எனக்கு ஒரே இறைவன் ஒரே கட்சி! இசைமுரசு நாகூர் ஹனிபா பிறந்தநாள்! காற்றில் கலந்த கணீர் குரல்!
சென்னை: இசைமுரசு என்றழைக்கப்பட்ட நாகூர் இ.எம்.ஹனிபாவின் 97வது பிறந்தநாள் நாளை கொண்டாடப்படவுள்ள நிலையில் அவர் குறித்த சில சுவாரஸ்யமான தகவல்களை இங்கே பார்க்கலாம்.
இஸ்லாமிய இன்னிசை பாடகராக மட்டும் இல்லாமல் திமுகவின் தனி மனித பிரச்சார வானொலியாக திகழ்ந்து மறைந்தவர் நாகூர் ஹனிபா.
நாகூர் ஹனிபாவை அதிமுகவுக்கு வருமாறு எம்.ஜி.ஆர். எத்தனையோ முறை அழைத்தும் எனக்கு ஒரே இறைவன் ஒரே கட்சி என முகத்தில் அடித்தாற்போல் பதில் சொல்லியவர் ஹனிபா.

கருணாநிதியின் நண்பன்
நாகூர் ஹனிபாவை பொறுத்தவரை கருணாநிதியின் தோளில் கைபோட்டு பேசக்கூடிய இடத்தில் இருந்தவர். பாடகர் என்பதை கடந்து கருணாநிதியின் சிறுவயது தோழர் என்ற பெருமைக்கு உரியவர். அரைகால் டவுசர் அணிந்த காலத்திலேயே கருணாநிதியும் நாகூர் ஹனிபாவும் திராவிட இயக்க கருத்தியல் மூலம் நண்பர்கள் ஆனவர்கள். திமுகவுக்காக இவர் பாடிய பாடல்கள் அனைத்தும் காலத்தால் அழியாத வரலாற்றில் இடம்பிடித்திருக்கிறது.

அழைக்கின்றார் அண்ணா
அதுவும் குறிப்பாக இவர் பாடிய அழைக்கின்றார் அண்ணா, கல்லக்குடி கொண்ட கருணாநிதி வாழ்கவே, வளர்த்த கிடா மார்பில் பாய்ந்தடா, ஓடி வருகிறான் உதயசூரியன், என்பன போன்ற திமுக பிரச்சர பாடல்கள் இன்றளவும் திமுக நிகழ்ச்சிகளில் கலக்கிக் கொண்டிருக்கின்றன. இதேபோல் இவர் பாடிய இஸ்லாமிய பாடல்களான வாழ்க வாழ்கவே, இறைவனிடம் கையேந்துங்கள், மங்களம் பொங்கிடும், என்பன உள்ளிட்ட இன்னும் பல பாடல்கள் இஸ்லாமியர்கள் இல்ல மண விழாக்களில் ஸ்பீர்க்களில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன.

கணீர் கர்ஜனை
கணீர் கர்ஜனை குரலால் கம்பீர தமிழ்மொழி உச்சரிப்பால் தனக்கென தனி வரலாற்றை உருவாக்கியவர் இசைமுரசு நாகூர் ஹனிபா. இவர் எம்.எல்.சி.ஆக இருந்த போது இவரிடம் சான்ஸ் கேட்டுச் சென்ற இளையராஜாவுக்கு 'தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு' என்ற பாடலுக்கு இசையமைக்க முதல் வாய்ப்புக் கொடுத்தார். தேர்தல் அரசியலில் சோபிக்க முடியாத இவரை மேல் சபை உறுப்பினராகவும், தமிழ்நாடு வக்பு வாரியத் தலைவராகவும் ஆக்கி அழகு பார்த்தவர் கருணாநிதி.

எம்.ஜி.ஆர். அழைப்பு
இதனிடையே அதிமுகவை தொடங்கிய புதிதில் தன்னுடன் வந்துவிடுமாறு நாகூர் ஹனிபாவுக்கு எத்தனையோ முறை எம்.ஜி.ஆர்.அழைப்பு விடுத்தும் எனக்கு ஒரே இறைவன் ஒரே கட்சி என பதில் சொன்னவர். பேராசிரியர் அன்பழகன், கருணாநிதி ஆகிய இருவரோடு தோளில் கை போட்டு மிக உரிமையாக பேசக்கூடிய இடத்தில் இருந்தவர் நாகூர் ஹனிபா. ஆனாலும் தனக்காகவோ தன் குடும்பத்திற்காகவோ அந்த நட்பை பயன்படுத்தி பெரிதாக எதையும் செய்து கொள்ளவில்லை.

கடைசி வரை கச்சேரி
கடைசி வரை கச்சேரிகளில் பாடியே பணம் ஈட்டிய நாகூர் ஹனிபா, எந்தச் சூழலிலும் தலை தாழ்ந்து நிற்காதவர். சினிமா பாடல்கள் பாட பெரியளவில் ஆர்வம் காட்டாத இவர் உன் மதமா என் மதமா ஆண்டவன் எந்த மதம், நட்டநடு கடல் மீது நான் பாடும் பாடல், என ஓரிரு பாடல்களை மட்டுமே பாடியிருக்கிறார். நாகூர் ஹனிபாவை பொறுத்தவரை முகஸ்துதிக்காக எதையும் பேசாதவர்.

கார்களில் ஹனிபா பாட்டு
வைகோவுக்கு நாகூர் ஹனிபா பாட்டுக்கள் என்றால் அவ்வளவு பிடிக்குமாம். ஆரம்பக்காலங்களில் தனது காரில் ஹனிபா பாடல்களை இசைக்கவிட்டபடி அதைக் கேட்டுக்கொண்டே பயணிப்பாராம். அதேபோல் மு.க.அழகிரி மற்றும் மறைந்த மதுரை முன்னாள் ஆதினம், உள்ளிட்ட இன்னும் பலர் தங்கள் பயணங்களின் போது ஹனிபா பாடல்களை அவரது குரலுக்காகவும் உச்சரிக்கும் தமிழ் வளத்துக்காகவும் கேட்டுக்கொண்டே பயணிப்பார்களாம்.












Click it and Unblock the Notifications