதிருப்தியை வெளிப்படையாகவே தெரிவித்து இருந்தார்..

பீட்டர் அல்போன்ஸ்
"அண்ணாமலை சொல்லுகிற புகார்கள் குறித்து, திராவிட முன்னேற்றக்கழக தம்பிகள் கவனமாக இருக்க வேண்டும்.. கவனமாக கையாள வேண்டும்.. காரணம், நம்மை ஊழல் என்று சொல்லிவிட்டு, அந்த ஊழல் என்ற பிரச்சாரத்திலே பின்பக்கமாக கதவை திறந்து ஆட்சியை பிடிக்க நினைக்கிறார்கள்" என்று மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் திமுகவினரை எச்சரித்து வருகிறார்.. ஆனாலும், "திமுக அரசின் தவறுகளை சுட்டிக் காட்டுவோம்" என்று அழகிரி சொல்லி வருவது, திமுகவினரையே அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. இப்படிப்பட்ட சூழலில்தான், இன்னொரு தகவல் கசிந்து வருகிறது..

குண்டுராவ்
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நடந்த காங்கிரசின் சிந்தனையாளர்கள் கூட்டத்தை தொடர்ந்து, அதேபோல, சென்னை மாமல்லபுரத்தில் தனியார் ரிசார்ட்டில் சிந்தனையாளர்கள் பயிற்சி கருத்தரங்கத்தை 2 நாள் நடத்தி முடித்திருக்கிறது தமிழக காங்கிரஸ். கட்சி தலைவர் அழகிரியின் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில், மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், தமிழக காங்கிரஸ் தலைவர்கள், மூத்த நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள், பல்வேறு அணிகளின் தலைவர்கள் என சுமார் 2000 பேர் கலந்து கொண்டனர்.

பச்சை துரோகம்
காங்கிரஸ் எம்.பி. விஷ்ணுபிரசாத் தலைமையில் பொருளாதார அமர்வு, எம்.பி. ஜெயக்குமார் தலைமையில் அரசியல் அமர்வு, எம்.எல்.ஏ. விஜயதாரணி தலைமையில் மகளிர் சமூகநல அமர்வு, செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார் தலைமையில் விவசாய நலன் அமர்வு ஆகிய 4 அமர்வுகள் கூட்டத்தில் உருவாக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு அமர்விலும் 30-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு தங்களின் கருத்துக்களை வெளிப்படுத்தினர். இதில் பொருளாதார அமர்விலும், அரசியல் அமர்விலும் தான் காரசார விவாதங்கள் எதிரொலித்தன. குறிப்பாக, "உள்ளாட்சி தேர்தலில் உள்ளடி வேலைகளை செய்து காங்கிரஸ் வேட்பாளர்களை திமுக தோற்கடித்தது. இது கூட்டணிக்கு செய்த துரோகம்" என குற்றம்சாட்டினார்கள்.

சீட்டுகள்
மேலும், "திமுகவுடன் கூட்டணி வைத்ததால் தேர்தலில் சீட் பெற்றதை தவிர வேறு எந்த நன்மையும் கிடையாது. ராகுல்காந்தியை பிரதமராக்குவோம்னு ஸ்டாலின் சொன்னார். ஆனா, எம்பி தேர்தலில் காங்கிரசுக்கு குறைவான சீட்டுகளை ஒதுக்கினார். நமது தலைவர் ராஜீவ் காந்தியை இழந்திருக்கிறோம். அதற்கு காரணமானவர்களை கட்டிப்பிடித்து ஆதரிக்கிறார். நம்மால் எதுவும் செய்ய முடியவில்லை. பாஜகவை வெளியில் தான் எதிர்ப்பது போல திமுக காட்டிக்கிகொள்கிறது. ஆனால் உள்ளுக்குள் அவர்களுக்கும் ஒரு உடன்பாடு இருக்கிறது" என்றெல்லாம் ஆவேசமாக கொந்தளித்துள்ளனர் மாவட்ட தலைவர்கள்.

ப.சிதம்பரம்
இதனால் அரசியல் அமர்வும் பொருளாதார அமர்வும் செம காட்டாக இருந்துள்ளன. இரண்டு நாள் நடந்த கூட்டத்தில் திமுகவுக்கு எதிரான கருத்துக்களே எதிரொலித்ததால் , அது குறித்த தீர்மானங்கள் நிறைவேற்ற வேண்டும் என பெரும்பாலான நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர். திமுக கூட்டணியில் இருப்பதால் எப்படி நிறைவேற்றுவது என மூத்த தலைவர்கள் தடுமாறியுள்ளனர்.. எனவே குழம்பி போன அவர்கள் வேறு வழியின்றி, ப.சிதம்பரத்திடம் இது குறித்து ஆலோசித்துள்ளனர்.

ஸ்லீப்பர் செல்கள்
அனைத்தையும் கேட்டறிந்த சிதம்பரம், நீண்ட கால உறவுகளுக்காக திமுக காங்கிரஸ் கூட்டணி உருவாக்கப்பட்டது. குறுகிய கால நோக்கத்திற்காக அல்ல. திமுகவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டாம் என தடுத்து விட்டார். இதனால் பாஜகவுக்கு எதிராக கூட தீர்மானம் நிறைவேற்றாமல் கூட்டத்தை முடித்துவிட்டனர். இதனால் கடுப்பான நிர்வாகிகள், திமுக தயவில் எம்.பி.யாகியிருப்பதால் திமுகவுக்கு விசுவாசம் காட்டுகிறார் என்று ப.சிதம்பரம் மீது காட்டமாக இருக்கின்றனர் கதர் சட்டையினர். இதற்கிடையே, காங்கிரஸ் கூட்டத்தில் திமுகவுக்கு எதிராக பேசியவைகளை திமுக தலைமைக்கு தெரியப்படுத்தியுள்ளனராம் காங்கிரசில் உள்ள திமுக ஸ்லீப்பர் செல்கள்..!












Click it and Unblock the Notifications