"இடிக்குதே".. பூங்குன்றன் ஏன் இப்படி போட்டு உடைக்கறாரு.. அதிமுகவை விடுங்க.. அமமுக நோட் பண்ணுமா..?
எம்ஜிஆர் மாளிகையில் தண்ணீர் இல்லையா என்று பூங்குன்றன் கேட்டுள்ளார்
சென்னை: அதிமுகவினருக்கு நாசூக்காக, தன்னுடைய முகநூல் பக்கத்தில் ஒரு மெசேஜ் சொல்லி உள்ளார், பூங்குன்றன்.!
மறைந்த ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய உதவியாளராக இருந்தவர் பூங்குன்றன்... உதவியாளராக மட்டுமல்லாமல் அதிகாரமிக்கவராகவும், செல்வாக்கு மிக்கவராகவும் திகழ்ந்தவர்.. போயஸ் தோட்டத்தில் செல்லப்பிள்ளையாகவும் வலம் வந்தவர்..!
ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு ஆளே எங்கிருக்கிறார் என்று தெரியாத அளவுக்கு ஒதுங்கிவிட்டார்.. மவுனமாகிவிட்டார்.. கோயில் குளம் என்று சுத்த ஆரம்பித்துவிட்டார்.. எப்போதாவது அவரை பற்றின செய்திகள் மட்டும் மீடியாவில் வந்துவிட்டு போகும்.

சூசக பேச்சு
அதேசமயம், ஜெயலலிதா உயிருடன் இருந்த போது தனக்கு அதிமுகவினர் கொடுத்த மரியாதையை இன்று கொடுப்பதில்லை என்ற வருத்தத்தையும் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பூங்குன்றன் சூசகமாக பதிவிடுவார்.. "சுதாரிப்பதற்கான நேரங்களைத் தவறவிட்டு ஆட்சியை இன்று இழந்துவிட்டீர்கள்... இனியாவது சொல்வதைக் கேளுங்கள். கட்சி மாறினால் தவறில்லை என்னும் மனநிலைக்கு கழக நிர்வாகிகள் பலர் வந்துவிட்டனர்" என்று சமயம், பிளவுபட்டிருக்கும் அதிமுகவை மறைமுகமாக விமர்சித்து, தன்னுடைய கருத்தையும் பதிவு செய்வார்.

பூங்குன்றன்
இப்போது மீண்டும் லைம்-லைட்டில் வந்துள்ளார் பூங்குன்றன்.. மறுபடியும் ஒரு ஃபேஸ்புக் பதிவு போட்டுள்ளார்.. அதில், "MGR மாளிகையில் குடிக்க தண்ணீர் இல்லையா" என்று வேதனையுடன் கேட்டுள்ளார். அந்த பதிவு இதுதான்: "நண்பர் ஒருவருடன் வெயிலின் கொடுமையிலிருந்து கொஞ்ச நேரம் தப்பிப்பதற்காக பழரசம் அருந்த ஒரு கடைக்குச் சென்றோம். அங்கு ஒரு மேசையில் இளைஞர்கள் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். பக்கத்து மேசையில் நாங்கள் அமர்ந்தோம். அவர்கள் பேசியது தானாகவே வந்து எங்கள் காதில் விழுந்தது.

தண்ணீர்ப்பந்தல்
அவர்கள் பேசிய பேச்சிலிருந்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர்கள் என்று யூகித்துக் கொண்டேன். அவர்கள் சொன்ன கருத்துக்களைக் கேட்டு மனம் வேதனையில் உழன்றது. கோடைக் காலங்களில் எல்லா இடங்களிலும் தண்ணீர்ப்பந்தல் திறந்து மக்கள் சேவை ஆற்ற வேண்டும் என்று தலைவர்கள் சொல்கிறார்கள். ஆனால் தலைமைக் கழகத்திற்கு வரும் தொண்டர்களுக்கு குடிக்கக்கூட தண்ணீர் கிடைக்கவில்லை.

துர்நாற்றம்
இந்த வெயிலில் தலைமைக் கழகம் சென்றால் தண்ணீருக்காக அங்கு திண்டாட வேண்டியிருக்கிறது. வெளியூரிலிருந்து வரும் தொண்டர்கள் என்ன நினைப்பார்கள். மேலும் ஒரு பாத்ரூமிற்கு கதவு இல்லை. உள்ளே செல்லமுடியாத அளவிற்கு துர்நாற்றம். கழுவாத கழிப்பறை என்று ஆவேசமாக பேசிக் கொண்டிருந்தனர். என் நண்பர் என்னைப் பரிதாபமாக பார்க்க நானும் அவர்கள் பேசியதைக் கேட்டு செய்வதறியாமல் திகைத்தேன்.

கோட்டை
வள்ளல் எழுப்பிய அரண்மனை. அன்னபூரணி அரசாட்சி செய்த கோட்டை. புரட்சித்தலைவர் MGR மாளிகையில் குடிக்க தண்ணீர் இல்லையா! இந்த செய்தி உண்மையாக இருக்கக்கூடாது என்று மனம் இறைவனிடம் வேண்டியது. தலைவர்களே! இந்த செய்தி உண்மை என்றால் உங்களை நம்பியிருக்கும் தொண்டர்களுக்கும், மக்களுக்காகவும் நீங்கள் தண்ணீர் வசதியை ஏற்படுத்தி எப்போதும் தூய தண்ணீர் (RO Water) கிடைக்க நடவடிக்கை எடுங்கள். தலைமைக்கழகத்திற்கு வரும் தொண்டர்களுக்கு தேவையான வசதிகள் கிடைப்பதற்கும் நீங்கள் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று உங்களை மன்றாடிக் கேட்டுக்கொள்கிறேன்.

நன்மை
எதிர்க்கட்சியில் கவனமாக செயல்படுங்கள். நான் சொல்வது உங்கள் நன்மைக்கே! எனக்குச் சொல்ல உரிமை இல்லை என்று நீங்கள் நினைத்தால் மன்னித்துக் கொள்ளுங்கள் என பூங்குன்றன் கூறியுள்ளார்.. இன்று அதிமுகவில் உள்ளவர்கள் அனைவருமே எம்ஜிஆர் பெயரை பயன்படுத்தியும், உச்சரித்தும்தான் பதவியை பிடித்தனர்.. அதை அனுபவிக்கவும் செய்தனர்.. அப்படிப்பட்ட எம்ஜிஆரையே மறந்துவிட்டீர்களே என்பது போல, இந்த பதிவையும் பூங்குன்றன் மறைமுகமாகவே விமர்சித்துள்ளார்..

நாகரீகம்
மிக முக்கியமான மற்றும் இந்த நேரத்துக்கு அவசியமான கோரிக்கையை பூங்குன்றன் சுட்டிக்காட்டி உள்ளது வரவேற்கத்தக்கதே.. அதேசமயம், யாரையும் மனம் புண்படும்படியாக இல்லாமல், நாசூக்காக ஒவ்வொரு குறைகளையும் சுட்டிக் காட்டி வந்தாலும், அமமுக என்ற வார்த்தையை பயன்படுத்தாமல், அதிமுகவினரையே குறிப்பிட்டு பதிவுகளை போட்டு வருவது எதையோ உணர்த்துவது போலவே உள்ளது.












Click it and Unblock the Notifications