அப்போ கூட தூக்கல.. பயங்கர கோபம்.. டேவிட்சன் தேவாசீர்வாதம் அதிரடி மாற்றத்திற்கு பின்னணி இதானா? பரபர!
சென்னை: உளவுத்துறை ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் அப்பதவியில் இருந்து அதிரடியாக டிரான்ஸ்பர் செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே அண்ணாமலை உள்ளிட்டோர் தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகளை வைத்தபோதும் அவர் மீது ஆக்ஷன் எடுக்கப்படாத நிலையில், இப்போது நடந்துள்ள மாற்றத்திற்கு என்ன காரணம் என்ற பின்னணி தகவல்கள் பரபரக்கின்றன.
தமிழ்நாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில் அண்மையில் அமைச்சரவை மாற்றம் அதைத் தொடர்ந்து ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் ஆகியவை அடுத்தடுத்து அதிரடிகள் அரங்கேறின. இந்நிலையில் தான் முக்கியமான ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடியாக இன்று பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

காவல்துறையில் அதிரடி மாற்றம்: தற்போது காவல்துறை டிஜிபியாக இருக்கும் சைலேந்திர பாபு ஐபிஎஸ் இந்த மாதத்தோடு ஓய்வு பெறுகிறார். இந்தப் பொறுப்புக்கு தகுதி வாய்ந்த திறமையான அதிகாரியை நியமிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்து வருகிறார் முதல்வர் ஸ்டாலின். விரைவில் அடுத்த டிஜிபி யார் என்பது அறிவிக்கப்பட உள்ளது.
அடுத்த டிஜிபிக்கான ரேஸில் சங்கர் ஜிவால், ஏ.கே.விஸ்வநாதன், சஞ்சய் அரோரா, சீமா அகர்வால், ப்ரோமோத் குமார், கந்தசாமி உள்ளிட்டோரின் பெயர்கள் அடிபடுகின்றன. இதில், சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவாலும் முன்னணியில் இருப்பதாக கூறுகிறார்கள்.
டேவிட்சன் தேவாசீர்வாதம்: ஒருவேளை சங்கர் ஜிவால், காவல்துறை டிஜிபி ஆக்கப்பட்டால், சென்னை காவல் ஆணையர் பதவி காலியாகும். இதனை குறிவைத்து உளவுத்துறை ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் ஐபிஎஸ் காய் நகர்த்துவதாக தகவல்கள் கசிந்தன. ஸ்டாலினின் குட்புக்கில் இருக்கும் அதிகாரி என்பதால் அவர் நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாவும் பேச்சுகள் அடிபட்டன.
டேவிட்சன் தேவாசீர்வாதம் 1995ஆம் ஆண்டு தமிழ்நாடு கேடர் ஐபிஎஸ் பேட்சை சேர்ந்தவர். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை அடுத்த முதலூரைச் சேர்ந்த டேவிட்சன் தேவ ஆசீர்வாதம். எஸ்.பி, டிஐஜி, ஐஜி, உளவுத்துறை ஏடிஜிபி என படிப்படியாக முன்னேறி வந்துள்ளார். முதல்வர் ஸ்டாலினின் குட்புக்கில் இடம்பெற்ற தேவாசீர்வாதத்திற்கு, உளவுத்துறை ஏடிஜிபி பதவி கொடுக்கப்பட்டது.
நம்பிக்கை வைத்த ஸ்டாலின்: கடந்த இரண்டு ஆண்டுகளில் டேவிட்சன் தேவாசீர்வாதம் மீது பல்வேறு சர்ச்சைககள் வெடித்துள்ளன. பாஸ்போர்ட் விண்ணப்பங்கள் போலி ஆவணங்கள் மூலம் சரிபார்கப்பட்டதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வைத்த புகார் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பள்ளியில் மாணவி ஸ்ரீமதி பலியானதைத் தொடர்ந்து நடந்த கலவரம் உள்ளிட்ட சில நிகழ்வுகள் உளவுத்துறை தோல்வியை எடுத்துக்காட்டுவதாக எதிர்க்கட்சிகளால் விமர்சிக்கப்பட்டன. இதுபோன்ற சம்பவங்கள் திமுக ஆட்சிக்கு களங்கம் விளைவிப்பதாக அமைந்தன.
இவற்றை முன்கூட்டியே கணித்து காவல்துறையை எச்சரிக்க வேண்டியது உளவுத்துறையின் கடமை. ஆனால், உளவுத்துறை அதில் பல விஷயங்களில் தவறி இருப்பதால் டேவிட்சன் தேவாசீர்வாதம் பதவியில் இருந்து நீக்கப்படலாம் எனக் கூறப்பட்டு வந்தது. ஆனால், முதல்வர் ஸ்டாலின், அவர் மீது நம்பிக்கை இழக்காமல் இருந்து வந்தார்.
முதல்வர் கோபம்: இந்நிலையில், அண்மையில் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீரென ரெய்டில் இறங்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதுவும் முதல்வர் ஸ்டாலின் வெளிநாட்டு பயணம் மேற்கொண்டிருந்த நேரத்தில் இந்த ரெய்டு அரங்கேறியது. அதைத் தொடர்ந்து, அமலாக்கத்துறையும் ரெய்டில் இறங்கி செந்தில் பாலாஜியை கைது செய்தது.
ஆனால், இதுகுறித்து உளவுத்துறையிடம் இருந்து சரியான தகவல்கள் முதல்வர் ஸ்டாலினுக்கு முன்கூட்டியே செல்லவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் டேவிட்சன் தேவாசீர்வாதம் மீது ஸ்டாலின் அதிருப்தியில் இருந்ததாகவும், அதன் எதிரொலியாகவே அவர் இப்போது ஒரு டம்மி போஸ்ட்டுக்கு மாற்றப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் பரபரக்கின்றன.












Click it and Unblock the Notifications