"தமிழகத்தில் பாஜக தலைவர்களின் பேச்சு வன்முறையை தூண்டும் வகையில் உள்ளது".. திருமாவளவன் பரபர
பாமக மற்றும் பாஜக இருக்கும் இடத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இருக்காது என்று சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது தொல் திருமாவளவன் பேசினார்.
சென்னை: அரசியலில் எவ்வளவு பின்னடைவுகள் வந்தாலும் பாமக மற்றும் பாஜக இருக்கும் இடத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இருக்காது என்று சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தின் போது தொல் திருமாவளவன் பேசினார்.
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் செவ்வாய்க்கிழமை மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை சீர்குலைத்து, மாநிலத்தின் முன்னேற்றத்தை தடுக்க பாஜக முயல்வதாக கூறி, மக்கள் விரோத பாசிச பாஜக உள்ளிட்ட சனாதன சக்திகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தின்போது திருமாவளவன் பேசியதாவது:-

வடிவமைக்கப்பட்ட யுக்திகள்
தமிழ்நாட்டில் பாஜக போன்ற சனாதன சக்திகளால் வன்முறை தூண்டப்படுகிறது. சமூக பதற்றத்தை உருவாக்குவது, திமுக அரசுக்கு எதிரான நெருக்கடியை ஏற்படுத்துவதற்கு.. கூட்டணி கட்சிகளுக்கு இடையே குழப்பத்தை உண்டாக்குவதற்கு.. பல யுக்திகளை கையாண்டு தமிழ்நாட்டிலே பாஜக காலூன்றி விடலாம்.. வேரூன்றி விடலாம் என்று கணக்குப்போட்டு.. ஏற்கனவே திட்டமிட்டு வடிவமைக்கப்பட்ட யுக்திகளை அவர்கள் கையாள்கிறார்கள்.

வேண்டும் என்றே பேசுகிறார்
மேடையில் ஏதோ எமோஷனலாக அவர்கள் பேசுகிறார்கள் என்று நாம் நினைத்துவிட முடியாது.. பேசத் தெரியாமல் பேசுகிறார்கள் என்று நினைத்துவிட கூடாது.. ஆர் என் ரவி ஒன்னும் விவரம் இல்லாதவர் இல்லை. ஏனோ தானோ என்று பேசுவதற்கு.. அவர் வேண்டும் என்றே பேசுகிறார். அது திட்டமிட்டது வடிவமைக்கப்பட்டது.. இப்படியெல்லாம் பேச வேண்டும் என்று பயிற்றுவிக்கப்பட்டது. இப்படியெல்லாம் பேசி ஒரு பதற்றத்தை உருவாக்க வேண்டும்.. தூண்ட வேண்டும்.. தமிழ்நாட்டில் பாஜகவை சேர்ந்தவர்கள் எல்லாரும் பேசுவதை கவனியுங்கள்.. அவையெல்லாம் வன்முறையை தூண்டுவதற்காகத்தான் இருக்கும்..

காவல்துறை பாஜக கட்டுப்பாட்டில் இருக்கிறதா
சட்டம் ஒழுங்கை சீர்குலைத்து திமுக அரசுக்கு எதிரான ஒரு சூழலை உருவாக்க நினைக்கிறார்கள். தமிழகத்தில் பாஜக தலைவர்களின் பேச்சுக்கள் வன்முறையை தூண்டும் வகையில் தான் இருக்கின்றன. திமுக ஆட்சியில் கி.வீரமணியின் காரை சூழ்ந்து அச்சுறுத்துவதை பார்க்கும் போது தமிழ்நாட்டில் காவல்துறை பாஜக கட்டுப்பாட்டில் இருக்கிறதா? என்று சந்தேகிக்க தோன்றுகிறது. தமிழகத்தில் காவல்துறை முதல்வர் மு க ஸ்டாலின் கட்டுப்பாட்டில் தான் இருக்க வேண்டும்.

பாஜக, பாமக இருக்கும் இடத்தில்
அரசியல் ரீதியாக எவ்வளவு பின்னடைவை சந்தித்தாலும் பாஜக மற்றும் பாமக இருக்கும் இடத்தில் நாங்கள் (விடுதலை சிறுத்தைகள் கட்சி) இருக்க மாட்டோம். அகில இந்திய அளவில் பாஜகவுக்கு எதிரான அணியை திமுக ஒருங்கிணைக்க வேண்டும் என்கிறோம். திமுக கூட்டணியை ஆதரிக்கிறோம். அண்மையில் நடந்த 5 மாநில தேர்தல்கள் வரும் போது வன்முறைகள் கட்டவிழ்க்கப்பட்டது போன்று தமிழகத்திலும் தேர்தல் நெருங்க நெருங்க என்ன செய்யப் போகிறார்கள் என்று அவர்களுக்கே தெரியாது. காரணம், அது நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ். தலைமையிடத்தில் இருந்து தான் முடிவு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications